ஆழமான காதல்… ஒன்பது குழி சம்பத் விமர்சனம் – 3.25/5

ஆழமான காதல்… ஒன்பது குழி சம்பத் விமர்சனம் – 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – பாலாஜி மகாராஜா, நிகிலா விமல், அப்புக்குட்டி, இந்திரன்
இயக்கம் – ஜா. ரகுபதி
இசை – வி.ஏ. சார்லி
ஒளிப்பதிவாளர் – கொளஞ்சிகுமார்
எடிட்டர் – தீனா
வெளியீடு.. ஆன்லைன்
தயாரிப்பு – 80-20 பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : ரஞ்சித் குமார் பாலு மற்றும் ஜிகே. திருநாவுக்கரசு

கதைக்களம்…

‘ஒன்பது குழி’ கோலி விளையாட்டில் கில்லி இப்பட நாயகன் பாலாஜி.

வேலை வெட்டிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி கொண்டிருக்கிறார். வீட்டில் அம்மா மட்டும்தான். ஆனால் அம்மாவிடம் பேசாமலேயே 14 வருடங்களை கடந்துவிடுகிறார்.

அதே ஊரில் வசிக்கும் கல்லூரி மாணவி நிகிலா விமல் (இவருக்கு இதுதான் முதல் படம்.. இதில் தான் அறிமுகம்)

நாயகி நிகிலாவை பாலாஜி காதலிக்க, வீட்டிற்கே சென்று பெண் கேட்கிறார். ஆனால் காதலை மறுத்து பாலாஜியை துடைப்பத்தால் அடித்துவிடுகிறார் நிகிலா.

இதனால் தற்கொலை செய்துக் கொள்ள துணிகிறார் பாலாஜி.

பின்னர் தன் தற்கொலையால் அவளுக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் சம்பத் (பாலாஜி மகாராஜா). கிராமத்து இளைஞனுக்கு உரிய அதே கெத்து. வெட்டி பந்தா. ஊதாரித்தனமான முரட்டுக்காளையை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

நாயகியாக நிகிலா விமல். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதற்கேற்ப தன் கேரக்டரின் வலியை உணர்ந்து நடித்திருக்கிறார். மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பாலாஜியின் நண்பனாக அப்புக்குட்டி. நிறைய காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். பாலாஜி அம்மா, நாயகியின் பெற்றோர், நிகிலாவின் அண்ணா ஆகியேரின் நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது. அச்சு அசல் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வி.ஏ.சார்லியின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஒரு காட்சியில் நாயகன் பாடும் இழவு பாடல் தேவையற்றது. எடிட்டர் வெட்டி எறிந்திருக்கலாம்.

படத்திற்கு பெரிய பலம் ஒளிப்பதிவாளர்தான். கொளஞ்சிகுமார் கைவண்ணத்தில் காட்சி அத்தனையும் அழகு.

படத்தை இயக்கியிருப்பவர் ரகுபதி. வழக்கம்போல காதல் கதை என்றாலும் படத்தின் க்ளைமாக்சில் எதிர்பாராத ஒன்றை கொடுத்திருப்பது பாராட்டு.

இதுபோல காதல் கதைகளில் க்ளைமாக்ஸ் நெகட்டிவ்வாக இருப்பது ஏனோ? ஆனால் அதுவே ரசிகர்கள் மனதை ரணமாக்குகிறது. வாழ்த்துக்கள் சார்.

ஆக மொத்தம்… ஒன்பது குழி சம்பத் – ஆழமான காதல்

நில்… டேனி… செல்…; டேனி திரை விமர்சனம்

நில்… டேனி… செல்…; டேனி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தஞ்சாவூர் மாவட்ட ஒரு கிராமத்தில் இளம்பெண் எரித்து கொலை செய்யப்படுகிறார்.

சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை வைத்து அவளது கணவர்தான் கொலையாளி என முடிவு செய்து அவரை கைது செய்கிறார் சப் இன்ஸ்பெக்டர் துரை சுதாகர்.

அப்போது தான் அங்கு இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார் வரலட்சுமி.

இந்த வழக்கில் அவளது கணவர் கொலையாளி இல்லை என கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

அப்படி என்றால் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக? ஏன்? என போலீஸ் நாய் டேனியுடன் இணைந்து கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

குற்றவாளியை டேனி எப்படி காட்டி கொடுத்தது.? கொலைக்கான காரணம் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

காவலர்களுக்கே உரித்தான கம்பீரம்… அத்துடன் கண்களில் திமிர் என கதையின் நாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி.

இவரின் அறிமுக காட்சி கொஞ்சம் எதிர்பாராத ஒன்றுதான். விவசாய நிலத்தில் வேலை செய்கிறார். அதையும் ஒரு துப்பறியும் காட்சியில் (கார் டயர் பற்றிய கணிப்பு) வைத்துள்ள இயக்குனரை பாராட்டலாம்.

என்ன ஒன்று…. வரலட்சுமிக்கு காதல் காட்சிகள் வைத்திருக்கலாம். ஒரேடியாக சீரியஸ் சப்ஜெட்ட்டாக இருக்கிறது. மேலும் வரலட்சுமி பாஸ்ட்டாக பேசுவதால் சில டயலாக்குகள் சரியாக டெலிவரியாகவில்லை.

களவாணி 2 படத்தில் வில்லனாக கலக்கியவர் துரை சுதாகர். இதில் வரலட்சுமிக்கு அடுத்தப்படியாக யாருப்பா இந்தாளு? என கேட்க வைக்கிறார்.

இவர் கொலைக்கான விசாரணை செய்யும்போது நிஜ போலீசை காட்டுகிறது. அதாவது கேசை முடித்தால் போதும் என இவர் காட்டும் ஆர்வம் சில போலி போலீஸை காட்டுகிறது.

அதுபோல் யோவ்.. போயா வாயா என மக்களை திட்டும்போது அப்படி பிரதிபலிக்கிறார். ஒரு வேளை இவர் காவல்துறையில் கறுப்பு ஆடு ஆக இருப்பாரோ? எனவும் எண்ணத் தோன்றுகிறது.

நாயின் டிரைனர் ஆக கவின் நடித்துள்ளார். கொடுத்த வேலைக்கு பொருத்தம்.

டிவியில் கலக்கி கொண்டிருக்கும் அனிதா சம்பத் அவர்கள் வரலட்சுமியின் தங்கையாக நடித்துள்ளார். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்றுதான். அழகில் கவர்ந்தாலும் முகத்தில் ஓவர் மேக்அப்பை குறைத்திருக்கலாம்.

வில்லனாக வினோத் கிஷன். போதை அடிமைக்கு ஏற்ற முகம். அதே சமயத்தில் மிரட்டலான பார்வை என நம்மை கவர்கிறார்.
நல்ல நடிகர் வேல ராமமூர்த்தி. ஆனால் அவரின் கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சொன்னீங்க.. நாய் டேனியை பத்தி சொல்லையே கேட்குறீங்களா..?

நாய்க்கு ஓவர் பில்டப் கொடுத்துள்ளனர். அது குரைக்கும்போது எச்சில் தெறிப்பது வரை காட்டியுள்ளனர். அந்தளவுக்கு ஒளிப்பதிவு உள்ளது. ஆனால் பில்டப் அளவுக்கு இன்வஸ்டிகேஷன் அந்தளவுக்கு இல்லை.

கதையின் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். பாடல் காமெடி என கொடுத்து பட சோர்வை தவிர்த்திருக்கலாம்.

ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சாய் பாஸ்கரின் பின்னனி இசை பலவீனம்.

நல்லவேளை படத்தை ஒன்றரை நேரத்தில் முடித்துவிட்டார் எடிட்டர். அதனால் தப்பித்து விட்டோம் என்று சொல்லி கொள்ளலாம்.

எல்.சி. சந்தானமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். ஹீரோயின்.. நாய்.. வில்லன் என கேரக்டர்களில் கவனம் செலுத்தியவர் த்ரில்லர் கதையில் ட்விஸ்ட் வைத்திருக்கலாம். யூகிக்க முடிகிறது என்பதால் சுவராஸ்யம் போதவில்லை.

ஆனால் பிள்ளைகளுக்கு அடிக்கடி பணம் கொடுத்து ஓவர் செல்லம் கொடுத்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறிச் செல்லும் என்பதையும் தீயவர்களின் நட்பு அவர்களை கெடுத்துவிடும் என்பதை அழகாக காட்டியுள்ள இயக்குனரை பாராட்டலாம்.

ஆக… நில்…. டேனி… செல்… அதுதான் இந்த டேனி

Danny movie review

லாக் டவுன் சீரியல்… பெண்குயின் விமர்சனம் – 1.5 / 5

லாக் டவுன் சீரியல்… பெண்குயின் விமர்சனம் – 1.5 / 5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கீர்த்தி சுரேஷின் பெயர் ரிதம்.

இவருக்கும் லிங்காவுக்கும் திருமணம் நடக்கிறது. இவர்களுக்கு அஜய் என்ற 2 வயது குழந்தை இருக்கிறது. ஒரு நாள் காணாமல் போகிறான் அஜய்.

உன் அலட்சியத்தால் பொறுப்பின்மையால் அஜய் தொலைந்துவிட்டான். இனி உன்னோட வாழ முடியாது என லிங்கா கீர்த்தியை பிரிந்து விடுகிறார்.

கிட்டதட்ட 5 வருடங்களாக தன் மகனை தேடுவதையே வேலையாக வைத்திருக்கிறார் கீர்த்தி. இவரின் நிலையறிந்து இவரை திருமணம் செய்கிறார் கௌதம் (மாதம்பட்டி ரங்கராஜ்).

ஒரு வருடத்தில் நிறைமாத கர்ப்பிணியாகிறார் கீர்த்தி.

அப்போது காணாமல் போன அஜய் கிடைக்கிறார். ஆனால் குழந்தை எதையும் பேசாமல் அதிர்ச்சிலேயே இருக்கிறான்.

எந்த மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அப்போது அஜய்க்காக முதல் கணவர் கீர்த்தியின் வாழ்க்கையில் வருகிறார்.

அதன் பிறகு என்ன ஆனது? அஜய்யை கடத்தியவர் யார்? இந்த 6 வருடங்களில் அவனுக்கு என்ன நடந்தது? எங்கிருந்தான்..? குழந்தை கடத்தப்பட என்ன காரணம்? என கர்ப்பிணியாக இருந்து கண்டுபிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கேரக்டர்கள்…

படத்தில் ஹீரோ ஹீரோயின் எல்லாம் கீர்த்தி தான். மகா நடிகை படத்தில் அப்படியொரு நடிப்பை கொடுத்திருந்தார். இதில் அதில் பாதியளவு கூட இல்லை.

மகனை தேடி பிடிக்கும் அந்த இடைவேளை காட்சியில் மட்டும் கொஞ்சம் ஓகே.

ஆனால் படம் முழுக்க முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்னஸ் இல்லை. ஹிந்தி சினிமாவுக்கு போகிறேன் என தன் முகபொழிவை கெடுத்து விட்டார் போல. (ப்ளாஷ்பேக்கில் கூட அழகாய் இல்லையே கீர்த்தி..?

இனி ரஜினி முருகன் கீர்த்தியை பார்க்கவே முடியாதா?

கீர்த்திக்கு அடுத்தபடியாக குழந்தை அத்வைத்தை பாராட்டலாம். அழகான அமைதியாக முகம். அவன் என்ன செய்வான்? என்ற எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே இருக்கிறான்.

ஆனால் அவன் திடீரென க்ளைமாக்சில் பேசுவது நம்ப முடியவில்லை.

கீர்த்தியின் முதல் கணவர் லிங்கா… 2வது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ்.. லிங்கா கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

மெகந்தி சர்க்கஸ் படத்தில் நல்ல நடிப்பை கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் இதில் ஏதோ அமெரிக்க மாப்பிள்ளை என்கிற அளவில் வந்து செல்கிறார்.

கீர்த்தியின் தோழிகள் இருவரும் அழகாக வருகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் கொடுக்கும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் செம காமெடி. நாடகத்தனமாக உள்ளது.

டாக்டராக நடித்திருக்கும் மதியின் நடிப்பு மிரட்டல். ஆனால் போலீஸ் ஸ்டேசனில் டாக்டரும் கீர்த்தியும் நடத்தும் அந்த கேள்வி பதில் விளையாட்டு… முடியலடா சாமி…

போலீஸ் விசாரணை என்றால் போலீஸ்தான் அடித்து துவைத்து உண்மையை வர வைப்பார்கள். ஆனால் இங்கு கீர்த்தியே விசாரணை செய்கிறார். என்ன கொடுமை சார்? இது..

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்தை சாரி.. சாரி.. இந்த சீரியலை பார்க்க முக்கிய காரணமாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி தான். மலைபிரதேச காட்சிகளை அழகாய் படம் பிடித்திருக்கிறார். அப்படியே கீர்த்தியை அழகாய் படம் பிடித்திருக்கலாம்.

இசையமைத்துள்ளவர் சந்தோஷ் நாராயணன்… பாடல் இல்லை என்பது ஆறுதல். பின்னணி இசை சில இடங்களில் மட்டும் ஓகே.

படத்தை இயக்கியிருக்கிறார் ஈஸ்வர் கார்த்தி. ஒரு தாய்மையின் உணர்வை படம் பிடிக்க முயற்சித்துள்ளார்.

6 வருடங்களாக தன் குழந்தையை தேடி அலைகிறார் ஒரு தாய். குழந்தை கிடைத்த அந்த நாளிலேயே குழந்தையை தனி அறையில் படுக்க வைக்கிறார். இவர் கணவருடன் வேறு அறையில் படுத்துக் கொள்கிறார். எந்த அம்மா இப்படி செய்வார்?

ஏற்கெனவே தன் மகனை தொலைத்து விட்டு தவிக்கிறார் கீர்த்தி. ஆனால் அவர் கணவர் அவரை எப்போதுமே தனியாகவே விட்டு விடுகிறார். வீட்டில் கூட குழந்தை பாட்டு கேட்டு இவரே செல்கிறார். கணவரை அனுப்ப மாட்டாரா?

கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தியே எல்லாவற்றையும் கண்டுபிடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர். அவருக்கு அவர் வளர்க்கும் நாய் கொஞ்சம் உதவுகிறது.

முதல் பாதி ஆமை வேகம் என்றால் 2ஆம் பாதி சொதப்பல் க்ளைமாக்ஸ்.

இனி சீரியல் டைப் படங்களை தயாரிக்க கார்த்திக் சுப்பராஜ் முடிவெடுத்துவிட்டாரா? என தெரியவில்லை.

ஆக.. பெண்குயின்.. லாக்டவுன் சீரியல்

Penguin review rating

WELL DONE VENBA….. பொன்மகள் வந்தாள் விமர்சனம் 3.5/5

WELL DONE VENBA….. பொன்மகள் வந்தாள் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜோதிகா, பார்த்திபன், தியாகராஜன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், வினோதினி, மனோகர், பிரதீபா மற்றும் பலர்.
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : ராம்ஜி
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : பெட்ரிக்
பிஆர்ஓ: யுவராஜ்
தயாரிப்பாளர் : நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட்

கதைக்களம்…

2004 ஆண்டு ஊட்டியில் 5 சிறுமிகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் காரணம் ஒரு வட இந்தியாவை சேர்ந்த சைக்கோ பெண் ஜோதி தான் காரணம் என அந்த பகுதி மக்களே சொல்லி வருகின்றனர்.

ஒரு சிறுமியை ஜோதி கடத்தும்போது 2 இளைஞர்கள் அவளை தடுக்க துப்பாக்கியால் அவர்களை சுட்டுக் கொல்கிறார் ஜோதி.

கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு பெட்டிசன் பெத்துராஜ் (பாக்யராஜ்) அந்த வழக்கை எடுக்கிறார். ஜோதி குற்றவாளி இல்லை என அவருக்காக வாதாட வருகிறார் வெண்பா (ஜோதிகா)

ஆனால் ஜோதி தற்போது உயிரோடு இல்லை. 15 வருடங்களுக்கு முன்பே ஜோதியை போலீசார் என்கௌண்டர் செய்துவிட்டனர்.

உயிரோடு இல்லாத ஜோதிக்கு நியாயம் கேட்க வரும் பாக்யராஜ் மற்றும் ஜோதிகா யார்? அவர்களுக்கு ஜோதி என்ன உறவு?

சிறுமிகளை கொலை செய்த சைக்கோ பெண்ணை இவர்கள் ஆதரிப்பது ஏன்? ஜோதி குற்றவாளி இல்லை என்றால் உண்மையான குற்றவாளி யார்?

சிறுமிகளை கடத்தியவர்கள் யார்? என்ற பல கேள்விகளுக்கு விடையே இந்த பொன் மகள் வந்தாள்.

கேரக்டர்கள்…

தனது 2வது இன்னிங்சில் சவாலான வேடங்களை ஏற்று வருகிறார் ஜோதிகா. அவருக்கு நிறைய பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

கோர்ட்டில் பேசும் வசனங்களில் நல்ல உச்சரிப்பை கொடுத்துள்ளார். சென்டிமெண்டில் நம்மை ஈர்க்கிறார். போராடி ஜெயிக்க இது விளையாட்டு அல்ல.. நீதி என ஜோர் பேசும் வசனங்கள் நச்.

வார்த்தை விளையாட்டு வித்தகர் பார்த்திபனுடன் ஜோ மல்லுக்கட்டும் போது எல்லாம் ரசிக்க வைக்கிறார்.

ஜோதிகாவிற்கு அழகு அவரது புன்னகைதான். ஆனால் தற்போது ஏற்கும் நாச்சியார், தம்பி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் சீரியஸ் ஜோதிகாவையே காண முடிகிறது. மறந்தும் கூட சிரிக்க மறுக்கிறார். அப்ப்ப்போ கொஞ்சம் சிரிச்சு வைங்க ஜோ.

பார்த்திபனுக்கு இந்த கேரக்டர் நல்ல பெயரை பெற்றுத் தரும். டாக்டர்கிட்ட எய்ட்ஸ் பதிலா பைல்ஸ் சொன்ன அதற்கு ஏத்த வைத்தியம் தான் அவரு பார்ப்பாரு.. அதான் வக்கீல் கிட்ட பொய் சொல்லாம சொல்லனும்.. EVIDENCE illa EVI கூட உங்களால கொண்டு வர முடியாது என பார்த்திபன் நக்கல் அடிக்கும் போது எல்லாம் சபாஷ் போட வைக்கிறார்.

பெட்டிசன் பெத்துராஜாக பாக்யராஜ். வித்தியாசமான வேடத்தில் கவர்கிறார்.

சைல்ண்ட அதே நேரத்தில் வைலண்ட் என தியாகராஜன் திக் திக் நடிப்பை கொடுத்துள்ளார். கோபம் வந்த பின் அவரது முகத்தில் கன்னம் கண்கள் வரை நடித்துள்ளது.

பிரதாப் போத்தன், பாண்டியராஜன், சுபு பஞ்சு, வினோதினி உள்ளிட்டோர் கேரக்டர்களும் ஜோதி மகள் கேரக்டரும் நம் மனதில் நிற்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

96 படத்துக்கு இசையமைத்த இருந்த கோவிந்தா வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் கதையுடன் ஒன்றி போகிறது. ஆனால் மனதில் தான் நிற்கவில்லை. இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சென்டிமெண்ட் காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் பலம்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி அசத்தியிருக்கிறார். ஊட்டி முதல் நம் உணர்வு வரை படம் பிடித்து காட்டியிருக்கிறார். ஜோ பாக்யராஜ் பேசும் காட்சிகள், ஜோதியின் கல்லறை காட்சிகள், தியாகராஜன் காட்சிகள் என அனைத்து அருமை.

இவரை போல் ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம். 15 வருடங்களுக்கு முன்பு அந்த சம்பவ இடத்திற்கு பார்த்திபன் செல்வது போல அமைக்கப்பட்ட காட்சிகள் அருமை.

இயக்கம் பற்றிய அலசல்…

அறிமுக இயக்குனர் ஜே ஜே பெட்ரிக் இயக்கியிருக்கிறார். பாலியல் தொல்லையால் அவதிப்படும் சிறுமிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல பாடம் சொல்லியிருக்கிறார்.

முக்கியமாக எப்படி உடை உடுத்தனும் நடந்துக்கனும் என பெண்களிடம் சொல்லும் பெற்றோர்கள் தங்கள் வீட்டு ஆண்களிடம் எப்படி பெண்களிடம் நடந்து கொள்வது என சொல்வதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

Good Touch… Bad Touch என்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமே சொல்லிக்கொடுக்கிறோம். ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கனும்.

இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் நல்ல ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.

என்னதான் நல்ல கருத்துக்கள் இருந்தாலும் படத்தில் ஆங்காங்கே சோர்வை தரும் காட்சிகள் உள்ளது.

கோர்ட்டில் பாய்ண்ட் பை பாய்ண்ட்டாக பேசும் ஜோதிகா திடீரென தன் பெர்சனல் பக்கங்கள் பேசிக் கொண்டிருக்கிறார். அது சீரியல் டைப் போல உள்ளது. அதுபோல் ப்ளாஷ் பேக்கில் காட்சிகள் இன்னும் உணர்வை கொடுத்திருக்கலாம்.

நம் சட்டத்தின் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் காவல்துறை செய்யும் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

ஆதாரம் இல்லாமல் எந்த வழக்கையும் கோர்ட் விசாரிப்பதில்லை. அதை முடிப்பதும் இல்லை. ஆனால் இங்கே உண்மை மட்டுமே ஆதாரமாக உள்ளது என்பதையும் காட்டியிருப்பது சிறப்பு. ஆனால் அது செல்லும்படியாகுமா?

ஆக.. அனைவரும் பார்க்க தகுந்த படத்தை கொடுத்துள்ளனர் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் படக்குழுவினர்.

WELL DONE VENBA… பொன்மகள் வந்தாள்

Pon Magal Vandhal review rating

விந்தணு வித்தை… தாராள பிரபு விமர்சனம்.. 3.5/5

விந்தணு வித்தை… தாராள பிரபு விமர்சனம்.. 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஹரீஷ் கல்யாண் ஒரு விளையாட்டு வீரர். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்க அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரும் தன்யாவும் காதலித்து வருகிறார்கள்.

விவேக் ஒரு டாக்டர். குழந்தை வேண்டும் என்று வரும் தம்பதியருக்கு குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணு உள்ள டோனரை தேடுகிறார்.

அப்போது ஹரீஷ் கல்யாண் இவரிடம் சிக்க அவரை சம்மதிக்க வைத்து விந்தணு டோனராக்குகிறார்.

அப்போதுதான் தன்யாவுக்கும் ஹரீஷ் கல்யாணுக்கும் கல்யாணம் ஆகிறது.

ஆனால் தன்யாவிற்கு குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்ன பிரச்சனைகள் நடந்தது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக நடித்து ரசிகர்களை தன் வசம் படுத்திவிட்டார் ஹரீஷ் கல்யாண். சின்ன சின்ன பாவனைகளில் கவனம் ஈர்த்துள்ளார்.

நாயகி தன்யா ஹோப் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தின் மெயின் பில்லர் நடிகர் விவேக் தான். ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளார். மீண்டும் சினிமாவில் விவேக் அலை வீச வாழ்த்துவோம்.

மற்ற கேரக்டர்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் படத்தின் கதைக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி புளூஸ், ஓர்கா, சான் ரோல்டன், விவேக் மெர்வின் என பலர் இசையமைத்துள்ளனர்.

பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓகே.

செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்.

திருமணமான தம்பதியருக்கு குழந்தையின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்.

விந்தணுவின் முக்கியத்துவத்தையும் நம் ஆரோக்கியத்தையும் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார்.

விந்தணு தானம் செய்பவர் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதையும் [புரிய வைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து.

விக்கி டோனர் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும் அதை தமிழ் சினிமாவுக்கு ஏற்றவாறு ஆபாசம் இல்லாமல் கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ‘தாராள பிரபு’…. விந்தணு வித்தை

Dharala Prabhu Review rating

First on Net அஜீரணம்… ஜிப்ஸி விமர்சனம்… 2.75/5

First on Net அஜீரணம்… ஜிப்ஸி விமர்சனம்… 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிப்ஸி என்பது ஒரு வகையான ஜீப் என்பது நமக்கு தெரியும்.. இங்கே ஹீரோவின் பெயரே ஜிப்ஸிதான். ஏன் அவர் ஜீப் ஓட்டுவாரா? என நீங்கள் கேட்கலாம்.

அவர் ஜீப் ஓட்டல… குதிரை ஓட்டுறார். அதுவும் டான்ஸ் ஆட கூடிய குதிரை ஓட்டுவது அவரது வேலை.

அது சரிப்பா.. ஜீப் என்றால் என்ன தெரியுமா..? JEEP என்றால் Journey On Every Earth Place எனப்படும். கிட்டதட்ட இந்த ஹீரோ ஜிப்ஸியும் இப்படித்தான். இந்தியா நாடு முழுவதும் சுற்றுகிறார்.

ஆனால் ஜிப்ஸி என்றால் பூமியின் பாடகன் என பொருள் உள்ளதாக படத்தில் ஒரு காட்சி உள்ளது.

அப்பாடா.. இவ்ளோ விளக்கமா? சரி கதைக்கு வருவோம்…

கதைக்களம்…

நாடு முழுவதும் ஹீரோ சுற்றுவதால் அவருக்கு பல பாஷைகள் தெரிகிறது.

அவரிடம் உள்ள ச்சே (அட குதிரை பேரு இதாங்க) குதிரை டான்ஸ் ஆடுவதால் அதற்கு கிராக்கி அதிகம்.

First On Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5

ஒரு முறை காரைக்கால் அருகேயுள்ள நாகூர் தர்கா திருவிழாவில் குதிரை ஆட்டத்திற்கு ஜீவாவை ஒப்பந்தம் செய்கிறார் நாயகி நடாஷாவின் வாப்பா (முஸ்லிம்).

அப்பா ரொம்ப கண்டிப்பானவர் என்பதால் அவரிடம் பயந்து பயந்து வாழ்கிறார் ஹீரோயின் நடாஷா. அப்போது ஜீவா மீது காதல் வர, ஒரு கட்டத்தில் என்னை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என கூறுகிறார்.

ஜீவா நடாஷாவை அழைத்து கொண்டு எஸ்கேப் ஆகிறார். அதன்பின்னர் என்ன ஆனது? எங்கே சென்றார்கள்? ஹீரோயின் அப்பா என்ன செய்தார்? அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜீவா மற்றும் நடாஷா இருவரும் நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரியும் உள்ளது.

மனைவியை பிரிந்த பின் ஜீவா காட்டும் பரிதாபம் நமக்கு அனுதாபத்தை கொடுக்கும்.

ஒரு சில இஸ்லாமிய பெண்கள் எத்தகைய கட்டுப்பாட்டுக்குள் வாழ்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக காட்டி வாழ்ந்திருக்கிறார் நடாஷா. சுதந்திர பறவையாக இவர் திரியும் போது தன் நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.

கேரள பாடகரும் ரசிக்க வைக்கிறார். உங்க பொண்டாட்டியை மீட்க என் பொண்டாட்டியை தர்றேன் என இவர் சொல்லும் போது தியேட்டரில் சிரிப்பலை.

நாயகியின் வாப்பா லால் ஜோஸ். இவரின் மலையாளம் கலந்த தமிழ் ரசிக்க வைக்கிறது. அதுபோல் பாலன் கேரக்டரும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

சுசீலா ராமன் பாடலும் அவரின் உடை அலங்காரமும் சொதப்பல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுகபாரதியின் வரிகளுக்கு இசையை கொடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். வா வா வெண்புறா என்ற க்ளைமாக்ஸ் பாடல்… நன்றாக உள்ளது.

மற்ற பாடல்களை என்ன நினைத்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்தாரோ தெரியல… பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கருப்பி என்ற பாடல் ஒன்றிருக்கும்.. அது பாடல் என்பதை விட வார்த்தை கோர்வை என்பதுதான் சரியாக இருக்கும்.

அதே போல் இதிலும் பல பாடல்கள் உள்ளது. அதுவும் கூவி.. கூவி.. ஜாதி.. ஜாதி.. தீவிரவாதி என காட்டு கத்தி ஒரு பாட்டை வைத்துள்ளனர்.

ராப் பாடல்கள் பாணியில் அனைத்து பாடல்களை அமைத்துள்ளார். பின்னணி இசை போற்றும்படி நன்றாக உள்ளது.

ஒளிப்பதிவை எஸ்கே செல்வகுமார் அமைத்துள்ளார். இவரின் பணிக்காகவே படத்தை பார்க்கலாம். ஒரு மாநிலத்தின் சிறப்பை தன் கேமராவில் படம் பிடித்து விருந்து வைத்துள்ளார்.

இடைவேளை சமயத்தில் வரும் வன்முறை காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் பாடல்களின் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. அதுபோல் குதிரை இறக்கும் காட்சியும் அதை படமாக்கிய விதமும் அருமை.

வசனங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன…

இஸ்லாமிய பெண் இந்தியாவை பற்றி பேசும்போது ரசிக்கலாம்.

ஒருத்தனின் ரத்தம்.. அடுத்தவனின் வெற்றி… மீடியாவை கூட்டி அனுதாபத்தை சொல்லிடுங்க எனும்போது அரசியல்வாதிகளின் அராஜகம் தெரிகிறது.

வட இந்தியா வன்முறை.. கற்பழிப்பு காட்சிகளில் நிறைய அரசியல் பேசப்பட்டுள்ளது.

இறைவனால் அதிகம் வெறுக்கப்படுபவது தலாக்.. அதை நான் என் மனைவிக்கு கொடுக்கிறேன் என ஜீவா பேசும்போதும்…

உங்க துப்பாக்கியால ஒரு மயிரையும் புடுங்க முடியாது…

ஒரு குரலை ஒடுக்க நினைச்சா ஓராயிரம் குரல்கள் ஒலிக்கும் உள்ளிட்ட வசனங்கள் அரசியலை சாடியுள்ளது.

குக்கூ மற்றும் ஜோக்கர் என அனைவரும் பாராட்டும் படங்களை எடுத்தவர் ராஜீ முருகன். ஆனால் இதில் என்ன ஆனதோ? ஒரு காதல் கதையை சொல்ல வந்து, அதில் வட இந்திய வன்முறை, ரத்த வெறி அரசியல்வாதிகள் என தான் சொல்ல வந்த அனைத்தையும் திணித்திருக்கிறார்.

தமிழக கர்நாடக தண்ணீர் பிரச்சினை முதல்.. கேரளாவில் உள்ள கம்யூனிச போராட்டங்கள்.. வட இந்தியாவில் உள்ள சாதி வெறி வன்முறை என அனைத்தையும் சாடியுள்ளார்.

க்ளைமாக்ஸ் காட்சியும் தலாக் முறைகளும் கவனம் பெறும்.

இறுதியாக மனிதம் தாண்டி மதம் இல்லை.. இதயம் தாண்டி இறைவன் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர் ராஜீ முருகன்.

ஆக… ஜிப்ஸி.. அஜீரணம்

Gypsy review rating

More Articles