தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தற்போது இந்தியாவிலும் நுழைந்து உயிர்களை தாக்கி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்பதால் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்தியாவில் இதனை தடுக்கும் முயற்சியாக நாளை ஞாயிறு மார்ச் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 21) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்கு போய்விடக்கூடாது.
பொதுமக்கள் வெளியில் நடமாடும் இடங்களில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வைரஸ் பரவாமல் இருந்தாலே மூன்றாவது நிலைக்கு போவதை நாம் தடுத்துவிடலாம்.
இதனைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோன்ற வேண்டுகோளை இத்தாலி அரசும் விடுத்தது. ஆனால் இத்தாலி மக்கள் அதை பொருட்படுத்தாமல் ஊதாசீனப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது.” என்று ரஜினிகாந்த் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ரஜினி பேசிய வீடியோ ட்விட்டரின் விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கியுள்ளது.
ஆனால் என்ன விதிமீறல் இருக்கிறது என்பது பற்றி ட்விட்டர் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.
ரஜினி கூறிய கொரோனா தகவல்கள் (12 மணிமுதல் 14 மணி வரை வைரஸ்) உறுதியானவை என கருத முடியாததால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு ட்விட்டர் நிறுவனமே விளக்கம் வேண்டும் என ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் Shame on Twitter என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Twitter removes Rajinis Corona video for violating rules