தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சிறந்த கலைஞனின் மகன்… ஆனால் திரைத்துறைக்கு ஏற்ற எந்த ஒரு வித்தையும் நுழைவதற்கு முன் கற்றுக்கொள்ளாதவர்.
சினிமாவில் எதையும் ‘நேருக்கு நேர்’ பார்த்துவிட வேண்டும் என்ற எந்த பிடிப்பும் இல்லாதவர். ஆனால் நுழைந்த ஐந்து வருடங்களிலேயே பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு.
அன்று முதல் தொடங்கியது இந்த சிங்கத்தின் திரையுலக வேட்டை. ஒரு பக்கா பார்முலாவில் ‘நந்தா’வாக தொடங்கினாலும் இன்றுவரை எந்த ‘பந்தா’வும் இல்லாமல் இருப்பவர்தான் நடிகர் சூர்யா.
இன்று ஜூலை 23ஆம் தேதி இவர் தன் 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று திரையுலகில் 20 வருடங்களை கடந்து விட்டார். இந்தக் காலக் கட்டங்களில் தன் திறமைகளை ஒவ்வொன்றாக வளர்த்து கொண்டு இன்றைய சீனியர் நடிகர்களுக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பவர்.
தேர்ந்தெடுக்கும் கதைகள், அறிமுக இயக்குனர் மற்றும் பிரபல இயக்குனர்களின் கதைக்கேற்றவாறு தன்னையும் தன் உடல்வாகுவை அமைத்தல் என இவரின் அர்ப்பணிப்பு இவரது இன்றைய வெற்றிக்கு பெரும் துணையாக இருந்து வருகிறது.
இன்று விஜய் – அஜித் போட்டிக்கு இடையில் சிங்கமாக உருவெடுத்து வளர்ந்துள்ள ஹீரோ சூர்யா என்றால் அது மிகையல்ல! அவரைப் பற்றிய சில குறிப்புகள் இதோ உங்களுக்காக….
- சென்னை, லயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர். விஜய், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் இவரது கல்லூரி தோழர்கள்.
- கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் சூப்பர் வைசராக ஒரு சாதாரண நபராக நடிகரின் மகன் என்ற மமதை இல்லாமல் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார்.
- அதன்பின்னரே வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்தில் வாய்ப்பினை பெற்றார்.
- தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவருக்கு ‘நந்தா’, ‘ப்ரண்ட்ஸ்’ உள்ளிட்ட படங்கள் திருப்புமுனையாக அமைந்து.
- நந்தா படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதன்பின்னரே இவரது சினிமா பயணம் ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தார். நிறைய படங்களில் இவரது நடிப்புக்கு பலதரப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தது.
- ‘மௌனம் பேசியதே’ (2002), ‘காக்க காக்க’ (2003), ‘பிதாமகன்’ (2003), ‘பேரழகன்’ (2004), ‘ஆய்த எழுத்து’ (2004), ‘கஜினி’ (2005), ‘சில்லுனு ஒரு காதல்’ (2006), ‘வேல்’ (2007), ‘வாரணம் ஆயிரம்’ (2008), ‘அயன்’ (2009), ‘ஆதவன்’ (2009), ‘சிங்கம்’ (2010), ‘ஏழாம் அறிவு’ (2011), ‘மாற்றான்’ (2012) என ஒவ்வொரு படங்களுக்காகவும் தன் தோற்றத்தையே மாற்றிக் கொண்டார்.
- இதில் கௌதம்மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்காக ‘சிக்ஸ் பேக்ஸ்’ வைத்து இன்றைய இளம் ஹீரோக்களுக்கு முன் உதாரணமாய் திகழ்ந்தார். மேலும் வயதானவர், காலேஜ் பையன், மிலிட்டரி மேன், லவ்வர் பாய் என பல தோற்றங்களில் தோன்றியிருந்தார்.
- சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை ‘நந்தா’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய 3 படங்களுக்காக பெற்றுள்ளார்.
- பல ஆண்டுகளாக தன்னை இந்த சமுதாயத்திற்காகவும் அர்ப்பணித்து வருகிறார். ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
- இதில் பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து அவர்களை படிக்க வைக்கிறார்.
- மேலும் ஆதரவற்றோர் மற்றும் காசநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் வழங்கி வருகிறார். இன்று இதனால் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
- இவரது ஐந்தாவது படத்தில் ஜோடியாக நடித்த ஜோதிகா இன்று இவரது வாழ்வில் ஜோடியாகி ஐக்கியமாகி விட்டார். ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்து இன்று உயிரிலே கலந்துவிட்டனர்.
- பின்னர் காதலில் ‘காக்க காக்க’ வைத்து இந்தப் ‘பேரழகன்’ சூர்யாவை மணந்தார் ஜோதிகா.
- பெற்றோர் சம்மதத்துடன் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 திருமணம் செய்து கொண்டனர்.
- இதனால் இவர்களின் காதல் இன்று வரை அதே புத்துணர்ச்சியுடன் ‘சில்லுனு ஒரு காதல்’ஆக இருந்து வருகிறது. தற்போது இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
- தந்தை நடிகர் சிவக்குமார், தம்பி நடிகர் கார்த்தி, மனைவி நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் திரைத்துறையில் இருந்தாலும் இவரின் பிள்ளைகளை சினிமா பக்கமே கொண்டு வராமல் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளைப் போல வளர்த்து வருகின்றனர்.
- ஏர்செல், சன்ஃபீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், மலபார் கோல்ட், பாரதி சிமெண்ட்ஸ், இமாமி நவரத்னா, நெஸ்கஃபே, டிவிஎஸ் மோட்டார்ஸ், க்ளோஸ்-அப் டூத்பேஸ்ட் போன்ற உயர்தரமான நிறுவனங்களுக்கும் அதன் பொருட்களுக்கும் விளம்பரத் தூதராக இருந்து வருகிறார் சூர்யா.
- 2016ஆம் ஆண்டில் 24 என்று பெயரிடப்பட்ட படத்தில் 3 வேடங்களில் அசத்தினார். அதில் ஆத்ரேயா என்ற கேரக்டரில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
- பெற்ற விருதுகள்….
- 2003 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ‘ஐடிஎஃப்ஏ (ITFA) விருதையும், ‘காக்க காக்க’ படத்திற்காக பெற்றார்.
- 2003ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ ‘பிதாமகன்’ படத்திற்காக பெற்றார். 2004ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருதை ‘பேரழகன்’ படத்திற்காக வென்றார்.
- 2009ஆம் ஆண்டு ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, ‘விஜய் விருதுகளை’, ‘அயன்’ மற்றும் ‘ஆதவன்’ படங்களுக்காகப் பெற்றார்.
- 2010ஆம் ஆண்டு ‘சிங்கம்’ படத்திற்காக ‘பிக் FM’ மற்றும் ‘விஜய் விருது’ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
- இன்று ஜீலை 23ஆம் தேதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்து உருவாகிவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.