தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஃபெஃப்சி அமைப்பை சார்ந்தவர்களால் சினிமா சூட்டிங்குக்கு சில பிரச்சினைகள் வந்ததையடுத்து அந்த அமைப்பை சாராதவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.
இப்பிரச்சினைகள் காரணமாக ஃபெஃப்சி அமைப்பு நாளை (1-8-17) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஃபெஃப்சி அமைப்பின் சார்பில் அதன் தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:
‘‘ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது. ஆனால் நாங்கள் வழக்கம்போல் தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளோம்.
ஆகவே எங்கள் உறுப்பினர்களின் படப்பிடிப்பிற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என உங்கள் (ஃபெஃப்சி) உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.
ஏதாவது தடங்கலை ஏற்படுத்தும் பட்சத்தில் நாங்கள் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வெண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தொழிலாளர்கள் என்றைக்கும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது.
ஏனெனில் தொழிலாளர்கள் மூலமே பல திரைப்படங்கள் நல்ல முறையில் உருவாகி திரைத்துறைக்கு பல நற்பலன்கள் கிடைத்துள்ளது. அவ்வகையில் நாங்கள் எந்த ஒரு நிலையிலும் ஃபெஃப்சியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை.
ஆனால் ஃபெஃப்சியுடன் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறுக்கிறோம். முந்தைய காலகட்ட சினிமாவில் தயாரிப்பு தொழில் நன்றாக இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் தயாரிப்பு தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
அதே வேளையில் தயாரிப்பு தொழில் சார்ந்த மற்ற அனைத்து தொழில்களும் நன்றாக உள்ளதும் தாங்கள் நன்கு அறிந்ததே!
இங்கு காலங்காலமாக முறையற்று வாங்கி வரும் பொதுவிதிகள் சார்ந்த சம்பளங்கள் சிலவற்றை தான் தற்போது முறைப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட சங்கம் பிரச்சனை ஏற்படுத்துவதும், அதில் தயாரிப்பாளர்கள் ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு அதன் மூலம் ஃபெஃப்சியே வேண்டாம் என்று முடிவு எடுப்பதும், பின்பு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு மீண்டும் உறவை தொடர்வது என்பதும் வாடிக்கையாக உள்ளது.
ஆனால் இதே விஷயம் ஆண்டாண்டு காலமாக திரும்பத் திரும்ப நடப்பது வேடிக்கையாகவும் உள்ளது. இதில் தயாரிப்பாளர்கள் பக்க நியாயங்களை யாரும் இன்றுவரை சிந்தித்ததே இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
ஆகவே நமக்கு இடையிலான உறவுக்கு என்றுமே அந்நிய சக்திகள் பங்கம் விளைவித்தது இல்லை என்பதையும், ஃபெஃப்சியில் ஒரு அங்கமாக விளங்கும் டெக்னீஷியன் யூனியன் மட்டுமே என்பது இங்கு சுட்டிக்காட கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் இந்த சங்கத்தின் தவறுகளுக்கு சாதகமாகவே சம்மேளம் என்றும் இருப்பதை பார்க்கையில் 40 ஆண்டுகால அமைப்பு சினிமா தொழிலுக்காகதான் தொழிலாளர்களே தவிர, தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல என்பதை மறந்து விட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.
25 ஆயிரம் குடும்பங்கள் கொண்ட ஒரு அமைப்பை கட்டுகோப்புடன் வழிநடத்தி அவர்கள் நலன் காப்பது கடினம் என்பதை அறிந்த தங்களுக்கு 10,00,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் தயாரிப்பு தொழிலை செய்து வரும் தயாரிப்பாளர் நலன் காப்பது எவ்வளவு கடினம் என்பதை அந்த நிர்வாகக் குழுவில் அங்கமாகவும் இருந்த தங்களுக்கு நாங்கள் தெளிவுப்படுத்துவது தேவையற்றது என்று கருதுகிறோம்.
தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியை குறிப்பிட்ட டெக்னீஷியன் யூனியனில் உள்ள திரு.தனபால் கீழ்தரமான வார்த்தைகளால் விமர்சித்தது எங்களை பெரிதளவில் காயப்படுத்தியிருந்தாலும் சினிமா தொழிலின் தாய் ஸ்தானத்தில் உள்ள அமைப்பாக நாங்கள் இந்த விஷயத்தை புறந்தள்ளுகிறோம்.
ஆனால் டெக்னீஷியன் யூனியன் எனும் அமைப்பு எல்லா காலகட்டத்திலும் தயாரிப்பு தொழிலுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்கிற அடிப்படையில் அந்த ஒரு அமைப்புடன் மட்டும் எங்களால் என்றைக்கும் தொழில் உறவை தொடர முடியாது.
இது அவர் தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு தொழில் சார்ந்த அனைவரின் நலன் காக்க எடுத்த முடிவு ஆகும்.” என அறிவித்துள்ளார் ஆர்.கே.செல்வமணி.
Vishal statement and FEFSI Strike RK Selvamani reaction