சோப் விளம்பரமா மதம்.? மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வரும் படமே ‘நிலை மறந்தவன்’ – BJP ராஜா

சோப் விளம்பரமா மதம்.? மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வரும் படமே ‘நிலை மறந்தவன்’ – BJP ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாகவும் அவரது மனைவி நஸ்ரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க திமிரு படத்தில் நடித்த விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி மூட நம்பிக்கைகளால் அவர்கள் உயிருடன் விளையாடும் மத வியாபார கும்பலை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. .

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ட்ரான்ஸ் என்கிற படம் தான் தற்போது சிவமணியின் வசன உருவாக்கத்தில் தமிழுக்கேற்றபடி நிலை மறந்தவன் என்கிற பெயரில் தயாராகி இருக்கிறது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

மதமாற்றத்துக்கு எதிராகவும் மத வியாபாரிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களான ஹெச்.ராஜா, அஸ்வத்தாமன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக பிரமுகர் கல்யாண ராமன், பத்திரிகையாளர் பிரபாகர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

படத்தின் வசனகர்த்தா சிவமணி பேசும்போது….

, “பிராந்திய மொழிகளில் நல்ல நல்ல படங்கள் வருகின்றன. அதை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அந்த வகையில் மலையாளத்திலிருந்து இந்த படத்தை தமிழுக்கு மாற்றி இருந்தாலும் எந்த மாற்றங்களும் செய்யாமல் அதேசமயம் தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் விதமாக வசனங்களை எழுதியுள்ளேன்” என்று கூறினார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசும்போது,…

“கேரளாவில் இப்படி ஒரு படத்தை தயாரிப்பது சாத்தியம் என்கிறபோது, தமிழில் இப்படி தயாரிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற ஒரு படம் தமிழில் வரவேண்டும் என நினைத்தேன். அதற்கேற்றவாறு இந்த நிலை மறந்தவன் படம் வெளியாக இருக்கிறது இயேசுவுக்கோ கிறிஸ்துவிற்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. அவற்றை வைத்து மத வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே எதிரானவர்கள்.. பீஸ்ட் படத்தில் காவியை கிழித்துக்கொண்டு ஹீரோ வருவது போல நாங்கள் எந்த மதத்தையும் கிழிப்பதற்கு வரவில்லை.

தமிழ் சினிமாவில் இந்துமத கருத்துக்களை முன் வைத்து படம் எடுப்பதற்கு ஆதரவு கிடைக்காது. சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் வ.உ.சி படத்தை வைத்திருந்தார்கள்.. பார்ப்பதற்கே பெருமையாக இருந்தது அந்த வகையில் சமீப காலமாக இந்திய இந்து தேசிய கருத்துக்களுக்கு மிகப்பெரிய மரியாதை உருவாகி வருகிறது இதை கிறிஸ்துவ மிஷனரிகள் தடுக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழக முதல்வர் சினிமாவையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்கிறார்.. இவர் என்ன சூப்பர் ஸ்டாரா இப்படி சொல்லிக்கொள்வதற்கு சமீபத்தில் காஷ்மீரி பைல்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த நிலை மறந்தவன் படமும் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்

பாஜக தலைவர் ஹெச்..ராஜா பேசும்போது…

“தமிழகத்தின் மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டுள்ள படம் என்று இந்த நிலை மறந்தவன் படத்தை சொல்லலாம். விவேகானந்தர் கூறியது போல மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து யுத்தம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இந்த சோப்பை விட அந்த சோப் உயர்ந்தது என சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு காவல்துறை அதிகாரியிடம் பேசும்போது, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மத்தியில் இந்துக்கள் சிறுபான்மையினர் தான் என்கிற அதிர்ச்சித் தகவலை கூறினார்..

அதேபோல இந்தப்படத்தில் ஒரு பாதிரியார் கதாபாத்திரம் பேசும்போது அரசாங்கத்தில் நமக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள், அதனால் பிரச்சனை இல்லை என்று கூறுவது தான் தற்போது நிஜத்திலும் நடந்து வருகிறது..

அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் விலைக்கு வாங்கி மதப்பிரச்சாரம் என்கிற பெயரில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்க முயற்சித்து வருகிறார்கள்.. அந்தவகையில் இந்த படம் உண்மையை, நாட்டில் நடப்பதை அப்படியே சொல்கின்ற ஒரு படம்தான்.

தமிழக மக்களுக்கு பாடமாக இந்த படம் வந்துள்ளது.. காஷ்மீரில் பைல்ஸ் போல கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளை மையப்படுத்தி தமிழ்நாடு பைல்ஸ் என்கிற படம் எடுங்கள் என்று நான் கேட்டுவிட்டு போகிறேன்..

தொடர்ந்து ஆன்மீக தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.. காஷ்மீரி பைல்ஸ் படத்திற்கு மக்கள் ஆதரவு எப்படி கிடைத்ததோ, அதே போல இந்த நிலை மறந்தவன் படத்திற்கும் மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். மக்களின் பயத்தை தெளிய வைப்பதற்காகவே இந்த படம் உருவாகியுள்ளது என்று சொல்லலாம்” என கூறினார்.

மேலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஹெச்.ராஜ…

“நாங்கள் கிறிஸ்துவையும் கிறிஸ்தவரையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை அவர்கள் அதை வியாபாரமாக்கும்போது, மூடநம்பிக்கைகளை திணிக்கும்போது அதற்கெதிராக குரல் கொடுக்கிறோம்.

இதேபோன்று அப்போதே ‘பராசக்தி’ படத்தில் இந்து மதத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்க வழக்கங்களை சாடியபோது இந்த கேள்வி அப்போது எழவில்லையே.. அந்தவகையில் மத வியாபாரிகளை வெளிப்படுத்தும் படம் தான். இந்த நிலை மறந்தவன்.

அதனால் இந்த படத்திற்கு எதிர்ப்பு என்பது தேவையில்லாத ஒன்று.. தன்நிலை மறந்தவன் தான் இந்தப் படத்தை எதிர்ப்பான். மதத்தை விற்காதீர்கள்.. அச்சுறுத்தி ஆசைவார்த்தை காட்டி மதம் மாற்றுவது தவறு என்கிற கருத்துக்களைத் தான் இந்த படம் கூறுகிறது.. அயோத்தியா மண்டபம் விவகாரத்தை இதனுடன் சேர்த்து பேச வேண்டாம் காரணம் அங்கே எந்த மத வியாபாரமும் நடக்கவில்லை என்றார்..

மேலும் இந்த படத்தில் ஜோதிகா, சற்குணம் மோகன் என்பது போன்ற பிரபலமானவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்று ஹெச்.ராஜாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இதற்கு முன்பு வெளியான ஒரு படத்தில் ஒரு காலண்டரில் அக்னிகுண்டம் படம் இடம்பெற்றபோது எத்தனையோ காலண்டர்களில் இதுபோன்று அக்னிகுண்டம் இடம்பெற்றிருந்தது அதில் இதுவும் ஒன்று என்று பதில் சொன்னார்கள் அல்லவா..? அதேபோல எத்தனையோ பேருக்கு ஜோதிகா என்று பெயர் இருக்கும் அதில் இதுவும் ஒன்று என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்

பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அர்ஜுன் சம்பத், “தமிழ்சினிமா திமுகவின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது அவர்கள் வசம் தமிழ் சினிமாவை எடுத்துக்கொள்கிறார்கள். பீஸ்ட் படம் கூட சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால்தான் இந்த அளவிற்கு வெளியாகி உள்ளது. திமுகவை விமர்சித்து பேசக்கூடாது அவற்றை விமர்சிப்பது போல் படம் எடுக்கக் கூடாது என்கிறார்கள். மன்னனே தொழில் செய்தால் மக்கள் பிச்சை எடுப்பார்கள் என்பது போல கடந்த காலத்தில் சினிமா அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததை ஞாபகப்படுத்திகொண்டு, இப்போதே விழிப்புணர்வு ஏற்பட்டு தன்னை மாற்றிக்கொண்டால் திமுகவிற்கு நல்லது” என்று கூறினார்

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு ; தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்

இயக்கம் ; அன்வர் ரஷீத்

இசை ; ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம்

ஒளிப்பதிவு ; அமல் நீரத்

படத்தொகுப்பு ; பிரவீன் பிரபாகர்

வசனம் ; சிவமணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

H Raja speech at Nilai Marandhavan trailer launch

இந்திய சினிமாவிற்கு முன்னோடி தமிழ் – அமீர்.; தமிழ் சினிமா பின்தங்கியிருக்கு – அருண்பாண்டியன்.; ஒரே மேடையில் பிரபலங்கள் மோதல்

இந்திய சினிமாவிற்கு முன்னோடி தமிழ் – அமீர்.; தமிழ் சினிமா பின்தங்கியிருக்கு – அருண்பாண்டியன்.; ஒரே மேடையில் பிரபலங்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் பேசுகையில்,” எனக்கு இரண்டு பெண்கள். ஒரு மகன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பள்ளியில் படிக்கிறார்கள். எங்கள் அனைவருக்கும் ஒரே இணைப்பு செல்போன் தான். எப்போதும் நான் என் கையில் கடிகாரத்தை கட்டிக்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை நிறைவு செய்யவேண்டும் என்று அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து கொண்டிருப்பேன். வெளியில் செல்ல வேண்டும் என்றால் காரில் தான் செல்வேன். காரை மிகவும் ரசித்து ஓட்டுவேன். கார் மீது ஒரு சிறிய கீறல் கூட விழாமல் பாதுகாப்பாக பராமரிப்பேன். கடந்த ஓராண்டிற்கு முன் எதிர்பாராதவிதமாக பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. நான் காரை ஓட்டும் போது எப்பொழுதும் சீட்பெல்ட் அணிந்திருப்பேன். அதன் காரணமாகத்தான் அந்த விபத்திற்கு பின்னரும் உயிர் பிழைத்தேன். அதன் பிறகு இயக்குநரை சந்தித்தேன். ஆதார் படத்தின் கதையை நான் தயாரிப்பேன் என்று நினைக்கவில்லை. இதற்காகத்தான் நான் விபத்தில் உயிர் பிழைத்தேனோ..! என இயக்குநரிடம் கூறியதுண்டு. இந்தப்படம் மிகவும் நேர்த்தியாக உருவாகி இருக்கிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசுகையில்,” ‌ 18 வருடங்களுக்கு பிறகு தான் ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நான் மீண்டும் நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு என்னைத்தேடி எட்டு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. அதில் எனக்கு இரண்டே இரண்டு படத்தின் கதைதான் பிடித்தது. அதில் ஒன்று ஆதார். அதன்பிறகு இயக்குநரிடம் இந்த படத்தில் வேறு யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். கருணாஸ் என்றார். கருணாசுக்கு போன் செய்து ராம்நாத் கதையை சொன்னார். நன்றாக இருந்தது. அவர் சொன்னதை சொன்னவிதத்தில் எடுத்து விடுவாரா? என கேட்டேன். அவர்தான் முழு நம்பிக்கையுடன் எடுத்துவிடுவார் என்றார். கதையைச் சொன்ன மாதிரி எடுத்து விட்டால், நான் என் சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை சலுகையாக தருகிறேன் என்றேன். படம் மிக நேர்த்தியாக உருவாகியிருக்கிறது.‌

இங்கு மேடையில் இயக்குநர் சரவணன் பேசும்போது,‘ தமிழ் சினிமாவின் பொற்காலம் இது’ என தவறான தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குநர் பாரதிராஜா படம் இயக்கிய காலம்…நாங்கள் நடித்த காலம்.. என அதனைத்தான் குறிப்பிடவேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது. தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் வேற்று மொழி படங்கள் தான் அதிக வசூலை குவிக்கிறது. சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டும் படத்திற்காக செலவழிக்கவில்லை. தங்களுக்காக செலவழித்து கொண்டனர். தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி? படத்தை உருவாக்க இயலும். இந்த மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்’. நாங்கள் படம் எடுக்கும் பொழுது 10% தான் சம்பளம், மீதி 90% படத் தயாரிப்பிற்காக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமா கதைகள் பட உருவாக்கத்தால் வென்றது
.
‘ஆதார் ’படத்தில் கருணாஸ் சம்பளம் வாங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் யாரும் சந்திக்கவே இல்லை. இங்குதான் சந்திக்கிறோம். தமிழ் சினிமா ஒரு மோசமான திரை உலகம். இருப்பினும் இந்த சினிமா மீது நம்பிக்கை வைத்து, புதிய தயாரிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் என்றால், அவரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்திற்கு நாங்கள் உண்மையாக உழைத்திருக்கிறோம். அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ” அருண்பாண்டியன் அவர்கள் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று அது. இந்த ஆதார் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக அவருக்கும், தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் இயக்குநரான ராம்நாத்,‘ ஆதார்’ படத்தின் பின்னணி இசைக்காக மட்டுமே என்னை முதலில் அணுகினார். இந்த படத்தில் பாடல்கள் இல்லையா? என கேட்டேன். இல்லை என்று பதிலளித்துவிட்டு, ‘இது ஒரு லைவ்வான படம்.’ அதனால் பாடல்கள் இடம்பெறாது என்றார். அவரிடம் ‘திருநாள்’ படத்தில், ‘பழைய சோறு பச்சை மிளகா..’ என்ற வெற்றி பெற்ற பாடலை அளித்திருக்கிறோம். ரசிகர்கள் மீண்டும் நம்மிடம் எதிர்பார்ப்பார்கள் என எடுத்துக் கூறினேன்.

இந்தப்படத்தில் மூன்று மாதத்திற்கான பின்னணி இசை இருந்தது. இயக்குநரிடம் இந்த இடத்தில் ஒரு பாடலை வைக்கலாமா? என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் மெட்டமைத்து பாடலை உருவாக்குங்கள். பிடித்திருந்தால் இடம்பெற வைக்கிறேன் என்றார். அந்தப் பாடல்தான் ‘தேன் மிட்டாய் மாங்காய் துண்டு..’. அந்த பாடலை கேட்டுவிட்டு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லி வைத்திருக்கிறார். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நானும் கருணாசும் இணைந்து கமர்சியல் பாடல்களை உருவாக்கி இருக்கிறோம். முதன்முதலாக இது போன்ற எமோஷனல் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். நிச்சயமாக வெற்றி பெறும் என நம்புகிறேன்’: என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், ” பொதுவாக ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் போது, அந்த படக்குழுவினருடன் நமக்கு எந்த தொடர்பும் பெரிதாக இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் பணியாற்றியவர்களுக்கும், மேடையில் வீற்றிருப்பவர்களுக்கும் எனக்கும் நல்லதொரு புரிதலுடன் கூடிய தொடர்பு இருக்கிறது. இயக்குநர் ராம்நாத் அவருடைய முதல் படமான ‘திருநாள்’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நீங்கள்தான் நாயகனாக நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஒரு முதல் பட இயக்குநர் கதையை சொன்னாலும், அன்றைக்கு அதில் நடிக்க முடியாத ஒரு சூழல் இருந்தது. ‘ஆதார்’ படத்தின் கதையையும் என்னிடம் முதலில் சொன்னார். கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. யார் நடிக்கிறார்கள்? என கேட்டபோது, இயக்குநர் இமயம் பாரதிராஜா என சொன்னார். சரி பாரதிராஜாவுடன் நடித்து விடலாம் என திட்டமிட்டேன். ஏனெனில் தமிழ் சினிமாவை திசை மாற்றிய கலைஞர்களில் மிச்சமிருக்கும் ஒரே கலைஞன் அவர்தான். அவரிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

அவரை சந்தித்த போது நீங்கள் நினைக்கும் பாரதிராஜா அங்கு இல்லை. அவர் குற்ற பரம்பரை என்ற திரைக்கதையில் பேய்க்காமன் என்ற ஒரு கதாபாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். வயசான தாத்தா போன்ற அந்த கதாபாத்திரத்தில் நடித்து காட்டினார். அந்த நடிப்பு என் கண்ணில் அப்படியே இன்னும் நிற்கிறது. ஒரு மார்லன் பிராண்டோ, ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு எத்தகைய நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ…! அதே போன்றதொரு நடிப்பை அப்போது வெளிப்படுத்தினார். பாரதிராஜாவால் தற்போது அதே போல் நடிக்க இயலுமா எனத் தெரியாது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அதனை செய்து காட்டினார். அதற்குப் பிறகு என்னிடம் பேசும்பொழுது சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தீர்மானித்திருக்கிறேன் என்றார். எப்போதும் சினிமாவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். அவர் மனதளவில் இன்றும் இளைஞர் தான். தற்போது கூட உடல் சோர்வாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன் என்றார். இது போன்ற ஒரு கலைஞருடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு இரண்டாவது முறையும் நழுவி போனது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தேன் மிட்டாய் மாங்காய் துண்டு..’ என்ற பாடலை எழுதிய கவிஞர் யுரேகாவைப் பற்றி சொன்னார்கள். அவருடன் நான் மதுரையில் ஒன்றாக சுற்றித் திரிந்த காலகட்டம் உண்டு.

இந்தப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தபோது நாம் இயக்குநர் ராம்நாத்தை தொடர்ந்து பரிசோதிக்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்பட்டது. தற்போது அவரது இயக்கத்தில் கதையே கேட்காமல் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகி இருக்கிறது. இயக்குநர் ராம்நாத்திடம் ஒரு வேகம் இருக்கிறது. எப்படியாவது ஒரு நல்ல விசயத்தை செய்து விட வேண்டும் என்று எண்ணுகிறார். எந்த இடத்தை நோக்கி செல்ல வேண்டுமோ.. அதே நோக்கி செல்வதில் குறியாக இருக்கிறார். அதற்கு உண்டான தகுதி இந்த ‘ஆதார்’ படத்தில் இருக்கிறது.

நடிகை இனியாவுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு இரண்டாவது முறையும் தவறியிருக்கிறது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு அவரது தந்தையும், இசையமைப்பாளருமான தேவா ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது ‘மெலோடியில் கவனம் செலுத்தி உருவாக்கு. அதுதான் உன் அடையாளத்தை உயர்த்தும்’ என்றார். தேவா சரியாகத்தான் கணித்திருக்கிறார். அதனால் ஸ்ரீகாந்த் தேவா தொடர்ந்து மெலோடியான பாடல்களை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அருண்பாண்டியன் பேசும்போது நிறைய புள்ளி விவரங்களை சொல்லிவிட்டு, தமிழ் சினிமா தற்போது பின் தங்கி இருக்கிறது என குறிப்பிட்டார். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 90% அல்லது 80% சம்பளமாக தருகிறார்கள். தர வேண்டியிருக்கிறது என சொன்னார். ஏன் கொடுக்கிறார்கள் என்பதை நான் கேட்கவில்லை. ஆனால் அவர் பேசும்போது ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அதை தவறுதலாகத் தான் பயன்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன். ‘தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கிறது’ என சொன்னார். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவிற்கே புதிய பாணியிலான சினிமாவைக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா. ஒருநாளும் தமிழ் சினிமா பின் தங்காது. ‘ஆர் ஆர் ஆர்’, ‘கே ஜி எஃப்’ போன்ற படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள். ஏனென்றால் நாங்கள் அந்த காலத்திலேயே ‘சந்திரலேகா’ என்ற பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்கிறோம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படைப்புகளுக்கு நிகராக இதுவரை வேறு எந்த மொழிப் படங்களும் உருவாகவில்லை. சமூக படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ ஈடு இணை இல்லை. அதனால் தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி தான். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வணிக சினிமாவாக மாறும்போது மாற்றங்கள் ஏற்படும். ‘16 வயதினிலே’, ‘கிழக்கு சீமையிலே’ போன்ற படங்கள் வெளியான போதும், வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒருபோதும் இவை வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் பணியாற்றிய கலைஞர்கள் தான் இன்று வேற்று மொழிப்படங்களில் பணியாற்றுகிறார்கள். இயக்குநர் ராஜமவுலி அவர்களே ஆர் ஆர் ஆர் படத்தின் விளம்பர நிகழ்வில்,“ தமிழ்சினிமா எங்களது தாய்வீடு என்று சொல்லியிருக்கிறார்.. இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ்சினிமா பிரமிப்பை தருகிறது.” என்றும் சொன்னார். அதனால் தமிழ் சினிமாவில் முன்னேற்றத்திற்கு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்கள் என்றைக்கும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

‘நந்தா’ படத்தில் காமெடி நடிகராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து நடிகர் கருணாசை எனக்குத் தெரியும். நகைச்சுவை நடிகராக வளர்ந்து, ஒரு அரசியல் கட்சியை தொடங்கி, அதன் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு சமூக விசயங்களில் கலந்து கொண்டாலும் கருணாசின் முகத்திற்கு திரையில் குணச்சித்திர வேடத்திற்கு ஒரு வெள்ளந்தியான… ஒரு எதார்த்தமான மனிதருக்கு… அப்படியே நூறு சதம் பொருந்துவார். அது இந்த ‘ஆதார்’ படத்தில் முழுமையாக தெரிகிறது. இந்தப் படத்தில் மட்டுமல்ல ‘சங்க தலைவன்’ என்ற ஒரு படத்திலும் கருணாஸ் நடித்திருந்தார். அந்தப் படத்தை வெளியிட்ட வெற்றிமாறனிடம் படத்தை விளம்பரப்படுத்தும் போது, ‘கருணாசின் முகத்தையும் பெரிதாக இடம் பெற வையுங்கள். படம் ஓடும்’ என தெரிவித்தேன். அந்தப் படத்தில் கருணாஸ் பிரமாதமாக நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் நடிகர் நாகேஷிற்கு பிறகு மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் கருணாஸ் தான். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகை இனியா பேசுகையில், ” அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆதார் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த படத்தில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மிகவும் அழுத்தமான கதாபாத்திரம். சில வசனங்களை பேசியிருக்கிறேன். அந்த வசனங்களை அழுத்தி வித்தியாசமாக உச்சரிக்க வேண்டும் என்பதையும், அதன் அவசியத்தையும் இயக்குநர் ராம்நாத் சொன்னார். அதன்பிறகு அவர் எதிர்பார்த்தபடி பேசி நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் என்னை சந்திக்க தோழி ஒருவர் வருகை தந்தார். அவர் என்னை பார்த்துவிட்டு இதுவரை இல்லாத புது இனியாவாக இருக்கிறாய் என்று குறிப்பிட்டார். இந்தப்படத்தில் என்னைப் போலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது. உடன் நடித்த நடிகர் கருணாஸ் படப்பிடிப்பு தளத்திலும் கூட சினிமாவை பற்றியே பேசிக்கொண்டிருப்பார். பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில் நடிக்கத் தேர்வு செய்ததற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அண்மை காலமாக நான் நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினரான இயக்குனர் பாரதிராஜா பற்றி ஒரு விசயத்தை சொல்லியாக வேண்டும். ‘வாகை சூடவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்ட போது,‘ நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை அறிமுகமாக இருக்கிறார்’ என பாராட்டினார். அவர் இந்த வார்த்தை எனக்கு ஒரு ஆஸ்கார் விருது போல் இன்றும் பசுமையாக மனதில் நிற்கிறது. அவருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும், அவரைப் போன்ற மூத்த படைப்பாளிகளுடன் பழகுவதற்கு கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிராஜா சார் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. ஆனால் அது நழுவி போனது. எப்படியாவது அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நீங்கள் மீண்டும் படத்தை இயக்கினால் எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆதார் திரைப்படம் வித்தியாசமான முயற்சி. ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசுகையில்,” முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏனெனில் நான்தான் பினாமி பெயரில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என தகவல்கள் பரவியிருக்கிறது. கூவம் என்றால் நாறும். அதிலும் கூவத்தூர் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் தவறு. அதே தருணத்தில் இவர்களை திருத்துவது என் வேலை அல்ல. அதற்கான கால நேரமும் எனக்கு இல்லை.

ராம்நாத்தின் ‘ஆதார்’ கதையை கேட்டு, அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளார்கள். அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அமீர் அண்ணன் என்னை வாழ்த்தி பேசியது மறக்க முடியாத தருணமாக நினைக்கிறேன். அமீர் இயக்கத்தில் உருவான ராம் படத்தில் நான்தான் நடிக்க ஒப்பந்தமானேன். இதற்காக சென்னை துறைமுகம் வரை சென்று போட்டோசூட்டிலும் கலந்து கொண்டேன். அதன் பிறகு அவர்கள் இருவரும் நண்பர்கள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் மூன்றாம் மனிதராக வேடிக்கை பார்த்திருக்க வேண்டும் ஆனால் சற்று உரிமை எடுத்துக்கொண்டு, உள்ளே புகுந்து சிலவற்றை பேசினேன். அது தவறாக முடிந்துவிட்டது. உடன் இருந்தவர்களும் எனக்கு சரியான புத்திமதியை எடுத்துரைக்கவில்லை. இதனால் எனக்கு கிடைத்த வாய்ப்பு என்னைப்போன்ற மற்றொரு எளிய மனிதனுக்கு கிடைத்தது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். இயக்குநர் அமீருடன் பணியாற்றவில்லை என்ற வருத்தம் என்னுள் இருந்தது. ஆனால் இன்று அவர் என்னை பாராட்டி பேசியது. அதிலும் மறைந்த நடிகர் நாகேஷ் அவருடன் ஒப்பிட்டு பேசியது என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.

இந்தப் படத்தில் பாரதிராஜா நடிக்க வேண்டியதிருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இந்த தருணத்தில் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா சொன்ன ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது. ‘ஒரு நல்ல சினிமா தனக்கான தொழில்நுட்ப கலைஞர்களையும், தனக்கான நடிகர்களையும் தானே தேடிக்கொள்ளும்’ என்பார். அது இந்தப் படத்தில் முழுமையாக நிறைவேறியது.

ஏராளமானவர்களுக்கு ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் சிம்ரன் தான் நாயகி என தெரியாது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிம்ரனை தான் எனக்கு நாயகியாக அளித்தார்கள். ஆனால் நான் என் தகுதிக்கு சிம்ரன் வேண்டாம் என உறுதியாக கூறினேன். அவர்கள் நடித்திருந்தால் இந்த படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்காது. ஏனெனில் என்னைப்போன்ற கதாபாத்திரத்திற்கு ஆவரேஜான பெண்ணே அழகாக இருப்பார். அந்தக் கதைக்கு அவ்வளவு பெரிய நாயகியை நடிக்க வைத்தால், ரசிகர்களே சிம்ரன் ஓடி விடுவார் என்று நினைத்து விடுவார்கள். அதனால் சிம்ரன் வேண்டாம் என உறுதியாக முடிவெடுத்து, வேறு ஒருவரை நடிக்க வைத்தேன். இது எப்படி பொருத்தமான முடிவாக இருந்து படத்தை வெற்றி பெற செய்ததோ.. அதேபோல் இந்த படத்திலும் இந்த கதை தனக்கான நடிகர்களை தேர்வு செய்து கொண்டது.

பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனத்தை முன் வைப்பார்கள். அதற்காக வருத்தப்பட்டு பதிலளிப்பதை விட நடப்பதை எதிர்கொள்ள வேண்டும். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன் நந்தா படத்தின் படப்பிடிப்பை இங்குதான் அரங்கம் அமைத்து நடத்தினார்கள். ஆனால் இன்று இந்த இடம் வேறு ஒருவரின் கைகளுக்கு மாறி விட்டது. ஆனால் 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் நான் நடித்த ஒரு படத்தின் இசை வெளியீடு நடைபெறுகிறது என்றால், உண்மையிலேயே எனக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன்.

எனக்கு இருந்த சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் இந்த சினிமாதான் நிறைவேற்றியது. அதனால் தற்போது எனக்கு யார் மீதும் பொறாமையோ.. மனவருத்தமோ கிடையாது. சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்தேன். லாபத்தையும் பார்த்தேன். நஷ்டத்தையும் பார்த்தேன். சினிமாவில் நான் நிறைய கஷ்டங்களும் லாபங்களும் தோல்விகளும் சந்தித்தாலும் சினிமா என்னை ஒருபோதும் கைவிடவில்லை. நான் சினிமாவுக்கு உண்மையாக இருந்தேன். அதனை அளவுகடந்து நேசித்தேன். நேசித்தும் வருகிறேன். ‘சேது’ படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் அந்த படம் வெளிவருவதற்கு நான் கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தப்படத்தின் வெளியீட்டுக்காக உழைத்ததால், இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் சினிமாவில் நீ என்ன சம்பாதித்தாய்? என்று யாராவது என்னைக் கேட்டால், இந்த சினிமாவில் நான் ராம்நாத் என்ற ஒரு இயக்குநரை நண்பராக சம்பாதிக்கிறேன் என்று உறுதியாக சொல்வேன் நன்றி.” என்றார்.

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் பேசுகையில், ” குறும்படம் ஒன்றிலிருந்து ‘ஆதார்’ என்ற ரியால்டி ஃபிலிமை இயக்குவதற்கான ஆற்றலையும், உந்துதலையும் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட பார்த்திபன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி. ‘சினிமா டைரக்டருக்கான மீடியம்’ என என்னுள் ஆழமாக விதைத்த இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு இத்தருணத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் இந்த படைப்பை கண்டிருந்தால் நிச்சயம் பாராட்டியிருந்தார். திரையில் எதனை பேச வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டாரோ.. அதனை நான் இந்த படத்தில் ஓரளவு பேசி இருப்பதாகவே நினைக்கிறேன். 2016 ஆண்டிற்குப் பிறகு நான் ‘ஆதார்’ கதையை மட்டுமே தயார் செய்தேன். இது ஒரு நான் லீனியர் பாணியிலான திரைக்கதை.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை நேரில் சந்தித்து, இந்த கதையை சொன்னேன். கதையைக் கேட்டுவிட்டு சிலாகித்து பாராட்டினார். எப்படி இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை யோசித்தாய்? எப்படி இதனை திரைக்கதையாக எழுத முடிந்தது? என் தோளில் தட்டிக் கொடுத்தார். தற்போது இந்தப் படத்தில் அருண்பாண்டியன் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். அதன் பிறகு பல சந்தர்ப்பங்களிலும் இயக்குநர் பாரதிராஜா இந்த கதை குறித்து என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது காலச் சூழலில் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை.

அதன் பிறகு இயக்குநர் அமீர் அவர்களிடம் தகுதியை விவரித்து இருக்கிறேன். திருநாள் படத்தின் கதையின் நாயகனாக ஒரு கட்டத்தில் அமீர் தான் இருந்தார். அவரிடம் கதையை சொன்னபோது சற்று காத்திருக்குமாறு கூறினார். அதன் பிறகு வேறு கால சூழலால் அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. இதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், அடுத்து இவனிடம் கதையை கேட்காமல் நடிக்கலாம் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது பெருமிதமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் இயக்கிய படங்களை நான் திரும்பத் திரும்ப பார்த்து வியந்து பிரமித்திருக்கிறேன்.

ஆதாரை பொறுத்தவரை இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்படத்தின் திரைக்கதையின் முழுவடிவம் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களிடம் செல்கிறது. பல நிறுவனங்கள் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்தன. அவர்களின் தயாரிப்பு ஒருங்கிணைப்பில் ஏதேனும் ஒரு இடத்தில் தடை இருந்து கொண்டே இருந்தது. ஒரு தருணத்தில் நான் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டேன். இந்த திரைக்கதை ஏன் படைப்பாக உருவாகவில்லை என்ற கோபம் என்னுள் இருந்தது. ஐந்தாண்டு காலம் இந்த திரைக்கதை ஏன் அமைதியாக இருக்கிறது? என்று எனக்கு புலப்படவில்லை. ஓர் ஆண்டிற்கு முன்னர் தான் இதற்கான விடை எனக்கு கிடைத்தது. இந்த திரைக்கதையை நானே தயாரிக்க போகிறேன் என்பதுதான் அதற்கான விடை. முதல் பிரதி அடிப்படையில் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டேன். உடனடியாக இயக்குநர் அமீர் அவர்களைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். அவரிடம் கேட்டபோது உன்னால் முடியும் வெற்றியுடன் திரும்பி வா என நம்பிக்கை அளித்தார். அதன்பிறகு படத்தை நிறைவு செய்த பிறகுதான் இந்த இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக தான் அவரை சந்தித்தேன். இங்கு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து திரை ஆளுமைகளும், இதற்கு வெவ்வேறு வகையில் உதவி செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் கருணாஸ் உடன் இருபத்தியிரண்டு ஆண்டுகள் பயணித்து வருகிறேன். நந்தாவிற்கு பிறகு அவருடைய நட்பு என்னுடைய அடையாளமாகவே மாறிவிட்டது. திரையுலகில் நான் யாரை சந்தித்தாலும், என்னிடம் கருணாஸ் எப்படி இருக்கிறார்? என்று முதலில் கேட்டுவிட்டு, பிறகு தான் என்னை பற்றி கேட்பார்கள். அந்த அளவிற்கு எங்களின் நட்பு பயணிக்கிறது. இது எனக்கான அடையாளமாகவும், கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் நினைக்கிறேன். 2010ஆம் ஆண்டின் என்னுடைய முதல் படமான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

ஷங்கர் சார் அலுவலகத்தின் வெளியில் நான் அமர்ந்திருக்கிறேன். உள்ளே கருணாஸ் சென்று அவருக்கு அழைப்பிதழை கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தவுடன் கருணாஸ் என்னை சுட்டிக் காட்டி, ‘இவர்தான் ராம்நாத்’ என என்னை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் ஷங்கர் எனக்கு கைகொடுத்து, சிறிது நேரம் இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ‘நல்லா வருவீங்க. உங்கள பத்தி ஒரு வார்த்தை சொன்னாரு. நான் இதுவரைக்கும் கோடம்பாக்கத்தில் கேட்காத வார்த்தை அது.’ என சொன்னார். பிறகு, ‘அவரே அண்ணே நீங்க சினிமாவுல என்ன சம்பாதிச்சு இருக்கீங்க?’ என கேட்டபோது, கருணாஸ், ‘நான் சினிமாவில் டைரக்டர் ராம்நாத் என்பவரை சம்பாதிக்கிறேன் வெளியில் உட்கார்ந்து இருக்கிறான்’ என சொன்னாராம். இந்த வார்த்தையை 2010ஆம் ஆண்டில் இயக்குநர் ஷங்கரிடம் கருணாஸ் சொல்லியிருக்கிறார். என்னைப் பற்றி உயர்வாக கூறிய நடிகர் கருணாசுக்கு நான் என்ன திருப்பிச் செய்யப்போகிறேன் என யோசித்துக்கொண்டே இருந்தேன். அதற்கான ஒரு பதிலாக இதில் கருணாஸ் சார் நடித்திருக்கிறார். இதை நான் உறுதியாகவே சொல்வேன். இந்தப் படம் வெளியான பிறகு நடிகர் கருணாசுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைக்கும்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை ரித்விகா கதையை கேட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக என்னை பின் தொடர்ந்து, படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஏனெனில் கதையை நேசித்த நடிகை அவர்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர் திலீபனும் இப்படித்தான். கதையை கேட்ட பிறகு சிறிய வேடமாக இருந்தாலும் இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார்.

இந்தப் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் பிரபாகர், எனக்காகவும், படத்தில் அவருடைய கதாபாத்திரத்துக்காகவும் சம்பளத்தை குறைத்து வாங்கிக் கொண்டார்.

ஒன்றரை வருடத்திற்கு முன் ஆதார் படத்தின் திரைக்கதை லீனியர் வெர்ஷனில் இருந்தது. அப்போது நாயகி வேடத்தில் நடிக்க நடிகை இனியா பொருத்தமாக இருப்பார் என தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் இறுதியாக இணைந்தவர் நடிகை இனியா. படத்தயாரிப்பு, சிக்கனமான படப்பிடிப்பு திட்டமிடல் போன்ற பல காரணங்களால் என்னுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க கூடிய அனுபவசாலி இனியா என்பதை உணர்ந்துகொண்டு அவரிடம் பேசி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்தேன். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் இந்த படத்தில் நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் பங்களிப்பும் மறக்க முடியாது. .அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம். அவர் கதையை கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அத்துடன் தன்னுடைய உடல்நிலை குறித்த விவரத்தையும் தெரிவித்தார். அவரிடம் இரவு நேர படப்பிடிப்பு இருக்கிறது என சொன்னபோது, சற்றும் தயங்காமல்… ஓய்வெடுக்காமல்… படத்தின் கதாபாத்திரத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கையால் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இது என்னால் மறக்கவே இயலாது. அவருக்கு சினிமா மீது மிகுந்த பற்று இருப்பதை அந்தத் தருணத்தில் நேரடியாக உணர்ந்தேன். பல நாட்கள் மாத்திரை சாப்பிடாமல் படத்தில் நடித்தார். இதுகுறித்து அவரிடம் பின்னர் கேட்டபோது,“ மாத்திரை சாப்பிட்டால் தூங்க வேண்டும். தூங்கினால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. அதனால்… .’என்று சொன்ன போது என் கண்ணில் கண்ணீர் வந்தது.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி நான் அதிகம் பேசாதவர் என்பதையும், என் காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் துல்லியமாக உணர்ந்தவர். அதனால் அவருடன் பணியாற்றியது இனிமையான அனுபவம். நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் முழுமையான ஒத்துழைப்பு அமைந்ததால் ‘ஆதார்’ சிறப்பாக தயாராகியிருக்கிறது.

தயாரிப்பாளர் 20 ஆண்டுகால நண்பர். தஞ்சாவூரில் வீடியோ விஷன் என்ற கடையை தொடங்கி நடத்தியவர். நானும் அவரும் ஒன்றாகவே சினிமாவிற்கு வந்தோம். அவர் நடிகராகவும், நான் இயக்குநராகவும் முயற்சித்தோம். ஆனால் ஒரு புள்ளியில் அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றார். சரியாக சொல்லவேண்டும் என்றால், 21 ஆண்டுகள் தொடர்பு கொள்ளவில்லை. அதன் பிறகு கடந்த ஆண்டு ஒரு நாள் காலை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டார். எனக்கு பேரதிர்ச்சி. என்னாச்சு? ஏன் தொடர்பு கொள்ளவில்லை? என கேட்டபோது, அவர் வெளிநாடு சென்று சம்பாதித்த கதையை சொன்னார். அதன்பிறகு நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் அவர் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். அவருடைய தங்கை வெண்ணிலா. இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவர் மேடையில் பேசும்போது அவர் சந்தித்த விபத்து குறிப்பிட்டார். விபத்திலிருந்து நான் உயிருடன் மீண்டது இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக தான் என சொன்னார்.

ஒரு கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும் ஒரு தம்பதி, எப்படி அவர்களுக்கே தெரியாமல் ஒரு வணிக சந்தை அரசியல் சிக்கி சிக்கினார்கள் என்பதும், அதனை தமிழ்நாடு காவல்துறையினர் எப்படி அணுகினார்கள் என்பதையும் தான் ‘ஆதார்’ விரிவாக திரைக்கதையாக பேசுகிறது.

நான் திரையுலகில் போராடித்தான், எனக்கான அடையாளத்தைப்பெற்றிருக்கிறேன். எனக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்ததில்லை, ஆனால் நான் கடைப்பிடித்த நேர்மையால் தான் இந்த தயாரிப்பாளர் எனக்கு கிடைத்தார். தயாரிப்பாளரிடம் படத்தைத் தயாரிக்கும் முன் அவரிடம் நான் இத்தனை ஆண்டு காலம் போராடிக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் என்னிடம் இருக்கும் நேர்மைதான். இதனை புரிந்து கொண்டு படத்தை தொடங்குங்கள் என அறிவுறுத்தினேன். அவர் இன்றுவரை என்மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். இது எதுக்கு மகிழ்ச்சியை தருகிறது’என்றார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில்,” பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கலந்து கொள்ள விரும்புவதில்லை ஆனால் தற்போது இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் ஏனெனில் கலைஞர்களை இங்கு தான் சந்திக்க முடிகிறது. இது போன்ற நிகழ்வுகளில் கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் சினிமாக்காரன் ஆகவே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன் அதில் கருணாஸ் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் நடக்கும்போது என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் எட்டிப்பார்த்தது. கதை என்ன என்று முழுதாக தெரியாதிருந்தாலும் முன்னோட்டத்தை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.

சினிமா கம்பெனிகளில் நமக்கு கிடைக்கும் பேரும் புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை. சினிமா தொழில் தான் நல்ல தொழில்.. ஒரு தயாரிப்பின் மதிப்பு 100 ரூபாய். 70 ரூபாய் செலவில் அந்த தயாரிப்பு உருவாகிறது என்ற கவலை அவருக்கு அருண் பாண்டியனுக்கு ஏனென்றால் அவன் தயாரிப்பாளராகவும் இருந்தவர். நடிகர்கள் சம்பளம் வாங்குவது தவறென்று சொல்லவில்லை ஆனால் ஒரு பட தயாரிப்பின் உங்களுடைய பங்கு எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அண்மைக்காலமாக பிரமாண்டமாக செலவழித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த வகையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் தற்போதைய சூழலில் தமிழ் மலையாள சினிமாக்களை விட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறது. ” என்றார்.

Arun Pandian and Ameer fight at Aadhaar audio launch

வித்தியாசமான படத்தலைப்பில் இணையும் செல்வராகவன் நட்டி மோகன்

வித்தியாசமான படத்தலைப்பில் இணையும் செல்வராகவன் நட்டி மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G.

அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு ” பகாசூரன்” என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் பூஜை சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் இன்று நடைபெற்றது.

படப்பிடிப்பு திங்கள் முதல் நடைபெற உள்ளது.

செல்வராகவன், நட்டி இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Bakasuran is the title of director Mohan’s next starring Selvaraghavan and Natty

‘வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஒவர்.; சிலம்பரசன் கேரக்டர் சூப்பர்ல

‘வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஒவர்.; சிலம்பரசன் கேரக்டர் சூப்பர்ல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் TR நடிக்கும், Vels Film International Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில் உருவாகும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது.

பிளாக்பஸ்டர் கூட்டணியான சிலம்பரசன் டி.ஆர்.-ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்க நிலையில், இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது, அவரது வாழ்க்கை மும்பைக்கு சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது. படத்தின் பெரும்பகுதி திருச்செந்தூர், சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிலம்பரசன் டி.ஆரின் காதலியாக சித்தி இதானி நடிக்கிறார். நீரஜ் மாதவ் (ஃபேமிலி மேன் புகழ்), ராதிகா சரத்குமார் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

தொழில் நுட்ப குழுவில் சித்தார்த்த நுனி (ஒளிப்பதிவு), அந்தோணி (எடிட்டர்), ராஜீவன் (தயாரிப்பு வடிவமைப்பு), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர் (சண்டைப்பயிற்சி இயக்குனர்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சுரேன் ஜி, S.அழகியகூத்தன் ( ஒலி வடிவமைப்பு), ஹபீஸ் (உரையாடல் பதிவாளர்), மற்றும் ஜெயமோகன் (எழுத்தாளர்) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Vels Film International விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பையும், இசை, டிரெயலர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

STR’s VTK shoot wrapped up

அம்மன் அவதாரமெடுக்கும் ‘பிக்பாஸ்’ பிந்துமாதவி.; இதான் காரணமா.?

அம்மன் அவதாரமெடுக்கும் ‘பிக்பாஸ்’ பிந்துமாதவி.; இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அடிதடி’, ‘மகா நடிகன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘ குஸ்தி’, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன் , எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் “நாகா”.

ஏற்கனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும்
‘கருட பஞ்சமி’ படத்தை தயாரித்து வருகிறார். இரண்டாவது படைப்பாக “நாகா” படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில், பெண்களின் மானத்தை காப்பாற்ற மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார்.

பிரபல நடிகையான இவர், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கினார். இப்பொழுது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். இதை முடித்து கொண்டு வந்த பின் இப் படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இதே போல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரெய்சா வில்சனும் இன்னொரு கதா பாத்திரத்தில் நடிக்கிறார்.

தொல்லியல் ஆராய்ச்சியாளராக நடிகர் ஶ்ரீகாந்த் நடிக்கிறார். யாரும் யாருக்கும் ஜோடி இல்லை.

மேலும், கருணாகரன், அறிமுகம் விஜய் நெல்லிஸ், மும்பை நடிகர் ரிகின் சாய்கல் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

புராணங்களில் சொல்லப் படுகிற நாகலோகம் இந்த காலத்திலேயும் உண்மையாக இருக்க தான் செய்கிறது என்பதை கிராபிக்ஸ் டெக்னிக்கல் காட்சியுடன் பிரமாண்டமாக சொல்ல வருகிறார் டைரக்டர் சார்லஸ்.

இவர் ‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டி செல்லம்’ போன்ற வித்தியாசமான படங்களை டைரக்ட் செய்துள்ளது குறிப்பிட தக்கது. கிராபிக்ஸ் காட்சிக்காக மட்டும் 3 கோடி செலவு செய்யப் படுகிறது.

‘கடல் ஆழத்திலிருந்து வெளியே வரும் ஐந்து தலை ராட்சத நாகம்’, ‘உடலில் அணிகலன்களாகப் பாம்புகளையே அணிந்த மானஸாதேவி என்கிற நாக அம்மனின் மலைக்க வைக்கும் தோற்றம்’ என்று சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கத்தக்க பிரம்மாண்டமான விசுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் உருவாகும் படம் “நாகா”.

தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட பல ஊர்களில் இருக்கும் நாகராஜா கோவில்கள் மற்றும் நாகநாத சுவாமி கோவில்களின் ஸ்தல புராணங்கள் எல்லாம் “நாகங்களின் ராஜா, தன் இனத்தைக் காக்கும்படி சிவனை வழிபட்ட இடம்” என்றே குறிப்பிடுகின்றன.

அதுவே இந்தக் கதைக்கான தொடக்கப் புள்ளி. நம் பலருக்குமேகூட தமிழகத்தில் ‘நாக நாடு’ என்று ஓர் நாடு இருந்தது தெரியாது.

நாகப்பட்டிணம், நாகூர் பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரையோர பகுதியில் தொன்மையான நாகநாடு இருந்தது.

அவற்றுக்கும் நாகராஜா கோயில்களுக்கும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாகலோகத்துக்குமான தொடர்பை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்தக் கதை, தற்கால சமூகப் பிரச்சனை ஒன்றையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

நீதித் துறையால் நெருங்கக்கூட முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த, அநீதியின் மொத்த உருவமாகத் திகழும் ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம் அவதாரமெடுத்து வந்து சங்காரம் செய்து அழித்து ஒழிப்பதே “நாகா” படத்தின் ஒன்லைன்.

இதன் பூஜை, இன்று ( ஏப்ரல் 16 ) நடந்தது. இதில், படத்தில் இடம் பெறும் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பலர் கலந்து கொண்டனர்.

வருகிற 27ம் தேதி முதல் பாண்டிசேரியில் படபிப்பு ஆரம்பமாகிறது.

இதை தொடர்ந்து, ஹம்பி, கேரளா கடற்கரையோரம் என தொடர்ந்து 55 நாட்கள் படபிடிப்பு நடை பெறுகிறது.

இசை: விஷால் சந்திரசேகர் ( ஜில் ஜங் ஜக், உரியடி, குற்றம்23, ரங்கூன், ஜாக்பாட், ஓ மனபெண்ணே புகழ் )

ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.சதிஷ்குமார் ( பேரான்மை, மீகாமான், பூலோகம் புகழ் )

ஆர்ட்: விஜய் தென்னரசு
எடிட்டிங்: பிரவின் பாஸ்கர்
ஸ்டண்ட்: மிராக்கிள் மைக்கேல் .
நிர்வாக தயாரிப்பு: S. சரவண ரவிகுமார்

Director Charles’s next film Naga featuring actress Bindu Madhavi in the lead

அம்பேத்கர் மோடி ஒப்பீடு.. இளையராஜாவுக்கு எதிராக கண்டனம்.; மாரி செல்வராஜ் வருத்தம்

அம்பேத்கர் மோடி ஒப்பீடு.. இளையராஜாவுக்கு எதிராக கண்டனம்.; மாரி செல்வராஜ் வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய தலைவர் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் சர்ச்சையாகியுள்ளன.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தனது அறிவுத்திறன் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போரினால் சமூகத்தால் நினைவுகூறப்படும் ஒரு மாபெரும் மனிதர். அவருடைய பணியின் மகத்துவம், நமது அரசியலமைப்பின் மூலம் அவர் நம் அனைவருக்கும் உறுதி செய்திருக்கும் உரிமைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

எல்லா சவால்களையும் கடந்து வெற்றி பெற விரும்பும் பலருக்கு அவர் ஓர் உத்வேகம். சில வரலாற்று ஆளுமைகள் தங்கள் வாழ்நாளில் பெருமை பெறுகின்றனர். ஆனால் விரைவில் மறக்கப்படுகிறார்கள். வேறு சிலர், தாங்கள் வாழும் காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை, பிற்காலத்தில் அவர்களுக்கு பொருத்தப்பாடு ஏற்படும்.

ஆனால், ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ ஒரு அரிய தலைவர், அவர் தனது காலத்திலேயே சரித்திரம் படைத்தார், அவர் மறைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் அவரது வாழ்க்கை பரவலாக வாசிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், ‘டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் நீர் மற்றும் ஆற்று வழிப்பாதை கொள்கையின் சிற்பி’ என்று குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோதி.

நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2016இல் முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்தே இதைப் பற்றி தெரிந்துகொண்டது சிறப்பானது.

இருப்பினும், ஒருவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரது கொள்கைகளை உள்வாங்குவதும், அவரது யோசனைகளை செயல்படுத்துபவர்களை ஊக்குவிப்பதும் அதைவிட முக்கியம். ஒருவரது கற்பனைக்கு வரம்புகள் இல்லை என்றாலும், செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட ஒரு உண்மையான தலைவர் மட்டுமே, தனது அடையாளத்தை விட்டுவிட்டு, தர்க்கரீதியாகவும் கவனமாகவும் செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.

இந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது.

தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பில். சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது.

சமூக நீதி என்று வரும்போது, பல சட்டங்கள், அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்புகள் மூலமாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஓபிசி ஆணையத்தை அமைத்தது ஆகியவற்றின் மூலமாகவும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கழிவறைகள் கட்டுதல், வீடுகள் கட்டுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்குதல் போன்றவற்றின் மூலம் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான பெரிய அளவிலான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இதில் பயன்பெறும் பலர் ஏழைகளிலும் மிக ஏழைகள். சமூக ரீதியாக பின் தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள்.

வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், நிதித்துறை பங்கேற்பு ஆகியவற்றின் வெற்றிகள் கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன.

சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை பிரதமர் மோதியின் அரசு எடுத்ததாக செய்திகளில் படித்தேன். பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மேற்படிப்பைத் தொடருவதற்கான சுதந்திரம் அளிக்கும் நடவடிக்கை இது.

பெண்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் பணிகள் என்று கூறும்போது…

“இலவச கேஸ் இணைப்புகள் வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது குறித்த பிரதமரின் செய்தியும் நினைவுக்கு வருகின்றன.

பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச்சட்டம், பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ இயக்கத்தின் மூலமாக மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் உயர்ந்தது ஆகியவற்றின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்.

அம்பேத்கர், நரேந்திர மோதி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளையும் இந்த நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.

இந்த இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள்.

இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.

இளையராஜாவின் இந்த கருத்துக்களுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ‘கர்ணன்’ பட இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது…

இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை – இயக்குனர் மாரி செல்வராஜ்.

Maestro Ilayaraja’s controversial comment .. Mari Selvaraj expressed regret

More Articles
Follows