தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு துறையில் அதீத அசாத்தியமான திறமையாளராக இருப்பது போற்றுதலுக்கும் புகழுக்கும் மரியாதைக்கும் உரியது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் அற்புதமான திறமையாளர் என்பதற்காக அவர் செய்யும் மனிதாபிமானம் இல்லாத பகுத்தறிவு இல்லாத செயல்களை மீண்டும் மீண்டும் ஆதரிப்பது பைத்தியக்காரத்தனம்.
அவருக்கு இசை தவிர வேறோன்றும் தெரியாது என்பதெல்லாம் அறிவற்ற உளறல். விஞ்ஞானிகள் ஆய்வுக் கூடங்களில் சரியாக உறங்காமல் பல் விளக்காமல் குளிக்காமல் உடை மாற்றாமல் ஒன்றும் இரண்டும் கூட சரியாக போகாமல் ஆய்வில் மூழ்கி இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
சில திரைப்பட எழுத்து/விவாத வேலைகளுக்காக வெளியூரில் தங்கி இருந்த போது நானே கூட அப்படி இருந்திருக்கிறேன். நேரத்திற்கு எதையும் செய்யாமல்.
இளையராஜா என்ன அப்படி முடிவெட்டாமல் குளிக்காமலா இருக்கிறார்?
ஒரு நிகழ்வில் 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் 10000 ரூபாய் டிக்கெட் இருக்கைகளில் அமர்ந்ததும் செக்யூரிட்டி ஒருவர் மேடைக்கு வந்து தண்ணீர் கொடுத்ததும் விழா ஏற்பாட்டில் உள்ள குறைபாடு.
ஏற்பாடு செய்த நிறுவனம் அதன் ஊழியர்கள் தவறு அது.
அவர்களிடம் தான் அதைக் கேட்க வேண்டும். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தான் அது தவறு எனில் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஞானிகளே மனம் பிறழும்போது சராசரி மக்கள் மனம் பிறழ மாட்டார்கள், நியாயமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது அனுபவ அறிவு போதாமை அல்லது அதீத நம்பிக்கை.
தண்ணீர் குடிக்கும் டம்ளர்களையே கட்டிப்போடுபவர்கள் மனிதர்கள். கோயில்களில் சிசிடிவி கேமரா வைப்பவர்கள் மனிதர்கள். அவ்வளவு தான் மனிதர்களின் சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, மனிதர்களின் கடவுள் மீதான நம்பிக்கை எல்லாம்.
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் செய்த தவறுக்கு யார் யாரையோ இளையராஜா குற்றம் சுமத்துவதை பார்க்கும்போது, செக்யூரிட்டியிடம் ஆங்கிலத்தில் பேசும் போது, செக்யூரிட்டி பரிதாபமாக இளையராஜா முன் நிற்கும் போது,
செக்யூரிட்டி அவர் காலில் விழுவதை பார்க்கும் போது, அதைத் தடுக்க விரும்பாமல் இளையராஜா நிற்கும் போது…
போதும் என்று தோன்றுகிறது மதிப்பிற்கும் மகிழ்வுக்கும் உரிய இளையராஜா அவர்களே…
அந்த செக்யூரிட்டி தனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் கூட தமிழில் தான் பேசி இருப்பார். அது சபை நாகரிகம் மட்டும் அல்ல உங்கள் மீதான மரியாதையும் கூட.
எனக்குத் தெரியாத எந்த பிரபலம் கூடவும் புகைப்படம் எடுக்க விரும்பாத நான் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே ஒருமுறை வந்தேன்.
என்னுடன் வந்தவர்கள் வரிசையில் வந்து உங்கள் காலில் விழுந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்களின் அப்பா அம்மா வீட்டு பெரியவர்கள் காலில் விழுந்து கும்பிடுவதாக நினைத்து கும்பிட்டிருக்கக் கூடும். எனக்கு அந்த பழக்கம் இல்லை.
ஆனால் அனைவரும் காலைத் தொட்டு கும்பிடுகிறார்கள். சிலநொடி குழம்பினேன். ஆனாலும் காலில் விழவில்லை நான். கைகளில் முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
ஒருவர் தன் காலில் விழுந்து வணங்குதை விரும்புவதும் அதைத் தடுக்காமல் இருப்பதும் மனிதாபிமானம் அற்ற சமத்துவம் இல்லாத செயலாகவே நான் கருதுகிறேன்.
பாடகர் ஏசுதாசுக்கு பாடகர் எஸ்.பி.பி. ஒருமுறை பாதபூஜை செய்தார். அதுவும் அனைத்து மீடியாவையும் அழைத்து. அன்று முதல் இருவரது புகைப்படத்தையோ அல்லது அவர்களை நேரிலோ பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. அதிலும் யேசுதாசைப் பார்த்தால் சற்று கூடுதலாக.
அவ்வளவு மரியாதை பாசம் என்றால் தனியாக வீட்டில் செய்யலாமே. ஊருக்கு தெரிய செய்வது அசிங்கமானது மட்டும் அல்ல வரவேற்கத் தக்கதும் அல்ல. இதே அருவருக்கத்தக்க செயலை எங்கள் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் அனைத்து ஆசிரியர்களையும் உட்கார வைத்து மாணவர்களை பாதம் கழுவச் சொல்லி அதை புகைப்படங்கள் வீடியோ எடுத்து மீடியாக்களில் பகிர்ந்து பெருமை பீற்றினார்கள்.
அசிங்கம். கேவலம். சமத்துவத்திற்கு எதிரான மனித உரிமை மீறல் அது.
ஆக இளையராஜா அவர்களே… உங்கள் கூட இருப்பவர்கள் உங்களை ஓவராக துதி பாடினால் அவர்களை ஈவு இரக்கம் இன்றி வெளியேற்றுங்கள்.
உலகமே உங்களை கொண்டாடுவதை பலகோடி முறை நீங்கள் உங்கள் காதுகளால் கேட்டிருப்பீர்கள். அதை எவரும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
என் பாடல்களால் தான் உங்கள் வாழ்க்கை, நான் இப்படி இருப்பது தெரிந்தும் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்… என்று நீங்களே பேசுவது எல்லாம் சிறுபிள்ளைத்தனம். அது உங்களை சிறுமைப் படுத்தவே செய்யும். இசைஞானி என்கிற மனிதனின் இசைக்கு சிறுமை இல்லை என்று வைத்துக் கொண்டாலும் இளையராஜா என்கிற மனிதருக்கு சிறுமையே.
உங்களுக்கு இசையை தவிர வேறேதும் தெரியாது என்கிற பழைய பல்லவியை உங்கள் ஆதரவாளர்கள் திரும்ப திரும்ப பாடுவது அபத்தம்.
அப்படியா என்ன?
உங்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? இதில் நீங்கள் ஆன்மீகவாதி என்று சொல்வது இன்னும் பொருத்தமற்றதாக இருக்கிறது.
ஆன்மீகம் செக்யூரிட்டியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுமா என்ன? அந்த தொனி அதிகார உளவியலின் வெளிப்பாடு.
பகுத்தறிவு பெறுங்கள் இசைஞானியே. உங்கள் நண்பர் கமலையே சமூக ஞானி என்கிறார்கள். நீங்களாவது உண்மையான சமூக ஞானியாக மாறுங்கள்.
நீங்கள் எங்களுக்கு தந்திருக்கும் இசை தமிழனின் கடைசி தலைமுறை வரை போதும். ஆமாம். தமிழனின் கடைசி தலைமுறை வரை உங்கள் இசையும் உங்கள் புகழும் உயிர்த்திருக்கும். ஏன் தமிழனும் தமிழ்நாடும் இல்லாமல் போனால் கூட உங்கள் இசை இருக்கும்.
ஆக எங்களுக்கு இதுவரை நாங்கள் பார்த்த இசைஞானி இளையராஜா போதும். நாங்கள் பார்க்க விரும்புவது இளையராஜா என்கிற சாதாரண இயல்பான மனிதரை.
உங்கள் நடவடிக்கைகள் விஷயத்தில் சாதியை இழுப்பவர்கள் அற்பமானவர்கள். அது முட்டாள்தனம். அதைத் புறந்தள்ளுவோம்.
ஆன்மீகம், கடவுள் பக்தி எல்லாம் வேண்டாம் என நான் கூற விரும்பவில்லை. ஆனால் பாவலரின் சகோதரன் நீங்கள். உங்கள் இசையின் தொடக்கமும் நீங்கள் அறிந்ததே.
உலக உழைக்கும் வர்க்கம் குறித்தும் இந்தியாவின் சாதியம் குறித்தும்
மதங்களின் கலாச்சாரங்களின் பெண்ணடிமை குறித்தும் தெளிவான புரிதல் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த இளையராஜா இப்படி நடந்து கொள்ளவே மாட்டார். அவர் இசைஞானியாக தன்னை உணர மாட்டார். எளிய மனிதராகவே உணர்வார்.
அதை நீங்கள் மார்க்ஸிடம் இருந்து பெரியாரிடம் இருந்து அம்பேத்கரிடம் இருந்து சேகுவேராவிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். கற்றுக் கொள்ளலாம். இவர்கள் யாரும் உயிரோடு இல்லை எனினும் அவர்களது சிந்தனைகள் உயிரோடு இருக்கிறது. அவ்வளவு ஏன்? திருமாவளவனிடம் இருந்து கூட நீங்கள் தெரிந்து/கற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் இசைஞானி என்பதற்காக சக மனிதனுக்கான மரியாதையை மறுக்காதீர்கள். மனிதாபிமானம் மறக்காதீர்கள்.
சாதியும் மதமும் செய்வதையே நீங்களும் செய்வது அறம் அற்ற செயல். அது மனிதமற்றதும் கூட.
தவிரவும் இது உங்களின் இசையோடு வாழ்வதாக நீங்களே நம்புகிற தமிழ் இனத்தை சர்வாதிகார அரசியல் சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நேரமிது. உங்கள் தமிழ் இனத்தை காப்பாற்ற அந்த இனத்தில் ஒருவராக சக மனிதராக அன்பும் மனிதாபிமானமும் கொண்டு சமத்துவத்தை நேசிக்கிற பண்ணைப் புரத்து சின்னத்தாயின் மகனாக புத்துயிர் கொள்க எங்கள் இசைப்பெருமகனே… எங்கள் இசைப் பேரரசே!.
என்றும் உங்கள் இசைமீது
தீராக் காதலுடன் வாழ்ந்து மறையப் போகும் ஒருவனாக…
– முருகன் மந்திரம்