தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஹீரோக்கள் உள்ளனர்.
ஆனால், அதில் ஒரு சிலரே சினிமாவிற்காக தன்னை வருத்திக் கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றனர்.
அதில் தமிழ் சினிமாவில் சிவாஜிகணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு விக்ரம் முதன்மையானவராக வருகிறார்.
இவர் நடித்த முதல் படம் ‘என் காதல் கண்மணி’ 1990ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் (இதே நாளில்) வெளியானது.
இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இவரது ஆரம்ப கால படங்கள் அனைத்தையும் ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், போன்ற முன்னணி இயக்குனர்களே இயக்கினர்.
ஆனால் வெற்றி என்பது இவருக்கு வெறும் கனவாகி போனது.
ஆனால் சினிமா மீதுள்ள தீராத வெறியால், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு பாலாவுடன் இணைந்து சேது என்ற மாபெரும் காவியத்தை கொடுத்தார்.
இப்படியொரு நடிகர், தமிழ் சினிமாவில் இருக்கிறாரா? என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இவரது சினிமா வாழ்க்கையையே அப்படம் புரட்டி போட்டது.
இப்படத்தின் கேரக்டர் பெயரான சீயான் என்பதையே இவரது ரசிகர்கள் தற்போது அன்போடு அழைத்து வருகின்றனர்.
இதனையடுத்து “காசி, ஜெமினி, சாமுராய், கிங், தூள், சாமி உள்ளிட்ட பல படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக உயர்ந்தார்.
இதில், அந்நியன், காசி, பிதாமகன், தெய்வத் திருமகள், ஐ, இருமுகன் ஆகிய படங்களில் இவர் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி பலருக்கும் பாடமாக அமைந்தது.
பிதாமகன் படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
ஷங்கர் இயக்கிய ஐ படத்திற்காக தன் நிஜ உருவத்தையே உருமாற்றிக் கொண்டார்.
சிறந்த இயக்குனர்கள் தங்கள் வித்தியாசமான படைப்புகளை இவர் மூலமே பரிசோதித்து வருகின்றனர்.
முயற்சியும் திறமையும் இருந்தால், வெற்றி வெகு தொலைவில் இருக்காது என்பதற்கு விக்ரமே சிறந்த உதாரணம்.
வாசகர்களுடன் இணைந்து ஃபிலிமி ஸ்ட்ரீட் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்.
பின்குறிப்பு… இதே நாளில் (17/10/1952) சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி படமும் வெளியானது. அடடே… மிகச் சிறந்த கலைஞர்களுக்குள்தான் என்ன ஒரு அரிய ஒற்றுமை.