தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் கார்த்திக்கு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் – கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில்…
”மாலி & மான்வி பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும்போது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் இங்கு அனைவரையும் சௌகரியமான சூழலில் பணியாற்ற அனுமதிப்பார்கள்.
படத்தின் தயாரிப்பாளரை முதன்முதலாக சந்தித்தபோது.. வெள்ளை வேட்டி, தாடி.. ஆகியவற்றுடன் ஒரு டான் ஃபீலில் இருப்பார். அதன் பிறகு அவருடன் பழகப் பழக.. அவர் வில்லன் இல்லை ஹீரோ என்று தெரிந்து கொண்டேன். அவருடன் ஓராண்டுக்கு மேலாக பழகி வருகிறோம். ஒரு முறை கூட அவர் முகம் சுழித்தோ… கோபப்பட்டோ.. பார்த்ததில்லை. எப்போதும் அவருடைய முகத்தில் ஒரு புன்சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். எங்களை நம்பி முதலீடு செய்திருக்கிறார். நாங்கள் கடினமாக உழைத்து சிறந்த படைப்பை வழங்கி இருக்கிறோம் என நம்புகிறோம்.
நானும், படத்தொகுப்பாளர் முத்தையனும் அலுவலகத்திலேயே இருப்போம். கிட்டத்தட்ட பத்து மாதத்திற்கு மேலாக அலுவலகத்திலேயே தங்கி படத்தொகுப்புப் பணிகளை கவனித்தோம்.
இரவு 12 மணி அளவில் கூட ஏதேனும் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பினால், அவரிடம் சொல்வேன். அவரும் சிரமம் பார்க்காமல் அந்தப் பணிகளை செய்து கொடுப்பார். தொடர்ந்து பத்து மாதத்திற்கு மேலாக பணியாற்றியதால் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்று விட்டது.
அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து கொண்டே இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நிறைவு செய்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்யுடன் இணைந்து ஏற்கனவே ‘திட்டம் இரண்டு’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன்.
இதனைத் தொடர்ந்து ஆந்தாலஜி படைப்பு ஒன்றிலும் இணைந்து பணியாற்றினோம். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அவர் ஒரு சிறந்த தொழில் முறையிலான ஒளிப்பதிவாளர். தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நட்புடன் பணியாற்றக் கூடியவர். படப்பிடிப்பு தளத்தில் நான் அடுத்த காட்சியும் கோணமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான பணிகளை அவர் அங்கு நிறைவேற்றுவார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பதிவிறங்கத்திற்கு சென்று விட்டால்… அது ஒரு நேர்நிலையான அதிர்வலைகளை வெளிப்படுத்தும் இடம் என்பதை உணரலாம்.
அது ஒரு போதை போல் இருக்கும். போதை என்றவுடன் தவறாக நினைத்து விட வேண்டாம். ஒருவித இணக்கமான சூழலாக கருதிக் கொள்ளுங்கள்.
அது ஒரு பாய்ஸ் ஹாஸ்டல் போல் இருக்கும். ஏராளமான நண்பர்கள் அங்கு தான் எனக்கு கிடைத்தார்கள். ஜஸ்டின் பிரபாகரனை எனக்கு ஏற்கனவே பிடிக்கும். இந்த படத்தில் பணியாற்றும்போது அவரை நிறைய பிடித்து விட்டது. எப்போதும் அமைதியாகவே இருப்பார். தொடக்கத்தில் அவர் ஒரு இன்ட்ரோவர்ட் போலத்தான் இருப்பார். ஆனால் அவருக்குள் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வாளர் இருக்கிறார். அவருடைய இசையமைப்பு.. இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இந்தப் படத்திற்கு முதலில் வேறு ஒரு நாயகியை தான் ஒப்பந்தம் செய்திருந்தோம். படப்பிடிப்பிற்கு பத்து நாள் முன்னதாக இந்த நாயகிக்கு பதிலாக வேறு ஒரு நாயகியை தேர்வு செய்யலாம் என நான்தான் தயாரிப்பாளிடம் சொன்னேன். தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் உங்களின் முடிவு எதுவோ.. அதையே பின் தொடருங்கள் என்றார்.
இந்த கதைக்கு பொருத்தமான ஒரு நடிகை தேவைப்பட்டது. அதனால் கௌரி கிஷனை போனில் தொடர்பு கொண்டு படத்தின் முதல் பாதி கதையை சொன்னேன். சொல்லும் போதே இவர்கள் என் கதையை கேட்டு நடிக்க சம்மதிக்க வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன்.
இரண்டாம் பாதியை அவரது வீட்டிற்கு சென்று சொன்னேன். பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜீ. வி. பிரகாஷ் குமார். எப்போதுமே சந்தோஷமாக இருப்பவர். அவரை பார்த்தவுடன் அவருடன் நட்பு கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அவரிடமும் ஒரு நகைச்சுவை உணர்வு பொதிந்திருக்கிறது. அவர் மனதில் பட்டதை உடனே தெரிவித்து விடுவார். நன்றாக இருப்பதை நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார். நன்றாக இல்லை என்பதையும் நன்றாக இல்லை என்றும் சுட்டிக்காட்டுவார். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம்.
‘அடியே’ அடிப்படையில் ஒரு அழகான காதல் கதை. குறும்பும், வேடிக்கைகளும் நிறைந்த கதை. பேரலல் யுனிவர்ஸ் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஆகியவற்றுடன் கலந்த ஒரு கதை. ஒரு வித்தியாசமான திரைப்படம். நம்பிக்கையுடன் கடினமாக உழைத்திருக்கிறோம். ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
Vignesh Karthik emotional speech about Editors hard work