தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று இரவு வேப்பேரி அருகே கார் ஒன்று அதிக இரைச்சலுடன் சென்றதை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், அந்த காரை வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது காரினுள் இருந்த நடிகர் ஜெய்யை கண்ட போலீசார், இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நடிகர்களே இவ்வாறு விதிகளை மீறலாமா என அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து தனது தவறை ஒப்புக் கொண்ட ஜெய் இனி இப்படி செய்ய மாட்டேன் என போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் ஜெய்யை வைத்துக் கொண்டே பள்ளிகள், மருத்துவமனைகளுக்குத் தொந்தரவாகவும், சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பாட்டில் சைலன்ஸரைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கும் வீடியோவை போக்குவரத்து போலீசார் எடுத்தனர்.
பொதுவாக அதிக இரைச்சல் கொண்ட சைலன்சரை பயன்படுத்துவோரை காவல்துறையினர் பிடித்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவும் செய்வர்.
ஆனால் நடிகர் ஜெய் மீது இவ்வாறான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னதாக கடந்த 2017 ஆண்டு செப்டம்பர் மாதம் மது போதையில் வாகனம் ஓட்டிய ஜெய் அடையாறு மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஜெய்க்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஆஜரான ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.