தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் டி ராஜேந்தர், விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் தலைவர் டி ஏ அருள்பதி, தலைவர் துணைத் தலைவர் செயலாளர் பதவி
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி ஏ அருள்பதிக்கு கலைப்புலி தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிஏ அருள்பதி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி ராஜகோபாலன், பொருளாளர் பதவிக்கு பாபுராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் நிற்கின்றனர்.
இந்த அணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளர் கலைப்புலி தாணு, டி சிவா, டி ராஜேந்தர், மதுரை அன்புசெழியன் உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள்.
இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டி. ராஜேந்தர் பேசியதாவது…
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று பெரும் முதல்வர்களுடன் அரசியல் செய்த நான், இப்போது ஞானவேல் ராஜா போன்றவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளதே என்பதை நினைக்கும்போது அவமானமாக உள்ளது.
ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவிக்கு வந்தார். ஆனால் பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்டார். நான் ஒரு விநியோகஸ்தன். ஆரம்ப காலத்திலிருந்து எத்தனையோ படங்களை விநியோகித்திருக்கிறேன்.
ரஜினிகாந்தின் ராஜாதிராஜா கூட நான் விநியோகித்த படம்தான். ஒரு தயாரிப்பாளனாக எத்தனை வெற்றிப் படங்களைத் தந்தவன் என்பதை புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனால் இந்த ஞானவேல் ராஜாவும் விஷாலும் என் படப் பிரச்சினைக்கு எத்தனையோ முறை போன் போட்டபோதும் ஒரு முறை கூட போனை எடுக்கவே இல்லை.
விஷாலும் ஞானவேல் ராஜாவும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொறுப்புக்கு வந்தார்கள். ஆனால் சங்கத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொதுக்குழுவைக்கூட ஒழுங்காக நடத்தத் துப்பில்லாதவர்கள்.
விஷால் என்ன லாடு லபக்கு தாஸா? அவர் என்ன ஹிட்லரா?
ஹிட்லருக்கு பட்லராக இருக்கக்கூட லாயக்கில்லாதவர். ஒரு தமிழனாக நான் வெட்கபடுகிறேன். என்னை திட்டமிட்டு அவமதித்தார்கள் இந்த விஷாலும் ஞானவேல் ராஜாவும். நான் பார்க்காத அரசியல்வாதியா, தயாரிப்பாளர்களா… ஆனால் எனக்கே இந்தக் கதி என்றால், மற்ற உறுப்பினர்கள் நிலை என்ன?
எனவே விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஞானவேல் ராஜா கோஷ்டி வரக்கூடாது,” என்றார்.
இயக்குநர் சேரன்
தயாரிப்பாளர் சங்கத்தை சீரழித்தது போதாது என்று இப்போது விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன சாதித்தார் என்று இப்போது விநியோகஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார்? அருள்பதி நியாயமனவர், கண்ணியமானவர், நேர்மையானவர். அவர் விநியோகஸ்தர் சங்கத் தலைவராகத் தொடர்வதுதான் நல்லது.
சுரேஷ் காமாட்சி
நடிகர் சங்கத்தைக் கைப்பற்றுவோம் என்றார்கள். இல்லாத பழியையெல்லாம் அண்ணன் ராதாரவி மீது சுமத்தி இவர்கள் சங்கத்தைக் கைப்பற்றினார்கள். என்ன சாதித்தார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்றினார்கள். அங்கு கஷ்டப்பு சேர்த்து வைத்த பணத்தை கோடிக் கணக்கில் கையாடல் செய்துவிட்டு, பொதுக் குழுவில் பதில் சொல்லத் திராணியில்லாமல் தேசிய கீதம் பாடிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்.
இதுதான் விஷால், ஞானவேல் ராஜா குரூப்பின் சாதனை. இது விநியோகஸ்தர் சங்கத்திலும் தொடர அனுமதிக்காதீர்கள். அருள்பதி அணியை வெற்றிபெறச் செய்யுங்கள்.