தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: கதிர், ஸ்ருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், நீலிமா ராணி, மாரிமுத்து, லகுபரன் (வில்லன்), சுஜா வருணி மற்றும் பலர்.
இயக்கம் – நவீன் நஞ்சுண்டன்
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரீஷ்
பிஆர்ஓ – மௌனம் ரவி
கதைக்களம்…
சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் கதிர். இவருக்கு ஓர் அழகான காதலி ஸ்ரூஷ்டி டாங்கே. இவருக்கு அப்பா, அண்ணா, அண்ணி, குழந்தை என அழகான குடும்பம்.
இவரின் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் ஒரு கேஸ் வருகிறது.
அதாவது பெரிய பணக்கார வீட்டுக் குழந்தைகளை கடத்தி ஒரு கும்பல் பணம் பறிக்க முயல்கிறது.
ஒரு குழந்தையை கடத்தி ரூ. 5 கோடி வரை கேட்கின்றனர். பெற்றோர் பணம் தர சம்மதிக்க அந்த பண்த்தை கொண்டு செல்கிறார் போலீஸ் கதிர்.
ஆனால் பணம் கொடுப்பது போல் சென்று அந்த கும்பலில் உள்ள ஒருவனை கொன்று விட்டு குழந்தையையும் பணத்தை மீட்டு வருகிறார்.
தங்கள் நண்பனை போலீஸ் கதிர் கொன்றதால் அவரின் குடும்ப உறுப்பினர்களை 24 மணி நேரத்திற்குள் கொல்ல திட்டமிடுகிறார் வில்லன் லகுபரன்.
இந்த சவாலை கதிரிடம் தெரியப்படுத்தவும் செய்கிறார்.
அதன்பின்னர் கதிர் என்ன செய்தார்? குடும்பத்தை காப்பாற்றினாரா? வில்லன் லகுபரன் சொன்னதை செய்தாரா? அந்த கும்பல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கம்பீரம், நேர்மை, என மிடுக்கான அதிகாரியாக கலக்கியிருக்கிறார் கதிர்.
பன்ச் டயலாக் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாகவும் அதே சமயம் கண்ணியம் தவறாக அதிகாரியாகவும் சிறப்பாக செய்துள்ளார் கதிர்.
ராட்டினம் பட ஹீரோ லகுபரன் தான் இப்படத்தில் வில்லன். பழிவாங்கத் துடிக்கும் அவரின் கண்கள், நண்பன் மீது பாசம் என தெறிக்க விட்டுள்ளார்.
லகுபரனுக்கு இனி வில்லன் வேடங்கள் அதிகம் வந்தாலும் ஆச்சரியமில்லை.
கதிரின் போலீஸ் நண்பர்களாக வரும் அர்ஜீன் ராம் நல்ல தேர்வு.
ஸ்ருஷ்டிக்கு பெரிதாக வேலையில்லை. அவருக்கு கொடுத்த சம்பளத்தை தயாரிப்பாளர் மிச்சம் செய்திருக்கலாம்.
இவர்களுடன் உயர் அதிகாரி மாரிமுத்து, அண்ணா பவன், அண்ணி நீலிமா ராணி, சுஜா வருணி ஆகியோர் தங்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒரு நாளில் நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதை என்பதால் படத்தில் பாடல்களை வைக்கவில்லை என்பதால் டைரக்டரை பாராட்டலாம்.
எனவே படத்தின் பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார் அம்ரீஷ். வில்லன் வரும்போது எல்லாம் வரும் பின்னணி இசை செம மிரட்டல்.
நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளதால் கதையில் சில பலவீனம் தெரிகிறது.
குழந்தையை கொல்ல திட்டமிடும் கொலைக்காரனை பார்த்த நர்ஸ் ஒருவர் இருங்க.. உங்கள மாட்டிவிடுறேன் என்று சொல்வது எல்லாம் நம்புப்படியாக இல்லை.
அதன் பின்னர் அந்த நர்ஸ் டிரெசை சுஜா வருணி போட்டுக் கொள்வதற்காகவே காட்சி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
அதுபோல் குழந்தையை அழைக்க செல்லும் பள்ளி பேருந்து காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.
போலீஸ் குடும்பத்தை வில்லன் மிரட்டுவது என வழக்கமான டெம்ப்ளேட் கதை இல்லாமல் இன்னும் மாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆனாலும் விறுவிறுப்பான படத்தை கொடுத்த நவீன் நஞ்சுண்டைனை பாராட்டலாம்.
சத்ரு.. கம்பீரமான கதிர்