தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்… சத்தியபதி இயக்கியுள்ள படம் லேபர். கட்டிட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தியுள்ளது இந்த படம்.
ராயல் ஃபார்சூனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம் ஆகியோர் நடித்துள்ளனர்.
நிஜில்தினகரன் இசையமைக்க, சி.கணேஷ்குமார் படத்தொகுப்பை மேற்கொள்ள ஒலி கலவையை கிருஷ்ணமூர்த்தி செய்துள்ளார்.
கதைக்களம்…
கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரி ஆகியோர் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம்..
என்னதான் மேஸ்திரியாக இருந்தாலும் ஒரு இன்ஜினியர் கீழ் பணிபுரிய வேண்டும். எனவே தன் மகனை கடன் வாங்கியாவது கஷ்டப்பட்டு இன்ஜினீயர் படிக்க வைக்கிறார். காலேஜ் கட்டணம் கட்ட முடியாமல் அடிக்கடி படாதாபாடு படுகிறார் மேஸ்திரி.
படத்தின் நாயகன் முருகன். அவரது மனைவி சரண்யா ரவி. இருவரும் கட்டிட பணி செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு சின்ன குழந்தை.
முருகனோ குடிக்கு அடிமை. எனவே தினமும் வீட்டில் சண்டை,
இவர்களுடன் வேலை செய்யும் மற்றொரு கேரக்டர் திருநங்கை ஜீவா. இவர் டீச்சருக்கு படித்துக் கொண்டே வேலை செய்கிறார்.
இவர்கள் எல்லோருமே ஏலச்சீட்டு தம்பதிகளிடம் மாதாமாதம் பணம் கட்டி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் ஏலச்சீட்டு தம்பதிகள் தொழிலாளர்களின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். இதனால் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
அடுத்து என்ன நடந்தது.? மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்தாரா மேஸ்திரி.? முருகன் சரண்யா என்ன செய்தார்கள்,? முருகன் குடியை நிறுத்தினாரா? திருநங்கை ஜீவா டீச்சர் ஆனாரா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கணவன் மனைவியாக நடித்துள்ள முத்து, சரண்யா ரவிச்சந்திரன் இருவரையும் வெகுவாக பாராட்டலாம். குடிகாரனாக முத்து.. கொடுத்த கேரக்டரில் கச்சிதம்.
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு கஷ்டப்படும் பெண்ணாக சரண்யா. இவரின் பலமே கொடுத்த கேரக்டராகவே மாறிவிடுவார். சபாஷ் சரண்யா. கணவனை கண்டிப்பதாகட்டும் குழந்தை அழும்போது பால் ஊட்டி வெளியே அழைத்து செல்வதாகட்டும் கட்டிட தொழிலாளி பெண்ணாக மாறிவிட்டார்.
திருநங்கை ஜீவாவும் தன் நடிப்பில் கவனம் பெற வைக்கிறார். தன்னை அசிங்கப்படுத்தியதற்காக ஆபிசரை அதட்டிக் கேட்கும் காட்சிகள் சூப்பர்.
எல்ஐசி ஏஜென்ட், போலீஸ் இன்ஸபெக்டர், ஏலச்சீட்டு தம்பதிகள் உள்ளிட்டோர் ஓகே. ஆனால் இவர்கள் மனப்பாடம் செய்து வசனங்கள் பேசியது போல உள்ளது.
நிஜில் தினகரன் இசை ஓகே ரகம்தான்.
சத்தியபதி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் லேபர் படம் 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல்.
கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை சொல்லிய விதம் ஓகே. ஆனால் ஒளிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒரு காட்சியில் பைக் வரும்போது முன்பே கேமராவை கொண்டு செல்கிறார். அதன்பின்னரும் பைக்கில் வருபவர் முகத்தை காண்பிக்க வேண்டாமா? அவர்களின் பேச்சின் போது முகபாவனைகள் தெரிய வேண்டாமா..? பைக்கில் பின்னால் வருபவர் யார் என்றே தெரியவில்லை.
இதுபோல் ஏலச்சீட்டு வீட்டிலும் கேமராவை ஒரே இடத்திலேயே வைத்துவிட்டார். இதுபோன்ற நிறைய காட்சிகள் ஒரே இடத்தில் கேமரா இருப்பதால் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது.
ஒரு காட்சி முடியும் வரை கேமரா ஆங்கிளை அடிக்கடி மாற்றினால்தானே நம்மால் ரசிக்க முடியும். இது கல்யாண வீடு கேமராமேன்களை நினைவுப்படுத்துகிறது. அதை இயக்குனர் சத்தியபதி தவிர்த்திருக்கலாம்.
ஆயுள் காப்பீடு செய்யாத தொழிலாளர்கள்… குடியால் கெடும் உழைப்பாளிகள்…. என அவர்களின் வாழ்க்கையை இன்னும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருப்பார் இந்த லேபர்.
க்ளைமாக்ஸ் காட்சி சோகத்தை தந்தாலும் அதில் எதிர்பாராத ஆச்சர்யத்தை கொடுத்துவிட்டார் இயக்குனர் சத்தியபதி.
ஆக இந்த லேபர்… உயர்வடையாத உழைப்பாளி.
Labour movie review and rating in Tamil