தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வினில் கலந்துக் கொண்டு….
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது…
சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம், மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள் வேண்டும் என்றார்.
அந்த தேதிகள் தள்ளிப் போனபோது கூட அதே கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இந்தப்படத்துக்காக காத்திருந்து உழைத்தார். அவர் அர்ப்பணிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டோம். அவரது உழைப்பு மிகப்பெரிது. இந்தப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ரஞ்சித் சார் எப்படிப்பட்ட படம் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முதல் படத்திலிருந்து இது தான் செய்ய வேண்டும் என முடிவு செய்து மிகச்சரியாகச் செய்து வருகிறார். அதற்கான வெற்றியையும் அவர் பெற்று வருகிறார்.
இந்தப்படம் அவருக்கு இன்னும் பெரிய இடத்தைப் பெற்றுத்தரும். ஜீவி பிரகாஷ் எங்கள் வீட்டுப் பிள்ளைப் போல இந்தப்படத்திற்காகச் சிறந்த இசையைத் தந்துள்ளார். கிஷோர் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார், எல்லோரும் விஷுவல் பார்த்து அவரைப்பற்றிக் கேட்டார்கள். அவர் மட்டுமில்லாமல் கலை இயக்கம், ஸ்டண்ட் என எல்லாத் துறையும் இந்தப்படத்தில் பேசப்படும்.
இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. இது உலக அளவில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும். நம் தமிழ் சினிமாவின் பெயரை உலகம் முழுக்க இந்தப்படம் சொல்லும். ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் ஆரம்பித்த போது பாலா சாரை வைத்து படம் எடுப்பதாக இருந்தது, அப்போது ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது, சீயான் சாரை சொன்னார்.
விக்ரம் சாருக்கு அது தெரியாது. அவரை வைத்து முதல் படம் தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு சூர்யா சார் வைத்த பெயர் தான் ஸ்டூடியோ க்ரீன். சூர்யா சார் விக்ரம் சாருக்காக வைத்த பெயர் தான் இது. அப்போது அது நடக்கவில்லை, இப்போது நடப்பது மகிழ்ச்சி.
எடிட்டர் RK செல்வா பேசியதாவது..
என் கரியரில் இது மிக முக்கியமான படம். இது விஷுவலாக பேசும் படம் அதனால் டீசரில் அதைக்காட்டலாம் என நினைத்துத் தான் டயலாக் இல்லாமல் எடிட் செய்தோம். எனக்கு நீண்ட காலமாக வரலாற்றுப் படத்தில் வேலை பார்க்க ஆசை இருந்தது.
அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. பா ரஞ்சித் அண்ணா, ஒவ்வொரு படத்திலும் அவருடன் எங்களையும் வேறு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறார். விக்ரம் சாரை விஷுவல்களில் பார்த்து நிறைய முறை பிரமித்திருக்கிறேன். எப்படி இந்த மனுசன் இவ்வளவு உழைக்கிறார் எனத் தோணும்.
இந்தப்படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி
கலை இயக்குநர் SS மூர்த்தி பேசியதாவது…
கல்லூரி காலத்திலிருந்தே பா ரஞ்சித் சார் எனக்குப் பழக்கம். அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சி. எனக்கு முழு சுதந்திரம் தந்தார். ஒரு வேலையைச் சொல்லிவிட்டால் முழுதாக என்னிடம் விட்டுவிடுவார். அதைப்பற்றிக்கேட்க மாட்டார். விக்ரம் சாருடன் பணிபுரிந்தது மிகச் சந்தோஷமாக இருந்தது. என்னுடன் இணைந்து உழைத்த இந்தப்படத்தின் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
பாடலாசிரியர் உமாதேவி பேசியதாவது…
இலக்கியப் பரப்பிலிருந்து எனது கவிதைகளைத் திரை உலகிற்குக் கொண்டு சேர்க்க எனக்கு உறுதுணையாக இருக்கும் தாயுமானவன் ரஞ்சித் சாருக்கு நன்றி. ஸ்டூடியோ க்ரீனில் என் முதல் பாடல் அமைந்தாலும், இந்த தங்கலான் மிக முக்கியமான படமாக உள்ளது. பா ரஞ்சித் மிக உறுதுணையாக இருந்தார். தங்கலான் இரண்டு பாடல்களும் அட்டகாசமாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி.
உடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் பேசியதாவது….
நான் படித்த படிப்பிற்குக் கிடைத்த முழுமையான வேலையாக தங்கலானைப் பார்க்கிறேன். 10 வருடங்களாக நேச்சுரல் டை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இந்தப்படத்தில் அதைப்பயன்படுத்த முடிந்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ஸ்பாட்டிலேயே நேச்சுரல் டை தயாரித்து, அங்கு உடைகள் தயாரித்து ஆர்டிஸ்டுக்கு தந்தேன், பா ரஞ்சித் அண்ணா என்னிடம் இந்த வேலையைக் கொடுத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் இயற்கையோடு இணைந்து உடைகளை உருவாக்கியுள்ளோம். பா ரஞ்சித் இயற்கையை நேசிப்பவர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
எழுத்தாளர் தமிழ்பிரபா பேசியதாவது…
என் முதல் சினிமா மேடை இது தான். பா ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதும் இரண்டாவது படம் இது என்றாலும், அது ஓடிடி போய்விட்டது இது தான் என் கன்னிப்பேச்சு. பொதுவாக எழுத்தாளர்களைத் தமிழ் சினிமாவில் மதிப்பதில்லை, மலையாளத்தில் மரியாதை தருகிறார்கள் என்ற கருத்து இருக்கிறது.
ஆனால் அதை ரஞ்சித் உடைத்துத் தொடர்ந்து முழு மரியாதை தந்து வருகிறார் அதற்காக எழுத்தாளர்கள் சார்பில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைக்கதையாக இந்தப்படம் தனித்துவமாக எப்படி இருக்கப்போகிறது என்பதில் ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதியது மிக உற்சாகமாக இருந்தது, சவாலாக இருந்தது. இந்தப்படம் உங்களை பல்வேறு வகையான சிந்தனைக்குள் கொண்டு செல்லும் எல்லோருக்கும் நன்றி.
நடிகர் முத்துக்குமார் பேசியதாவது…
இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சர்பட்டாவிற்கு பிறகு மிக முக்கியமான ஒரு ரோல் தந்துள்ளார், அவர் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறேன். டீசர் பார்த்து விட்டு மிரண்டுவிட்டேன். விக்ரம் சாருக்கு நன்றி, மகானுக்குப் பிறகு அவர் உழைப்பைப் பார்த்துப் பிரமிப்பாக இருக்கிறது. இங்குள்ள அனைவருக்கும் என் நன்றிகள்
ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் பேசியதாவது…
என்னைத் தொடர்ந்து மேடை ஏற்றும் ஒரே கலைஞர் ரஞ்சித் அண்ணா. சினிமாவை
நேசிப்பவர் நிறையப் படங்கள் பற்றி அவருடன் பேசுவேன். இடங்களை அப்படியே அதன் பிரமிப்பைத் திரையில், அதே ஒளியில் கொண்டு வர ஆசைப்படுவார்.
என்னைப்பார்த்து என் வேலையைப் பார்த்து உடனுக்குடன் பாரட்டுவார். முடிந்தளவு இயற்கை ஒளியோடு திரைக்கு இந்தக்கதையைக் கொண்டு வந்துள்ளோம். நான் முதன் முதலில் கல்லூரியில் பார்த்து ரசித்த ஹீரோ விக்ரம் சார் அவரை நான் படம்பிடிப்பேன் என நினைக்கவில்லை. அப்போதிருந்த அதே எனர்ஜியோடு இப்போதும் மிரட்டுகிறார். டீசரில் நீங்கள் என்ன பார்த்தீர்களோ, அதை விடப் பிரமிப்பான விசயங்கள் படத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றி.
ஸ்டன்னர் சாம் பேசியதாவது..
இந்தப்படம் மிக வித்தியாசமான படம். ஸ்டண்ட் காட்சிகள் மிகக் கடினமான பணியாக இருந்தது, மற்ற படங்கள் போல கேமராவை நினைத்த மாதிரி வளைக்க முடியாது. எல்லாமே ஒரே ஷாட்டாக இருக்கும் ஆனால் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து, விக்ரம் சார் கலக்கியிருக்கிறார். அவருக்கு இந்தப்படத்தில் அடிபட்டது ஆனால் அதையும் தாண்டி வந்து ஆக்சன் காட்சிகளில் நடித்தார் அவரிடம் சாரி கேட்டுக்கொண்டே இருப்பேன் அந்த அளவுக்கு அடிபட்டிருக்கிறார். இந்தப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், தங்கலான் உங்கள் மனதில் தங்குவான். நன்றி.
Highlights of Thangalaan Teaser Launch event