கருப்பு ஹீரோ ரஜினிகாந்த்.. அய்யனார் விஜயகாந்த்..; ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ விழாவில் பேரரசு

கருப்பு ஹீரோ ரஜினிகாந்த்.. அய்யனார் விஜயகாந்த்..; ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ விழாவில் பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி. வீர அமிர்தராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இயக்குநர் பேரரசு பேசும் போது…

அண்ணன் ஆர்.வி உதயகுமார் என்னை பக்திமான் என்று சொல்லிவிட்டு அவர் தான் பக்தியைப் பற்றி அதிகமாக பேசி இருக்கிறார். இப்படத்தின் சிறப்பு ”முனியாண்டியின் முனி பாய்ச்சல் இயக்கம் ராஜா முகம்மது”. இதுதான் சிறப்பு.

இது சினிமாவில் மட்டுமே சாத்தியம். சினிமாவில் மதம் சாதி கிடையாது. ஜெயகாந்த் ராஜா முகம்மது கூட்டணியை பார்க்கும் போது எனக்கு விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி ஞாபகம் வருகிறது.

ராவுத்தர் விஜயகாந்த் வளர்ச்சியில் மிக முக்கியமானவர், தன் நண்பனின் வெற்றிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவர்களுக்கு இடையில் மதம் இல்லை.

நட்பு மட்டுமே இருந்தது. குலதெய்வத்தின் பெயர் ரேஷன்கார்டில் இருக்காது, ஆனால் எல்லாமே அந்த தெய்வம் தான். என் குலதெய்வத்தை கும்பிடும் போது நானே பூசாரி ஆகிவிடுவேன்.

விருதுநகர் பக்கம் எல்லாம் முனியாண்டி தெய்வத்திற்கு பெரிய வழிபாடுகள் நடக்கும். குல தெய்வத்தை கும்பிடும் போது நாமே தீபம் காட்டலாம், பூஜை செய்யலாம். பெரிய கோவில்களில் இதை செய்வதற்கு பூசாரியை வைத்திருப்பார்கள்.

சிலர் கடவுளை நம்புபவன் முட்டாள் என்பார்கள். முனியாண்டியை நம்புபவர்கள் முட்டாள் என்று சொல்லிப் பாருங்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் முனியாண்டி குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்படுபவர். யார் எதுவும் சொல்லமாட்டார்களோ அவர்களை ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.

விஜயகாந்த் அவர்கள் தருமபுரி படத்தில் முனியாண்டி வேஷம் போட்டுவிட்டு வந்து நிற்கும் போது அய்யனார் போலவே இருந்தார். இந்த நாயகன் ஜெயகாந்திற்கும் முனியாண்டி வேஷம் சிறப்பாக பொருந்தி இருக்கிறது.

கருப்பாக இருப்பவர்களும் பெரிய ஹீரோக்கள் ஆகிவிட முடியும் என்று ரஜினிகாந்த் நிருபித்தார். அதிலிருந்து கருப்பான ஹீரோக்களும் ஜெயிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

பாரதிராஜா இயக்கத்திற்கு வந்தப் பிறகு தான் எங்களைப் போன்று கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு இயக்கத்திற்கான கதவு திறந்தது. செளந்தர்யன் பார்க்க சைலண்டாக இருப்பார். ஆனால் பாடல்களில் பட்டையை கிளப்பிவிடுவார். அப்படித்தான் இப்படத்தின் பாடல்களும் இருக்கிறது. பாடல்களில் முனியை விட காமம் மற்றும் காதலின் கனி அதிகமாக தெரிகிறது. இது போன்ற பாடல்களில் பாடலாசிரியர் ஸ்நேகன் பின்னி எடுப்பார். இதிலும் அப்படியே செய்திருக்கிறார்.

தயாரிப்பாளர் விருதுநகரை சேர்ந்தவர் என்று சொன்னார்கள். அது காமராஜர் பிறந்த ஊர். அதை நினைத்தே அவர் பெருமைப்பட வேண்டும். இன்னும் முதல்வராக வர விரும்புபவர்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியை கொடுப்போம் என்று தான் சொல்கிறார்கள். அவர் ஒருவரே என்றும் முதல்வர்களுக்கான அரிச்சுவடி. நடிகை மீரா ராஜ் சிறப்பாக நடனம் ஆடி நடித்திருக்கிறார்.

பாடலில் அவரின் நலினங்கள் சிறப்பாக இருந்தது. இப்பொழுதெல்லாம் நாயகிகளைப் பற்றி பேசவே பயமாக இருக்கிறது. எனவே சகோதரி மீரா ராஜ் அவர்களை சகோதரன் பேரரசு வாழ்த்துக்கிறேன்.

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பழமொழி சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் கூத்தாடி ரெண்டு பட்டால், ஊருக்கு கொண்டாட்டமாகி விடுகிறது.

நாம் எல்லோரும் ஒரே குடும்பம். நாம் நமக்குள் இப்படி சண்டையிடுவது நம் வளர்ச்சிக்கு நல்லதல்ல.. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் ராஜாமுகம்மது தனது வரவேற்ப்புரையில் பேசும் போது…

அளவற்ற அருளாளன் இறைவனின் திருப்பெயரால் இந்த உரையை துவங்குகிறேன். எங்கள் தயாரிப்பாளர் வீர அமிர்தராஜ் மற்றும் அவரின் மனைவி திலகவதி இல்லை என்றால் இந்த திரைப்படம் கிடையாது.

மதுரையில் என் நண்பன் ஜெயகாந்த் உடன் பாண்டி கோவிலில் அமர்ந்து அந்த காவல் தெய்வத்தின் கதைகளையும் அங்கு நடந்த அதிசய நிகழ்வுகளைப் பற்றியும் பேசும் போது, இந்த தெய்வத்தின் கதையை ஏன் நாம் திரைப்படத்தில் கொண்டு வரக்கூடாது. இதைப் பற்றி யாருமே பேசியதில்லையே என்ற எண்ணம் தோன்றியது. எனக்குத் தெரிந்து வருடத்தின் 365 நாட்களும் கடா வெட்டி பூஜை நடக்கின்ற கோவில் முனியாண்டி கோவிலாகத்தான் இருக்கும். சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

அந்த கோவிலின் பூசாரி அருள் வாக்கு சொல்லும் போது அவரின் குரல் மாறிப் போய், வேறொரு நபராகவே என் கண்களுக்குத் தெரிவார்.
நாங்கள் படம் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் பாண்டி கோவிலில் முதலில் உத்தரவு கேட்போம். என் நண்பனின் கண்களில் மூன்று தயாரிப்பாளரைக் காட்டியது.

அதில் முதலாமானவர் தான் எங்கள் தயாரிப்பாளர் வீர அமிர்தராஜ். எங்கள் தயாரிப்பாளருக்கு குல தெய்வம் முனியாண்டி தான். அவர்கள் இப்படத்தை தயாரிப்பதற்கு மிக முக்கிய காரணமும் அதுதான்.

தயாரிப்பாளர் இப்படத்தைப் பணத்துக்காக தயாரிக்கவில்லை என்றாலும் அவருக்கு இப்படம் நல்ல லாபத்தையும் கொடுக்க வேண்டும். நாயகனாக ஜெயகாந்திற்கும், இயக்குநரான எனக்கும் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம். அது அப்படியே நடக்கும் என்றும் நம்புகிறோம்” என்று பேசினார்.

நாயகன் ஜெயகாந்த் பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். இப்படம் உருவாக முதற்காரணம் பாண்டி கோவில் தான். நான் எல்லா முடிவுகளையும் பாண்டி கோவிலில் வைத்து தான் எடுப்பேன். அமாவாசை, பெளர்ணமி நாட்களில் நான் எப்போதும் பாண்டி கோவிலில் தான் இருப்பேன். என்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ராஜா முகம்மது வரும் போது, தயாரிப்பாளர் யார் என்று தெரிந்து கொள்ள பாண்டி கோவிலில் அழுது வேண்டினோம்.

முனி எங்களுக்கு தயாரிப்பாளரைக் காட்டியது. இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று நானும் இயக்குநரும் வேண்டி இருக்கிறோம். கண்டிப்பாக திரைப்படம் வெற்றிபெறும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்று பேசினார்.

Black skin Rajinikanth Ayyanar Vijayakanth Says Perarasu

தாணு – சூர்யா கூட்டணியின் ‘வாடிவாசல்’.; வெற்றிமாறன் – அமீர் திடீர் சந்திப்பு

தாணு – சூர்யா கூட்டணியின் ‘வாடிவாசல்’.; வெற்றிமாறன் – அமீர் திடீர் சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் அமீர் தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசும்போது தான் இயக்கி வரும் வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் இணைந்து அமீர் நடிக்கிறார் என்பதை தெரிவித்து இருந்தார்.

இது சூர்யா மற்றும் அமீர் மோதலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அமீரின் கேரக்டர் குறித்து பேச வெற்றிமாறன் அவரை சந்தித்து கதையை விவரித்து பேசியுள்ளார்.

இவர்கள் சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vettrimaran and Ameer Meeting regarding Vaadivasal

ஜப்பான் ரசிகர்களும் கொண்டாடிய ரஜினியின் ‘முத்து’ ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜப்பான் ரசிகர்களும் கொண்டாடிய ரஜினியின் ‘முத்து’ ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1995 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய ரஜினி திரைப்படம் ‘முத்து’.

கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தை கவிதாலயா நிறுவனம் சார்பாக இயக்குனர் கே பாலச்சந்தர் தயாரித்திருந்தார்.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரஜினி படத்திற்கு அவர் இசையமைத்த முதல் படம் இதுதான்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன் பாடல் கேசட் வெளியானது. இது ரஜினி படத்தின் பாடல் போல அல்ல என்று ரசிகர்கள் அப்போது கோபமடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர் படம் வெளியாகி ஒருவன் ஒருவன் முதலாளி மற்றும் தில்லானா தில்லானா ஆகிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, மீனா, ராதாரவி, பொன்னம்பலம், வடிவேலு, செந்தில், சரத்பாபு, விசித்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்ல ஜப்பான் நாட்டிலும் பட்டைய கிளப்பியது.

கிட்டத்தட்ட இந்த படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களும் பெருமளவில் ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இந்த நிலையில் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த டிசம்பர் மாதம் டிசம்பர் எட்டாம் தேதி முத்து படத்தை ரிலீஸ் செய்கிறது கவிதாலயா நிறுவனம்.

முத்து

Rajini Meena starrer Muthu rerelease on 8th December 2023

ஒரு வரலாறு ஆவணமாகிறது..; டிசம்பர் 8ல் ரிலீசாகும் ‘கூச முனிசாமி வீரப்பன்’

ஒரு வரலாறு ஆவணமாகிறது..; டிசம்பர் 8ல் ரிலீசாகும் ‘கூச முனிசாமி வீரப்பன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப்பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும். இந்த சீரிஸ் டிசம்பர் 8 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது.

இந்தியா, 23 நவம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லரை இன்று வெளியிட்டது.

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது.

இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​’கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) வியத்தகு என்கவுண்டரில் தனது முடிவைச் சந்தித்தார்.

வரலாறாக மாறிய அவரது வாழ்க்கைகதை காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது. வரவிருக்கும் ZEE5 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் விவரிக்கப்படும் ஒரு தனித்துவமான ஆவணம் ஆகும். இந்த சீரிஸ் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.

Trailer Link: https://youtu.be/Ho0JTx-mV8M

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்…

“இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வனக் கொள்ளைக்காரன் குறித்து, அதிகம் அறியப்படாத அவரின் வாழ்க்கைப் பக்கங்களை வழங்கும் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸை, பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சிக்கல்கள் மிகுந்த அவரின் வாழ்க்கை பற்றிய பல அறியப்படாத பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வீரப்பனின் வாழ்க்கை மற்றும் உள்ளூரில் அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கம், அவரது வெற்றிக் கதைகள் எனப் பல இட்டுக்கட்டப்பட்ட கதைகள் உலாவும் இந்தச் சமூகத்தில் இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ், ஒரு புதிய தெளிவான பார்வையை வழங்குமென நாங்கள் நம்புகிறோம்.

இந்தத் தொடர் பார்வையாளர்களை மனித வாழ்வின் வெவ்வேறு முகங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும், இந்தியாவின் கடந்த காலத்தின் குற்றவியல் உலகின் ஆழத்தை ஆராயும் கதையாகப் பார்வையாளர்களை இந்த சீரிஸ் கவர்ந்திழுக்கும்.”

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறுகையில்…

“வீரப்பனுடனான நேர்காணலைப் பெறுவதற்கு, நாங்கள் பெரும் முயற்சிகளையும், பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்தோம். முதல் முறையாக, இந்த நேர்காணலின் மிக விரிவான பதிப்பு ZEE5 OTT தளத்தில் பார்வையாளர்களுக்கு “கூச முனிசாமி வீரப்பன்” என்ற தலைப்பில் ஆவணக் கதையாக வழங்கப்படவுள்ளது.

வீரப்பனின் கதை நேர்மையுடனும் முழுமையுடனும், பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை உள்ளடக்கியதாகச் சித்தரிக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்த சீரிஸ் வெறும் ஆவணப்படம் அல்ல; இது ஒரு ஈர்க்கக்கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டதாகும்.

தயாரிப்பாளர் பிரபாவதி கூறுகையில்…

“உலகத் தரத்தில் உள்ளூர் கதைகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் ‘தீரன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தை நிறுவியுள்ளோம். எங்களின் முதல் தயாரிப்பான ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரு உயர்தரமான ஆவணத் தொடராக, இந்தியாவில் ‘டாக்கு-சீரிஸ்’ வகைக்கான எடுத்துக்காட்டாக இருப்பதோடு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் புதுமையான அனுபவத்தைத் தருமென நாங்கள் நம்புகிறோம்.

‘கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8 ஆம் தேதி ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது!

ZEE5 பற்றி ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.

கூச முனிசாமி வீரப்பன்

Koose Munisamy Veerappan release on 8th December 2023

‘இருட்டு அறையில் முரட்டுகுத்து’ போல ‘பருத்திவீரனை’ எடை போட்டு விட்டீர்களா? ஞானவேல் எதிராக அமீருக்கு ஆதரவாக பொன்வண்ணன்

‘இருட்டு அறையில் முரட்டுகுத்து’ போல ‘பருத்திவீரனை’ எடை போட்டு விட்டீர்களா? ஞானவேல் எதிராக அமீருக்கு ஆதரவாக பொன்வண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தன்னுடைய சமீபத்தில் பேட்டியில் ‘பருத்திவீரன்’ பட சமயத்தின் போது எழுந்த மனக்கசப்பை வெளியிட்டிருந்தார்.

அதில் அமீரை பற்றி அவர் பேசியது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிலர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் பலர் அமீருக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் இயக்குனர் சமுத்திரக்கனி அமீருக்கு ஆதரவாக பெரிய அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

தற்போது இயக்குனர் சுதா கொங்கரா, பாடலாசிரியர் சினேகன் & நடிகர் பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் பொன்வண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை இது…

‘பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய
தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்!
அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.
அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது,்அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்!

பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு . தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார்.

நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் … ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது.
இதனால்தான், பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.

படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும்,விமர்சனங்களாலும்,வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் , திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் ,
தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .

உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக ..
திருடன், வேலை தெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத் திமிரும், வக்கிரமாக இருந்தது..!
தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடை போட்டுவிட்டீர்களோ!
வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!
இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.!

பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்..

ப்ரியங்களுடன்…

பொன்வண்ணன்.

Actor Ponvannan statement against Gnanavelraja

திரைப்படமாகிறது திருக்குறள்.; ‘காமராஜ் – மகாத்மா காந்தி’ படங்களை தயாரித்தவர்களின் அடுத்த முயற்சி

திரைப்படமாகிறது திருக்குறள்.; ‘காமராஜ் – மகாத்மா காந்தி’ படங்களை தயாரித்தவர்களின் அடுத்த முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பாக, கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற அத்திரைப்படம், காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது.

தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறோம்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பாரதியின் வாக்கு மிகையில்லை என்றாலும், ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்புதான், தமிழின், தமிழ் பண்பாட்டின், தமிழரின் மேன்மையை மேற்கத்திய அறிவுலகம் அண்ணாந்து பார்த்தது.

தேசத்தந்தை மகாத்மாவும், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் இன்று உலக அரங்கில், அறிஞர்கள் மத்தியில் இந்தியாவின் முகங்களாக அறியப்படுகின்றனர். பிரபல ரஷ்ய எழுத்தாளர் ‘டால்ஸ்டாய்’ ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட பின்புதான் காந்திஜிக்கு திருக்குறள் அறிமுகமாகிறது.

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை கட்டளையாக ஏற்றே திருக்குறளை திரைப்படமாக்கத் தீர்மானித்தோம்.

பைபிளிற்குப் பின் உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அச்சு ஊடகம் என்பது எழுத்தறிந்தோர்க்கு மட்டுமே. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும்; இசையைப் போல; ஓவியத்தைப் போல;

திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம்.

இமாலயக் கருத்துகளை ஈரடியில் எளிதாகச் சொல்லிவிடுகிறது திருக்குறள். ஆனால் திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும்போது உணர முடிந்தது.

அறத்தினை வலியுறுத்த தோன்றிய நீதி நெறிநூல் என்றாலும் குறள் வெறுமனே பிரசார இலக்கியமல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதை பிரதிபலிக்க முயற்சித்துள்ளோம்.

ஒரு படைப்பின் வழியே படைப்பாளியை அறிந்து கொள்ள முடியும். ஒரு குறளை காட்சியமைக்க முயலும்போது, அதனூடாக திருவள்ளுவரும், ரத்தமும், சதையுமாக உயிர்த்தெழுந்து வருகிறார். அவ்வகையில் திரைக்கதை முழுவதும் திருவள்ளுவரும் வியாபித்துள்ளார்.
நிறைந்துள்ளார். மலரில் மணம் போல..

‘பரந்து கெடுக உலகியற்றியான்’ என தீட்சண்யமான கண்களோடு, அறச் சீற்றம் கொள்ளும் வள்ளுவர், “அனிச்சமும் அன்னத்தின் தூவியும்’ என மென்மையான காதலனாக கனிந்தும் நிற்கிறார்.

திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது.

அதோடு அன்றைய மெய்யியல், அறவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.

‘காமராஜ்’, முதல்வர் மகாத்மா, திரைப்படங்களைத் தயாரித்த எங்களுக்கு இப்பணி கிட்டியிருப்பது முன் வினைப்பயனே!

திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.

இத்திரைப்படத்திற்கென தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்க, வரும் தைத்திங்கள் திருவள்ளுவர் தினத்தன்று இத்திரைப்படத்திற்கான துவக்க விழா நடைபெறுகிறது.

A.J.பாலகிருஷ்ணன்

Thirukural will be cinema in Balakrishnan direction

More Articles
Follows