தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது:
“மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்த சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும், துறை சார்ந்த இதர இயக்குனர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
கடந்த 2016 ஆம் ஆண்டு, நானும் எனது மக்கள் தொடர்பாளர் திரு நிகில் முருகனும் நடிகர் சாருஹாசனை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஓய்வில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், தனக்கு இரண்டு பைபாஸ் அறுவை சிகிச்சையும், விபத்தின் காரணமாக கால்களில் ஏற்பட்ட காயம் காரணமாக, இரும்பு பெல்ட் வைத்திருப்பதாகவும், ஆகையால், தன்னால் ஊன்றுக்கோலின்றி நடக்க இயலவில்லை எனவும் பல காணொளிகளில் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி எங்களிடமும் தெரிவித்தார்.
இந்த சூழலில், ஒரு தேசிய விருது பெற்ற நடிகரான நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் மட்டுமல்ல, என்னைப் போலவே பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதை அவரிடம் வலியுறுத்தி பேசிவிட்டு, அவருக்கெனவே, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு கதைகளம் அமைத்திருக்கிறேன் என்று ‘தாதா 87’ கதை அவரிடம் கூறினேன்.
கதை அவருக்கு பிடித்திருக்க, உற்சாகமாக நடித்துக் கொடுத்தார். தற்போது, அவர் 3 தெலுங்கு மற்றும் 2 மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதிலும், அதற்கு நானும் ஒரு காரணம் என அவர் பல்வேறு காணொளிகளில் குறிப்பிட்டு பேசி வருவதையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சாருஹாசனைப் போன்ற சிறந்த மூத்த நடிகர்கள், நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள். நாம்தான் இத்தகைய சிறந்த கலைஞர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து நடிக்க வைக்க வேண்டும்.
2016 ஆம் ஆண்டு முதன்முதலாக தாதா 87 படத்துக்காக, சாருஹாசன் அவர்களை முதன்முதலாக சந்தித்தது துவங்கி, அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்திருக்கும் இந்த தருணம் வரையில், அனைத்து நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்துவரும் நிகில் முருகன், ‘தாதா 87’ படத்தின் தயாரிப்பாளர், படக்குழுவினர் அனைவருடனும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதுடன், எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.
Vijaysri thanks to TN Govt in regards to award for Charuhassan