தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த ராட்சசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கும் மேலாகியும் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் சைக்கோ வில்லனாக நடித்த நடிகர் யார் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
அதற்கான பதிலை, ராட்சசன் படத்தயாரிப்பாளர் ஒரு விழாவாகவே நடத்தியிருக்கிறார்.
அதில் ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகம் செய்து வைத்தனர் படக்குழுவினர்.
கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் நடித்த அவரின் பெயர் சரவணன். நான் படத்தில் சின்னக் கேரக்டரில் நடித்ததால், நான் சரவணன் என்று பெயர் கொண்ட அவர்தான், படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இதுகுறித்து இயக்குநர் ராம்குமார் தெரிவித்ததாவது:
படம் பார்த்துவிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருமே ‘அந்த வில்லன் கிறிஸ்டோடபர் கேரக்டர் செய்தது யார்?’ என்றுதான் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
அவரை இப்படியொரு விழா எடுத்து அறிமுகப்படுத்தலாம் என்று தயாரிப்பாளரிடம் சொன்னபோது, ரொம்ப உற்சாகத்துடன் செலவு பற்றி கவலைப்படாமல் சம்மதம் தெரிவித்தார் தயாரிப்பாளர்.
வில்லன் கிறிஸ்டோபராக நடித்தவர் சரவணன். நான் என்கிற படத்தில் நடித்ததால், நான் சரவணன் என்று எல்லோரும் சொல்லுவார்கள்.
முதலில் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால், படத்தில் அவரின் முகமே தெரியாது. மேக்கப் காரணமாக, வேறொரு முகத்துடன் படம் முழுக்க வந்தார். ஆனாலும் அந்த மேக்கப் போட்டுக்கொள்வதில் இருந்த அத்தனை சிரமங்களையும் தாங்கிக்கொண்டார்.
நான்குமணி நேரம் இந்த மேக்கப் நிற்கும். அதுவரைக்கும் உணவெல்லாம் சாப்பிடமுடியாது. திரவ உணவுதான். ஜூஸ் மாதிரிதான் சாப்பிடமுடியும். எட்டுமணி நேரமெல்லாம் கூட எதுவும் சாப்பிடாமல் இருந்து, இந்தக் கேரக்டரை சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்.
இப்படியொரு மேக்கப் போட்டுக்கொள்வதால், முகத்தில் அரிப்பு ஏற்படும். சின்னச் சின்ன புண்ணெல்லாம் வந்திருக்கிறது. அதையெல்லாம் தாங்கிக்கொண்டு, அப்படியொரு உழைப்பையும் நடிப்பையும் கொடுத்தார் சரவணன்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் கிறிஸ்டோபர் கேரக்டரும் ஒன்று. அதை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய சரவணன், மிகப்பெரிய நடிகராக வருவார் என்பது உறுதி.
இவ்வாறு இயக்குநர் ராம்குமார் பேசினார்.