மகா கலைஞன் நாகேஷ் பிறந்தநாள் பதிவு.; சுவாரஸ்ய தகவல்கள்..

மகா கலைஞன் நாகேஷ் பிறந்தநாள் பதிவு.; சுவாரஸ்ய தகவல்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#நாகேஷ் எனும் மகா கலைஞன்!
இன்று இவருடைய #பிறந்த நாள்

நாகேஷ் பிறந்த நாள் பதிவாக..

சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. கனவுகள் கனவுகளாகவே கலைவதும் நிஜங்களாக நிறைவேறுவதும் கனவு காண்பவரின் திறமையைப் பொறுத்தது. அப்படி திறமையிருந்தால் சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடிகனாகி விடலாம்.

ஆனால் கலைஞனாவது அத்தனை சுலபமல்ல. ஒரு நடிகனுக்கும் கலைஞனுக்குமான வித்தியாசம் எந்தவொரு அளவுகோலும் வைத்து அளந்துவிட முடியாது. எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் என்று ஒட்டுமொத்த கலைஞர்களையும் தமிழ் சினிமா தன்னுள் வைத்திருந்த காலத்தில் மெலிந்த தேகம், அம்மைத் தழும்பு முகம் என்று சினிமா மொழிக்கு சற்றும் பொருந்தாத ஒரு இளைஞன் தன்னை கலைஞனாக நிலைநிறுத்திக்கொண்டார் என்றால் அது சினிமா உலகின் ஆச்சர்யம். அந்த ஐந்தடி ஆச்சர்யத்தின் பெயர்தான் நாகேஷ்.

ஒரு நாடக ஒத்திகையில் எவனோ முகம் தெரியாத நடிகர் கம்ப ராமாயண பாடலை தவறாகப் பாடியதைக் கேட்டு அந்த தவறைச் சுட்டிக் காட்டியுள்ளார் நாகேஷ். அதற்காக அங்கு கிடைத்த அவமரியாதையில் தாமும் நடிகனாக வேண்டுமென்று ரயில்வே கல்ச்சுரல் விங்-கின் நாடகக்குழுவில் சேர்ந்தார்.

பெரிய நடிகனாக வேண்டுமென்று வந்தவருக்கு காலம் கொடுத்தது சிறிய வயிற்றுவலிக்காரன் வேடம். “”அம்மா…அம்மா…அம்மம்மா” என்று அவர் காட்டிய பிரம்மாண்டத்தில் அரண்டது அரங்கம் மட்டுமல்ல, அன்றைய நாடகத்திற்கு சிறப்பு விருந்திருனராக வந்திருந்த எம்.ஜி.ஆரும்தான்.

அதுதான் நாகேஷுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். அந்த மாடுலேஷனைதான் “திருவிளையாடல்’ தருமியாக “”எனக்கில்லை எனக்கில்லை இல்லவே இல்லை” என்று மீள்பதிவு செய்திருப்பார்.

அதையேதான் “கார்மேகம்’ படத்தில் வடிவேலுவும் கூட டீக்கடை காட்சியில் கீழே விழும்போது பயன்படுத்தியிருப்பார். கமல்ஹாசன் “தெனாலி’ படத்தில் “”ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் என்டு சொன்னீங்களே எப்போ ஆரம்பிக்கலாம்” என்று ஜெயராம் விரலை அசைக்க அசைக்க அதே இழுவையில் இழுத்து இழுத்துச் சொல்லும்போது நாகேஷைத்தான் வெளிப்படுத்திருப்பார். நாகேஷின்றி நகைச்சுவையில் நடிப்பில்லை என்பதற்கு இது சான்று.

ஊறுகாய் கம்பெனி, மில் வேலை, மேடை நாடகம் என்று தட்டுத்தடுமாறி தவழ்ந்து தவழ்ந்து நடிக்க வந்த நாகேஷுக்கு முதல் படம் தாமரைக்குளம். படப்பிடிப்பில் அவர் சரியாக நடிக்கவில்லை என்று யூனிட்டை சார்ந்தவர்கள் கடிந்து கொள்ள மனதளவில் தளர்ந்து போயிருந்த நாகேஷிடம் “”மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன், கவலப்படாம நடி” என்று எம்.ஆர். ராதா ஆறுதல் சொல்லி தேற்றியுள்ளார்.

கலைஞர் என்று பெயர் கொடுத்த எம்.ஆர். ராதாதான் நாகேஷையும் முதல் படத்திலேயே கலைஞனாக அங்கீகரித்துள்ளார். அந்த தீர்க்கதரிசனம் பொய்த்துப் போகவில்லை.

தமிழ் சினிமாவில் எந்த சம்பள பாக்கியும் இல்லாமல் வசூல் செய்வதில் கெட்டிக்காரர் நாகேஷ். முன்னணி கதாநாயகர்களின் பாடல்கள் அவர்களது பெயர்களோடு ஒலித்து வருவது போல நாகேஷின் பாடல்களும் இன்றும் காற்றில் கலந்திருப்பது அவரது பெருமை. நாகேஷ் ஸ்டைல் டான்ஸ் என்று அவர் உருவாக்கிக்கொடுத்தது தனித்திறமை.

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, “தாமரைக் கன்னங்கள்’, “அவளுக்கென்ன அழகிய முகம்’, “ஒருநாள் யாரோ’, “நானொரு குமாஸ்தா’ போன்ற பாடல்கள் எல்லாம் அழியாத செல்லுலாய்டு ஒலிகள். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு ஜாம்பவான்கள் திரைத்துறையில் மின்னிய காலகட்டத்தில் நகைச்சுவையோ குணச்சித்திரமோ தனக்கென ஒரு இயல்பு என்று தமிழ் சினிமாவை தனது நடிப்புக்குள் கட்டிப்போட்டிருந்தவர் நாகேஷ்.

“நானும் ஒரு பெண்’, “மேஜர் சந்திரகாந்த்’ போன்ற திரைப்படங்களில் ஒரு அண்ணனாக அவர் காட்டிய உணர்வுகள் இன்றும் அழியா திருக்கின்றன.

“திருவிளையாடல்’ தருமி ஆகட்டும் “தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி ஆகட்டும் அனைத்துமே நாகேஷுக்காக படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள். குடும்பச் சிக்கல் காரணமாக ஒரு வழக்கில் சிக்கியிருந்த நாகேஷ் எந்த நேரத்திலும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்.

அதனால் நாகேஷ் வேண்டாம் என்று தில்லானா மோகனாம்பாள் படக்குழுவினர் சொல்ல, என்ன ஆனாலும் நாகேஷுக்காக காத்திருந்து படப்பிடிப்பு நடத்தப்படும் என்று உறுதியாக இருந்தாராம் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.

காரணம் அன்றைய தினத்தில் வைத்தியை நாகேஷை தவிர வேறு யாராலும் திரையில் கொடுத்துவிட முடியாது என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. “தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் இறுதிக்காட்சியில் நாகேஷ் கைது செய்யப்பட்டதும் பாலையா “”வெக்கங் கெட்டவனே” என்று சொன்னதும் “எனக்கென்ன வெக்கம். வெக்கப்பட்டா போலீஸ் விட்ருவாளா” என்று அந்த கதாபாத்திரத்தின் நியாயத்தை அதே இயல்பு மீறாத வசனத்தில் வெளிப்படுத்தியிருப்பார் நாகேஷ். வைத்தியைப் போல, ஓஹோ ப்ரொடக்சன்ஸ் செல்லப்பாவின் கதை சொல்லும் காட்சி இன்றும்கூட தமிழ் சினிமாவின் ரெஃபெரென்ஸ் காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது.

நாகேஷின் திரைப்பயண பாதையில் அவரை தனியொரு நாயகனாக வடிவமைத்துக் கொடுத்த பெருமை பாலச்சந்தரையே சாரும். பாலச்சந்தருக்கும், நாகேஷுக்குமான நட்பு அத்தனை இறுக்கமானது. பாலச்சந்தர் ஒருமுறை அவர்களது நட்பை குறிப்பிட்டுப் பேசும்போது “என்னுள் இயங்காத நடிகன் நாகேஷ். நாகேஷின் உள் இயங்காத எழுத்தாளன் நான்” என்று பேசியிருக்கிறார்.

எஸ்.வி.சுப்பையா, சிவாஜி கணேசன் என்று வெகுசில பெரியவர்களால் அணியப்பட்ட பாரதியார் வேடத்தை நாகேஷுக்கு கொடுத்து அழகு பார்த்தார் பாலச்சந்தர்.

“”கண்ணன் பாட்டை காமுகன் பாடி ஊரைக் கெடுத்தானே, என் பேரைக் கெடுத்தானே” என்று நாகேஷ் காட்டும் கோபமுகத்தில் ஒரு புதிய பாரதி கண்முன் வருவார். “எதிர்நீச்சல்’ படத்தில் “”நான் மாது வந்திருக்கேன்” என்று நாகேஷ் சொல்வதை இன்று டி.வியில் பார்த்தாலும் கலங்காத கண்கள் நிச்சயம் இருக்க முடியாது. முகம் காட்டாத இருமல் தாத்தாவிடம் பேசும்போதும் சரி, நாயரிடம் அழகும்போதும் சரி, படவா ராஸ்கல் என்று மேஜரை அழைக்க வைக்க சபதம் செய்வதிலும் சரி நாகேஷ் நடிகரல்ல கலைஞன் என்று நிரூபித்திருப்பார். “நீர்க்குமிழி’, “சர்வர் சுந்தரம்’, “எதிர்நீச்சல்’, “புன்னகை’, “நவகிரகம்’ என அனைத்துமே ஒரு கலைஞனுக்காக நடிப்பிலக்கணம்.

ஒவ்வொரு நடிகனுக்கும் சாச்சுரேஷன் பீரியட் என்று ஒன்று வந்ததும் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும். அப்படி நாகேஷை புறக்கணித்த காலங்களில் தந்தைக்கு சேவகம் செய்யும் மகனைப் போல நாகேஷை தத்தெடுத்து நடிப்புத்தீனி கொடுத்தார் கமல்.

குரு பாலச்சந்தர் காட்டிய நாகேஷின் சில முகங்களை மீண்டும் திரையில் காண்பித்தார் சிஷ்யன் கமல்ஹாசன், அந்த பாக்கியத்தில்தான் நாகேஷ் இன்றளவில் வாழ்ந்து வருகிறார்.

“நம்மவர்’ திரைப்படத்தில் அவரது மகள் தற்கொலை செய்து கொண்டு பிணமாகக் கிடப்பார். மகளின் இறந்த உடலுக்கு தலையணை வைத்து அருகிலமரும் காட்சியில் நாகேஷின் நடிப்பானது, அப்படியொரு காட்சியில் இப்படியும் நடிக்கலாம் என்ற ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருக்கும். அந்த முழு காட்சியிலும் நாகேஷின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

“”எதுக்கு டாக்டர் அதான் எல்லாம் முடிஞ்சுதே… ஒஹ் எனக்கா” என்ற வசனத்தில்கூட அந்த காட்சியின் இறுக்கத்தை இலகுவாய் கடத்திச் சென்றிருப்பார். இந்த படத்திற்கு அவருக்கு கிடைத்த தேசிய விருதுகூட அவரது நடிப்புக்கு போதுமான ஒன்றல்ல.

“அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலை தூக்கி வந்ததும் ஸ்க்ரிப்டில் இல்லாத வசனமாக “”என்னயா பாதிதான் இருக்கு” என்று கேட்டது நாகேஷின் ஸ்பான்டேனியஸ் டச்.

“மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் பிணமாக நடிக்க வைத்திருந்தபோது தனக்கு வசனம் வேண்டும் என்று குழந்தைத்தனமாக அடம்பிடித்ததைப் பற்றி ஒரு முறை கிரேஸி மோகன் சிலாகித்து பகிர்ந்து கொண்டார்.

ஒரு நடிகனுக்கு நடிப்பில் ஈடுபாடுதான் முக்கியமே தவிர வேறெதுவுமில்லை என்று அறிந்திருந்ததால்தான் அந்த கதாபாத்திரம் நாகேஷால் சாத்தியமானது. இன்றளவிலும் திரையில் நிலைத்து நிற்கிறது.

“மைக்கேல் மதனகாமராஜன்’, “மகளிர் மட்டும்’, “நம்பவர்’, “அவ்வை ஷண்முகி’, “பஞ்சதந்திரம்’, “தசாவதாரம்’- என அவரது ரிட்டயர்மெண்ட் அத்தியாயங்களின் சிரிப்பு பக்கங்கள் கமலால் எழுதப்பட்டிருந்தன. மரணப்படுக்கையில் இருந்த தனக்கு “உங்களுக்கு சரி ஆகிடும் சார், நூறு வருஷம் இருப்பீங்க” என்று தைரியம் சொன்ன கமலிடம், “டேய் கமலா, பொய் சொல்லாதடா, ரொம்ப நாள் இருக்கமாட்டேன், முட்டாள்களோடு வேல பாத்தவனுக்கெல்லாம் ஆயுசு குறைவுடா” என்று சொல்லி “உன்கூடயும் வேல பாத்திருக்கேன்ல” என்று அந்த நிலையிலும் குறும்புத்தனத்தோடு சோகமாய் குழுமியிருந்தவர்களை சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ்.

‘படிக்காதவன்’, ‘தில்லு முல்லு’ உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.

அது போல் விஜய்யுடன் ‘பூவே உனக்காக’ & அஜித்துடன் ‘பூவெல்லாம் உன் வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் நாகேஷ் நடித்திருக்கிறார்.

நாகேஷ் நடிகனல்ல, ஒரு நற்கலைஞன், நடிப்பின் இரு துருவங்களான நகைச்சுவைக்கும் சோக உணர்வுகளுக்கும் அவர் எழுதி வைத்துச் சென்றிருக்கும் விளக்கங்கள் இன்றைய இளம் நடிகர்களுக்கு ஒரு என்சைக்ளோபீடியா என்று சொன்னால் மிகையாகாது.

நன்றி..!!!!

Remembering Nagesh on his birthday anniversary

‘இந்தியன் 2’ படத்தை அடுத்து ‘கேம் சேஞ்சர்’ ஷூட்டிங்கிலும் பிரச்சனை.; ஷங்கருக்கு வந்த சங்கடங்கள்

‘இந்தியன் 2’ படத்தை அடுத்து ‘கேம் சேஞ்சர்’ ஷூட்டிங்கிலும் பிரச்சனை.; ஷங்கருக்கு வந்த சங்கடங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம்சரண்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘ஆர் ஆர் ஆர்’ படம் ராம்சரணுக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இவர் தற்போது ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது.

கடந்த வாரம் இப்படத்தின் முக்கியமான சண்டை காட்சி ஒன்று படமாக்கினர்.

இந்த நிலையில், சண்டை காட்சியின் திடீரென்று ஏற்பட்ட விபத்தில் ராம்சரண் முகத்தில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ராம்சரண் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ராம்சரணை 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கூடுதல் தகவல்…

‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பிற்கு ராம்சரணின் கால்ஷீட் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு ரத்து செய்து இருப்பதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது.

‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து வருகின்றன.. கொரோனா லாக்டவுன் பிரச்சனை.. கமலின் அரசியல் பிரவேசம்.. தேர்தல் பிரச்சாரம்.. பிக் பாஸ் நிகழ்ச்சி.. கமலுக்கு ஆபரேஷன்.. இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் 2 பேர் பலி்.. உள்ளிட்ட பல காரணங்களால் தடைப்பட்டது. எனவேதான் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்க முடிவு செய்திருந்தார் ஷங்கர். தற்போது அங்கேயும் அவருக்கு பிரச்சனைகள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Shankar facing problems at Indian 2 and Game changer shoot

‘சப்தம்’ படத்தில் ‘ஈரம்’ படக்குழு.; சிம்ரன் லைலா லட்சுமிமேனன் கூட்டணி

‘சப்தம்’ படத்தில் ‘ஈரம்’ படக்குழு.; சிம்ரன் லைலா லட்சுமிமேனன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”.

திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.

‘ஈரம்’ படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இப்ப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் சப்தம் படத்தின் போஸ்டர், டீஸர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

Sabdham movie shooting updates

BREAKING லியோ இசை விழா ரத்து.; அரசியல்.? ரஜினிக்கு விஜய் பதிலடி.. ரசிகர்கள் ஏமாற்றம்

BREAKING லியோ இசை விழா ரத்து.; அரசியல்.? ரஜினிக்கு விஜய் பதிலடி.. ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம்மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற நான் ரெடி என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். இந்த பாடல் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி பல சாதனைகளை உடைத்து வருகிறது. இரண்டாவது பாடல் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா டிக்கெட்டுகள் டூப்ளிகேட் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த டிக்கெட்டுகள் ரூ 5000 6000 7000 என விற்கப்பட்டும் வருகிறது.

லியோ

மேலும் விஜய்யை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்றால் அதற்கான ஒரு டிக்கெட் ரூபாய் 10000 எனவும் பேசிய ஆடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்களுடைய எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை சற்று முன் வெளியிட்டுள்ளனர்.

அதில் நாங்கள் லியோ இசை விழாவில் நடத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். இது அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் தகவல்…

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது கழுகு காக்கா கதையை கூறியிருந்தார். அதில் காக்கா விஜய் தான் என பலர் கருத்து கூறி வந்தனர்.

எனவே ‘லியோ’ விழாவில் ரஜினிக்கு விஜய் பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லியோ

Vijay fans shocked Leo audio launch cancelled

என் முதல் படம் ‘சித்தா’.. கமல் – மணிரத்னம் பாராட்டினாங்க – சித்தார்த்

என் முதல் படம் ‘சித்தா’.. கமல் – மணிரத்னம் பாராட்டினாங்க – சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’.

செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

நடிகர் சித்தார்த் பேசியதாவது…

“இது என்னுடைய முதல் படம். முதல் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக நான் ஒரு படம் தயாரிக்கும் பொழுது எந்தவித சமரசமும் இல்லாமல் உண்மையை மட்டுமே படமாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அப்படியான ஒரு உணர்வை ‘சித்தா’ கொடுத்திருக்கிறது. படத்தை நம்பிய அருணுக்கும் நன்றி. இந்த படத்தை ஏன் என்னுடைய அறிமுகப்படம் என்று சொல்கிறேன் என்றால், மக்களுடைய உண்மையான வாழ்க்கையை அப்படியே எடுத்துள்ளோம்.

இதன் ப்ரீ- புரொடக்ஷன் வேலைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எடுத்தோம். படம் எனக்கு திருப்தியாக வந்துள்ளது. நான், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உட்பட சில பேரைத் தவிர படத்திலுள்ள அனைவருமே புதுமுகம்.

இந்த முடிவையும் முன்கூட்டியே எடுத்தோம். படத்தில் குழந்தைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ள நிமிஷாவுக்கும் வாழ்த்துகள். அஞ்சலி நாயரும் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் தங்களுடைய வேலையை பாராட்டும்படி செய்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் பழனியில் லைவ் லொகேஷனில் எடுக்கப்பட்டது.

இந்தப் படம் ஒரு எமோஷனல் திரில்லர். படத்தின் டைட்டில் பாடல் கொடுத்த சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் தான் வெளியிடுகிறது. படத்தை முதலில் பார்த்தவர் உதய் தான்.

இந்தப் படம் திரையரங்குகளில் பார்ப்பதற்காகவே உருவாக்கினேன். உங்கள் குடும்பத்துடன் நிச்சயம் இதைப் பார்க்கலாம். ஒரு குழந்தை காணாமல் போகும்போது குடும்பம், காவல் நிலையம், பள்ளி என இந்த சுற்று வட்டாரங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை நாம் எல்லோரும் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

அன்போடும் அக்கறையோடும் இந்த படத்தை எடுத்துள்ளோம். என் குரு மணிரத்தினம், கமல் சாரிடம் படத்தை போட்டு காண்பித்தேன். மிகவும் பாசிட்டிவாக சொன்னார்கள். அதுவே எனக்கு பெரிய விருது கிடைத்தது போல தான்! அடுத்து ஷங்கர் சாரிடமும் ரஹ்மான் சாரிடமும் படத்தை காண்பிப்பேன். நீங்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

Kamal Maniratnam praises Chithha says Siddharth

‘சித்தா’ படத்தை தூக்கி சுமந்தது சித்தார்த் தான்..; ஆனந்தத்தில் அருண்

‘சித்தா’ படத்தை தூக்கி சுமந்தது சித்தார்த் தான்..; ஆனந்தத்தில் அருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’.

செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் முதலாவதாக ஒலி வடிவமைப்பாளர் விவேக் தணிகாசலம் பேசியதாவது…

“சித்தார்த் சாருக்கும் அருண் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் நான் இந்தப் படத்திற்குள் வந்தேன். என்னை நம்பி முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார்கள். அதனால்தான் இவ்வளவு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்த வாய்ப்புக்கு நன்றி”.

கலை இயக்குநர் சி.எஸ். பாலச்சந்திரன்…

“இந்த வாய்ப்பு கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. இயக்குநர் அருணுடன் எனக்கு இது மூன்றாவது படம். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கும் வரப்போகும் படங்களில் வாய்ப்பு அளிக்க போவதற்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்…

“இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் அருண் தந்த வாய்ப்பு இது. என்னை நம்பிய தயாரிப்பாளர் சித்தார்த்துக்கும் நன்றி”

இயக்குநர் அருண்…

“நானும் சித்தார்த்தும் சேர்ந்துதான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். படம் ஆரம்பிக்கும் போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே நம்பிக்கைதான் இப்போது வரை இருக்கிறது. என்னைவிட ஒரு நடிகராக தயாரிப்பாளராக இந்தப் படத்தைத் தூக்கி சுமந்தது சித்தார்த்தான்.

எந்த தடங்கலும் இல்லாமல் என்னை முழு சுதந்திரத்தோடு படம் செய்ய வைத்தார்கள். இந்தப் படம் இந்தளவு நன்றாக வர துணையிருந்த தொழில்நுட்பக்குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் முதல் படம் போல நினைத்து நிறைய கற்றுக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

Director SU Arunkumar speech at Chithha press meet

More Articles
Follows