தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’ சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’.
இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘நேரம்’, ‘பிரேமம்’ படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ரா‘ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதன்போது தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா, ராம் தல்லூரி, இயக்குநர் ரமணன் புருஷோத்தமா, இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், கூடுதல் திரைக்கதை வசனம் எழுதிய பொன்னிவளவன், நடிகர்கள் மணிகண்ட பிரபு, சரத் ரவி மற்றும் படத்தின் நாயகன் சிம்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ராம் தல்லூரி பேசுகையில்….
” ரவி தேஜா உடனான படப்பிடிப்பில் தான் சிம்ஹாவை முதலில் சந்தித்தேன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற திறமையாளர் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல், மிக எளிமையாக படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றினார். அவரை சந்தித்த உடனேயே, உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். சில மாதங்கள் கழித்து, என்னை தொடர்பு கொண்டு, ‘கதை ஒன்று இருக்கிறது. கேளுங்கள்’ என்றார்.
அடுத்த நாள் ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்திப்பு நடந்தது. அதன் போது இயக்குநர், சிம்ஹா, நான், என்னுடைய மகன் ஆகியோர் இருந்தோம். இயக்குநர் கதையை விவரித்துக் கொண்டே இருந்தார். இந்த கதையை கேட்ட முதல் பார்வையாளரான என்னுடைய மகன், கதையைக் கேட்டு விட்டு,’ இது ஆங்கில படம் போல் உலக தரத்தில் இருக்கிறது’ என்றார். ஏனெனில் இது புதுவித ஜானரிலான திரைப்படம். இது போன்ற கதை சொல்லும் உத்தி இதற்கு முன் எந்தத் திரைப்படத்திலும் வரவில்லை. அந்தத் தருணத்திலேயே நான் ‘வசந்த முல்லை’ படத்தைத் தயாரிக்க தீர்மானித்து விட்டேன். இது கமர்சியலா..? கமர்சியல் இல்லாததா..? என்ற எல்லையை கடந்து, இது புது வித ஜானரில் உருவாகி இருக்கும் திரைப்படம். இது ரசிகர்களை கவரும்.
ரேஷ்மி சிம்ஹாவின் கடும் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு நாட்கள் குறைவு என்றாலும், இந்த திரைப்படம் மூன்றரை ஆண்டு கால உழைப்பில் உருவாகி இருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர்கள் ஆர்யா மற்றும் ரக்ஷித் ஷெட்டிக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
producer Ram Talluri speech at vasantha mullai trailer launch