தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 35 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் தன் இசை பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா.
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவை வெளியேற நிர்வாகம் கூறியது.
இதனை எதிர்த்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு இளையராஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் திரைப்படங்களுக்காக கைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இளையராஜாவை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், காவல் துறையிடம் அளித்த புகாரையும் வாபஸ் பெறுவதாக உத்தரவாத மனு தாக்கல் செய்தால் அவரை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கலாம் என ஸ்டூடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பதிலளித்திருந்த இளையராஜா தரப்பு.. பிரசாத் ஸ்டுடியோ’வுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற முன் வந்தார்.
தற்போது சிட்டி சிவில் நீதிமன்றம் முழுமையாக இயங்காததால், வழக்கை திரும்ப பெற உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என விளக்கமளித்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இளையராஜா தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழையவும், இசையமைத்த அறையில் தியானம் செய்யவும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
தியானம் மேற்கொள்ளும் போது, இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பொருட்களின் பட்டியலை சரி பார்க்க வழக்கறிஞர் லட்சுமி நாராயணனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தும் உத்தரவிட்டார்.
எந்த தேதியில் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்வது குறித்து இரு தரப்பினரும் முடிவு செய்து கொள்ளலாம் எனவும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா ஸ்டூடியோவுக்குள் இருக்கலாம் எனவும், ஸ்டூடியோவுக்குள் செல்லும் இளையராஜாவுடன், அவரது உதவியாளர்கள் மூன்று பேரை மட்டும் அனுமதிக்கலாம் எனவும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் உடன் செல்லலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க போதுமான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இளையராஜாவின் வழக்கை முடித்து வைத்தார்.
Maestro Ilaiyaraja agrees to collect his belongings without claiming ownership of studio space