தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையை அடுத்த உத்தண்டி கடற்கரை பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டியது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற, CMDA-விற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில், உத்தண்டி கடற்கரை பகுதியில் தங்களுக்குச் சொந்தமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கோரினால், சிஎம்டிஏ மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து அனுமதி வழங்காமல் இருந்து வரும் நிலையில், தங்கள் இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள், கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, மற்றவர்களுக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதுபோல், தங்களுக்கும் அனுமதி வழங்க, CMDA-விற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசராணைக்கு வந்தது. அப்போது, CMDA மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மனுதாரர் குறிப்பிடுகிற இடத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள், விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், இதில், நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் அடங்கும் என CMDA தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், விதிகள் மீறப்பட்டிருந்தால், அது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு CMDA நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை CMDA மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, CMDAவும், சென்னை மாநகராட்சியும், அடுத்த மாதம் 9ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
Unapproved construction on ECR Court Notices to Kamal and Ramya Krishnan