தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விருமன் பட விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது…
உங்களை 5 மணியிலிருந்து கட்டி வைத்திருந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமானவர்கள் பேச வேண்டியிருந்ததால் உங்களை அமைதியாக இருக்க சொன்னேன். ஆனால், இப்பொழுது உங்களுடைய முழு அன்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இது இன்று நேற்று உறவல்ல.
25 கால உறவுகள்! அதில் போட்ட ஒரு சில பேரை நான் நான் கூற முடியும். மற்றவர்கள் தவறாக நினைக்கக் கூடாது. ஜோதிமுத்து, மனோஜ் போன்ற அனைவரும் 25 ஆண்டுகாலமாக இந்த உறவை கட்டிக் காப்பாற்றி இருப்பதை வார்த்தைகள் கூறி விட முடியாது. இந்த அன்பிற்கும் உறவிற்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ராஜாவுடைய சொந்த ஊர் இதுதான். பள்ளிக்காலத்தில் கோயம்புத்தூருக்கு விடுமுறையில் செல்வது போல இங்கும் வந்திருக்கிறேன். அப்போது நான் நடிகன் கிடையாது. ஆனால், சித்தி பையன், பெரியம்மா பையன், மாமா பையன் என்று ராஜாவுக்குத் கொடுக்கும் அதே உறவை, எனக்கும் கொடுத்தார்கள். அதை நான் ஆச்சரியம் உடன் பார்த்திருக்கிறேன். எதையும் எதிர்பாராமல் அவர்கள் கொடுக்கும் அன்பு, சாப்பாடு, பல நாட்கள் இங்கு சுற்றியது என்னால் மறக்கவே முடியாது. அவையும் அதற்கு இணையான அனுபவம் இங்கும் இருக்கிறது.
தென் தமிழ்நாட்டின் வாசல் மதுரை. மதுரை என்றாலே அழகர், வாடிவாசல், மீனாட்சி அம்மன் என்று கூறுவது போல, அச்சு அசலாக மக்களின் அன்பு கிடைப்பது எங்களுக்கு ஒரு வரம். அந்த வரத்தை அளித்த அனைவருக்கும் நன்றி.
மதுரையில் பல கதைகள் இருக்கிறது. கற்பனை கதையல்ல, நிஜத்தில் நடந்த கதையை சுவாரசியமாக கூறுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்த இயக்குனர் இமயம் ஆக முடியும் என்று பாரதிராஜா அங்கிள் எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் நமக்கு மிகப்பெரிய அடையாளம். அது மட்டுமே அவருடைய சாதனை அல்ல. அவரைப் போன்று கிராமத்திலிருந்து வந்த ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையாக இருந்திருக்கிறார்.
அவர்களுக்கு கை கொடுத்து உயர்த்தியிருக்கிறார். இன்னும் பலருக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் வீட்டில் விளையாடுவதற்கும், அவர் பையன் மனோஜ் உடன் விளையாடுவதற்கும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் அழைத்ததற்காக இங்கு வந்திருக்கிறார். அதை நான் மிகவும் உயர்வாக பார்க்கிறேன். எந்த விஷயமாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று கூறுவார். அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும்.
ஆயுத எழுத்து படத்தில் நான் உங்களுக்கு நடிக்க சொல்லித் தரவில்லை. என்னை நிறைய புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள். ஸ்கிரீன் டெஸ்ட் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் என்னை நடிக்க வைக்கவில்லை. உங்களுடைய வெளிச்சத்திலிருந்து தான் நான் வந்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஆலமரம். உங்களுடைய ஆசீர்வாதம் தான் உங்களை வழிநடத்துகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளத்தைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், நான் எந்த வட்டத்திற்குள்ளும் சிக்க மாட்டேன் என்று தன்னுடைய உயரம், புகழ், பெயரை மீண்டும் மீண்டும் மறுவரையறைப் படுத்திக் கொண்டே இருப்பவர் ஷங்கர் சார் தான். அப்போதே பான் இந்தியா படத்தை கொண்டு வந்தவர் இவர். 30 வருட காலமாக தொடர்ந்து சாதனைப் புரிவது சாதாரணமானது அல்ல. இப்பொழுது இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
அதிதி நீ ஜொலிக்கிறாய். நம்மை சுற்றியுள்ள உலகத்தை நாம் தான் உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. நீங்கள் உங்களைச் சுற்றி அழகான உலகத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். 2D அலுவலகத்திற்கு நீங்கள் வந்த நாள் முதல் அனைவருக்குமே உங்களைப் பிடித்து விட்டது. அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தீர்கள். உங்களை தண்ணீர் குடிக்கிறீர்களா? சாப்பிட்டீங்களா? என்று அனைவரையும் கேட்க வைத்தீர்கள். நீங்கள் ஒரு ஆற்றலின் மூட்டை. உங்கள் வரவு நல்வரவாகுக! உங்களுக்கான மரியாதையை இந்த சினிமா உலகம் கொடுக்கும். எங்கள் குடும்பம் சார்பாக உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறோம். அப்பா அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இந்த துறையில் உங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது.
காவல் கோட்டம், வேல்பாரி நம் தமிழர்களுடைய முக்கியமான அடையாளம். எல்லோரிடமும் எடுத்துச் சென்ற மிகச்சிறந்த படைப்பு. நண்பன் என்று கூறுவதா அல்லது ஒரு என்று கூறுவதா தெரியவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்கள் இங்கு வந்தது எங்களுக்கு கூடுதல் மதிப்பு. மதுரை மக்களின் குரல், தமிழ் மக்களின் குரல் எங்கு, எப்போது, எப்படி பதிவு செய்ய வேண்டுமோ! அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவருடன் சுவாரவசியமான பயணத்தை ஆரம்பித்துவிட்டோம். அது முக்கியமான பதிவாக இருக்கும். அது என்னவென்று இன்னொரு மேடையில் கூடிய விரைவில் கூறுகிறேன்.
பாரதிராஜா அங்கிள்,
கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை போன்ற பல படங்களில் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார். நம் முன்னாடி இருக்கும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள், அதை நாம் சந்திக்கும் விதங்கள் இவற்றை நாம் அனுபவத்தில் வாழ்ந்து இக்கட்டான சூழ்நிலையில் கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், ஒரு நல்ல படம் பார்க்கும்போது இப்படித்தான் வாழவேண்டும், உறவுகளே இப்படி தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய ஒவ்வொரு படங்களிலும் பதிவு செய்திருக்கிறார். தேவன் என்பது என்ன பட்டமா? என்று அனைவரையும் உலுக்கிப் போட்ட ஒரு கேள்வி, அதேபோல இப்படத்தில் இறுதி காட்சியில் வசனங்கள் இருக்கிறது. முத்தையாவின் வசனங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தை எடுத்தோம். அந்த வசனங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும். உங்களுக்கு ஒழுக்கம் எங்கிருந்து வந்ததென்று இப்போதுதான் தெரிகிறது. நீங்கள் டீ காப்பி கூட குடிக்க மாட்டீர்கள் என்று அலுவலகத்தில் கூறினார்கள். அதற்கான காரணத்தை இப்போது உங்கள் அப்பா அம்மா கூறிய பிறகுதான் அதை ஏன் பின்பற்றுகிறீர்கள் என்று தெரிந்தது. அதைக் கேட்ட பிறகு உங்கள் மீதான மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.
பாலா மற்றும் அமீரின் பெயரைக் கூறாமல் இந்த மேடையை விட்டு இறங்க முடியாது. எனக்கும் கார்த்திக்கும் அவர்களால் தான் அடையாளம் கிடைத்திருக்கிறது.
இந்த ஊரை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார் செல்வா. இயக்குனருடன் சேர்ந்து கதை கூறும் முக்கியமான பொறுப்பு அவருக்கு இருந்திருக்கிறது. ஜாக்கி ஒரு நாடோடி. ஒரு படம் முடிந்ததும் பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விடுவார். பைக் பயணத்தில் அலாதி பிரியம் கொண்டவர். மிகச் சிறந்த பாடகரும் கூட. எங்கள் இருவரிடமும் அவருடைய பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்போது வாடிவாசல்- இல் பயணிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். வையாபுரி அண்ணனுக்கு நன்றி. பிதாமகன் படத்தில் பாதி நடிப்பை சொல்லிக் கொடுத்தது சிங்கம்புலி அவர்கள்தான். பேரழகன் படத்திலும் சின்னாவாக நடிக்க முடிந்ததற்கு சிங்கம்புலி அண்ணா தான் காரணம். அவரைப் பார்த்துதான் சின்னாவாக நடிக்க கற்றுக் கொண்டேன்.
இளவரசு அண்ணனுடன் என் ஜி கே வில் பயணித்தது மறக்க முடியாதது. கெட்டப்பில் மீசை தாடி மாற்றாமல் அப்படியே தான் இருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார்.
எங்கள் 2D நிறுவனம் உங்களை எப்படி நடத்தியது என்று நீங்கள் வேறு ஒருவருக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை நான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் திருப்தியான, நெகிழ்வான தருணமாக இருந்தது. அதற்காக வடிவுக்கரசி அம்மாவிற்கு நன்றி.
அனல் அரசின் சண்டைக் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. சுந்தர் அருமையாக நடித்திருக்கிறார். டப்பிங்-லும் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றக் கூடிய வல்லமை சூரிக்கு இருக்கிறது. தனக்குள் இருக்கும் திறமை முழுவதையும் கொடுத்துவிடுவார். இப்படத்திலும் அதை பார்க்க முடிந்தது. வெற்றிமாறனின் இயக்கத்தில் அவர் நடிக்கும் விடுதலை படத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கருணாஸ் மாமாவிற்கு நன்றி.
இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் கொரோனா காலக்கட்டத்தில் நடந்தது. படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் கொடுக்காமல் அந்த ஊர் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மதுரை மக்களுக்கும் தேனி மக்களுக்கும் மிக்க நன்றி.
சரியாக நடிக்க தெரியாத போது, சென்னோரீட்டா பாடலில் என்னை ஓட விட்டவர் யுவன். சகோதரன் மாதிரி தான் நாங்கள் பழகி வருகிறோம். பருத்திவீரன் படத்தில் கதையே இசையும் பிரிக்க முடியாத அளவிற்கு கதையோடு இணைந்து இசையமைத்திருந்தார் யுவன். அவருடைய பயணம் இன்னும் தொடர வேண்டும்.
ரசிகர்களாகிய உங்களால் கமல் சார் எனக்கு கொடுத்த பரிசு இதோ இந்த ரோலக்ஸ் வாட்ச்.
கார்த்திக்கு முன்பே நான் நடிக்க வந்து இருந்தாலும், என்னை விட அதிகமாக சினிமாவைப் பற்றி பேசுவதும், செயல்படுவதும் கார்த்தி தான் என்று வெளிப்படையாக எந்த மேடையிலும் கூறுவேன்.
சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி. யுவன் கார்த்தி இருவருமே என்னுடைய தம்பிகள். அவர்கள் இருவரும் சினிமாவிற்கு செய்த பதிவை யாராலும் மறக்க முடியாது. என்னை விட பல மடங்கு அவர்களை கொண்டாடுவார்கள். பல விருதுகளை பெறுவார்கள்.
என் மகளுடைய படிப்பிற்காக 40 நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன். அப்போது தேசிய விருது கிடைத்ததை நான் தெரித்துக் கொள்ள மூன்று மணி நேரம் ஆனது. அதற்குள்ளேயே நீங்கள் கொண்டாடினீர்கள். அதை உங்களுடைய விருதாக பார்த்தீர்கள். கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடக்கூடிய ஊர் மதுரை. இந்த ஊரில் உங்கள் முன்பு விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடுவதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். எப்போதும் உங்களுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும்.
டெல்லியும் ரோலெக்ஸும் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
மதுரையில் நடைபெற்ற ‘விருமன்’ பட ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தின் நாயகன் நடிகர் கார்த்தி பேசியதாவது…
என்ன மாமா சௌக்கியமா?
இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவில் இருந்து மீசை தாடி இல்லாமல் இப்படித்தான் வந்திருந்தேன். அப்பொழுது எப்படி இவரை பருத்தி வீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று அமீரிடம் கேட்டார்கள். அப்பொழுது, அமீர் சார் 10 பேரை அடிக்கும் அளவிற்கு தயாரானால் தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்றார்.
என்னைப் பருத்தி வீரனாக உருவாக்கி உங்கள் முன்னாள் நிறுத்தினார். இன்றுவரை தொடர்ந்து உங்கள் அன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் வேறு வேறு விஷயங்களைத் தேடிப் போவதற்கு நம்பிக்கை கொடுக்கிறது.
கிராமத்து படங்கள் எவ்வளவு முக்கியம் என்று எல்லோரும் சொன்னார்கள். கிராமத்தில் இருக்கும் காதல் வேறு. ஒரு பெண்ணைப் பார்த்தால் இறுதிவரை அந்தப் பெண்ணுடன் தான் வாழ வேண்டும். மாற்றிக் கொண்டே இருக்க மாட்டோம். அண்ணன், தங்கை, தம்பி என்று பல சொந்தங்கள் இருக்கின்றது.
அவர்களுக்காக வாழ்வது தனி சுகம். அதை இங்கே கதை எடுத்தால் மட்டும் தான் சொல்ல முடிகிறது. கிராமத்து படங்களை நிறைய எடுக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு முத்தையா சார் மாதிரி ஆட்கள் தான் உந்துதல். பருத்தி வீரனுக்குப் பிறகு யாராவது கிராமத்துக் கதை கூறினால் பயம் இருக்கும். கொம்பன் கதை கேட்கும்போது தான் அந்த நம்பிக்கை திரும்ப வந்தது. அதன் வெற்றிக்குப் பிறகு இந்த கதை கூறினார்.
எல்லா கதையிலும் கதாநாயகனுக்கு அப்பா தான் நாயகனாக இருப்பார். ஆனால், இந்த கதையில் அப்பா தான் முதல் வில்லன்.
யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும் ஒருவன், அப்பனே தப்பு செய்தாலும் விடமாட்டான் என்று கதை கூறினார். அந்த வரியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அப்பா யார் என்று கேட்டால், பிரகாஷ்ராஜ் தவிர வேறு ஆள் கிடையாது. அவரை எதிர்த்து நிற்கும் போது தனி சுகம் இருக்கும். அது அவருக்கும் பிடிக்கும்.
ஒரு வேலை செய்தால் பணம் மட்டுமே சம்பளம் இல்லை என்று கூறுவார். அவர் எல்லா படங்களுக்கும் சம்பளம் வாங்குவதில்லை. அதேபோல், சில படங்கள் நமக்கு அனுபவத்தை கொடுக்கும் என்று கூறுவார்.
அப்படி இரசித்து பணியாற்றக் கூடியவருடன் நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ராஜ்கிரண் சார் போனில் அழைத்து இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினார். அவர் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய விஷயம்.
இந்த விழாவை மதுரையில் வைத்து உங்களுக்கு எல்லாம் நேரில் நன்றி சொல்ல ஆசைப்பட்டு ஏற்பாடு செய்தோம்.
ஒளிப்பதிவாளர் சிவக்குமார் ஒவ்வொரு நாளும் மெனக்கெட்டார். அவரது குழந்தை பிறந்தும் கூட, இரண்டு மூன்று மாதங்கள் இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடித்து விட்டுத்தான் சென்றார்.
வடிவுக்கரசி அம்மா உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பாரதிராஜா அங்கிள் இங்கு வந்திருக்கிறார். பக்கத்து வீடான அவர் வீட்டில்தான் தான் நாங்கள் வளர்ந்தோம்.
இன்றளவும் நிலவாகவும் நட்சத்திரமாகவும் நாங்கள் பார்ப்பது அவருடைய படங்களை தான். முதல் மரியாதை படத்தை முறியடிக்கும் படியான ஒரு சிறந்த படத்தை நம்மால் எடுக்க முடியாதா என்று முத்தையாவிடம் கேட்டேன். கண்டிப்பாக எடுக்கிறோம். அப்போது தான் அங்கிள் உங்களுக்கு மரியாதை உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்.
அதேபோல், ஷங்கர் சார் யாரை விஞ்சுவதற்காக படம் எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு ஒரு படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் பாதியாவது எடுக்க முடியும்.
முத்தையா அதிதிக்கு சாதாரணமாக வாய்ப்பு கொடுத்து விடவில்லை. பல கோணங்களிலும் ஸ்க்ரீன் டெஸ்ட் வைத்துதான் இந்த படத்திற்கு அழகான நாயகி கிடைத்துவிட்டார் என்று தேர்வு செய்தார். சினிமாத்துறையில் ஒரு பெண்ணை எளிதில் அனுமதிக்கமாட்டார்கள்.
நான் நடிக்க வரும்போதே என் அப்பா வேண்டாம் என்றார். அப்படி இருக்கும்போது தன் பெண்ணை நடிக்க அனுமதித்த ஷங்கர் சாருக்கு சினிமாவின் மீது எந்த அளவுக்கு காதல் இருக்கும்? சினிமா துறையின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்?
ஒரு பெண் நடிக்க வந்தால் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்கள் அப்பா கூறுவார். எம்ஜிஆர் அவர்கள் மற்றும் விஜயகாந்த் அவர்கள் பெண்களை எப்படி பார்த்துக் கொள்வார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தான் எங்களுக்கு உத்வேகம்.
படிப்பு வரவில்லை என்றால் தான் சினிமாவிற்கு வருவார்கள் என்று கூறுவார்கள். ஆனால், அதிதி மருத்துவம் படித்துவிட்டு இந்த துறையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
‘ஊரோரம் புளியமரம்’ என்ற பாடல் வந்த புதிதில் இரவு ஒரு மணிக்கு, BAR பாரில் இருந்து போன் செய்து உங்கள் பாட்டு தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். இப்பொழுது பகலிலும் போன் செய்து உங்கள் பாட்டுதான் ஓடுகிறது கேட்கின்றதா என்கிறார்கள். எனக்கு மிகப்பெரிய அடையாளம். அதைக் கொடுத்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி.
அதன் பிறகு பையா, நான் மகான் அல்ல என்று என் எல்லா படங்களுக்கும் அவரே இசையமைத்தார். இந்த படம் எடுக்கும்போதும் கிராமத்துக் கதை என்பதால் யுவனை விட்டு விடக்கூடாது என்று நினைத்தோம். கஞ்சா பூ கண்ணாலே பாடல் மாபெரும் வெற்றி பெறும்.
ரீ-ரெக்கார்டிங்கில் படம் பிளாக்பஸ்டர் ஆவது உங்கள் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால், சிறப்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளது என்று கூறினேன். என்னுடைய பால்ய சினேகிதன் மனோஜ்.
பாரதிராஜா அங்கிள் பையன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இங்கு அவர் வரவில்லை. ஆனால், அவரிடம் எப்படி கேட்பது என்று தயங்கி கொண்டே இருந்தேன். உன் படம் என்றால் நான் நடிக்க மாட்டேனா என்று வந்துவிட்டார். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு அண்ணனுடன் இந்த படத்தில் இணைகிறேன். இன்று விமானத்தில் வரும்போது இந்த படத்தை ஏன் தயாரித்தீர்கள்? என்று கேட்டேன். சட்டென்று உன் மீது இருந்த நம்பிக்கை தான் என்று கூறிவிட்டார்.
இயக்குனர் முத்தையா எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு முடிந்து விட்டால் இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் ஒரே மனிதர் இவர்தான். சினிமா, குடும்பம், (ஆரோக்கியம்) உடற்பயிற்சிக்கூடம் இம்மூன்றுக்கும் தான் முக்கியத்துவம் அளிப்பார். இதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. மிகச் சிறந்த உழைப்பாளி. கண்கலங்கும் படியான காட்சிகள் கூறுவார். அவருக்காகவே இந்தப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் அண்ணனும் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் இப்படம் வெற்றியடைய வேண்டும்.
பருத்தி வீரனுக்குப் பிறகு, மதுரையில் 60 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தினோம். இங்கேயே வாழ்ந்ததற்கான திருப்தி கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும் பருத்திவீரனின் சாயல் இருக்கக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருப்பேன். ஆனால், இந்த படத்தில் தவிர்க்க முடியவில்லை, லோக்கல் என்றாலே வேட்டியை தூக்கி மடித்து கட்ட தான் வருகிறது. சட்டை கசங்கி இருக்கிறது, தலை கலைந்து இருக்கிறதா என்று பார்க்க தேவையில்லை. அப்படியே தரையில் உட்கார்ந்து நடிக்கலாம்.
அழுக்கா அழகா இருக்கிற ஒரே ஆளு நீதான் என்று சூரி கூறுவர். இந்த படத்தில் அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிகவும் புதிதாக தெரிவார். மதுரை மண்ணுக்கு நன்றி. இந்த படம் வெற்றியடைய மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
Suriya speech at Vuruman Audio and Trailer launch