தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுப்ரீக் கோர்ட் உத்தரவுக்கு பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதால், காவிரி நீருக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.
ஏப்ரல் 3ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அதே நாளில் தமிழகத்தில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
நேற்று ஏப்ரல் 4ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார் கமல்ஹாசன்.
இன்று ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகமே ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரல் 8ல் நடிகர் சங்கம் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் ரஜினி கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
இதனிடையில் போராட்டங்களை தமிழக கட்சிகள் கைவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கவுள்ள ரஜினிகாந்த், உண்ணாவிரதம் இருக்க போவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்ற போதிலும் இந்த சூழ்நிலையில் ரஜினி எதுவும் செய்யவில்லை என்றால், அவருக்கு எதிராக தமிழகம் திரும்பக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்டத்தின் மூலம் தன் அரசியல் பலத்தை ரஜினி நிரூபிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தங்கள் போராட்டங்களை தலைநகரமான சென்னையில் நடத்தி வருவதால் ரஜினி வேறு ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவுள்ளதாக தெரிகிறது.
திருச்சி, தஞ்சை உள்ளிட்ட சில விவசாய மாவட்டங்களை தேர்தெடுத்து, அந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு காவிரி பிரச்சினை வந்த போது ரஜினி கலந்துக் கொண்ட போராட்டங்களை பார்ப்போம்.
1980களில் காவிரிக்காக பெங்களூரு கலவர பூமியாகி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டு தமிழகம் நோக்கி நடந்தே வந்தார்கள்.
அப்போது, நான் கர்நாடகம் சென்று தமிழர்களுக்காக போராடுவேன், என் ஒவ்வொரு ரசிகரும் தமிழர் உயிர் உடமை காக்க நிற்பார்கள் என்று குரல் கொடுத்தார் ரஜினி.
சொன்னபடி கர்நாடகா செல்ல முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தனர்.
அடுத்து 1990களில் மீண்டும் காவிரிப் பிரச்சினை வெடித்தபோது, கர்நாடகம் நீதிமன்ற உத்தரவை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்றார்.
2008-ல் ஒகேனக்கல் பிரச்சினைக்காக சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம். அதிலும் கலந்து கொண்ட ரஜினி, தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா? என ஆவேசமாக பேசினார். (பின்னர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தார்).
இது ஒரு புறம் இருக்க, ரஜினி தனி ஆளாக நின்று 16 வருடங்களுக்கு முன் இதே காவிரி பிரச்சினைக்காக இருந்த உண்ணாவிரதம் போராட்டம் குறித்து பார்ப்போம்.
இதற்கு முன்பு ஒரு தனி மனிதராக ரஜினி செய்த போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. அதுதான் 2002ல் நடந்தது. அதுபற்றி பார்ப்போம்…
2002ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காவிரி நதிநீர் வேண்டி சென்னை சேப்பாக்கத்தில் ரஜினி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
உச்சநீதி மன்ற தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு. அதை மதித்து காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா தர வேண்டும் என வலியுறுத்தினார் ரஜினி.
அதற்கு முந்தைய நாள்தான் நெய்வேலி போராட்டத்தில் நடிகர் சங்கம் கலந்துக் கொண்டது.
அப்போது சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் நடத்திய இந்த போராட்டத்தில் ரஜினி கலந்துக் கொள்ளவில்லை.
எனவே ரஜினி போராட்டத்தில் சத்யராஜ், ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அடுத்த நாள் உண்ணாவிரதம் நடைபெற்ற போது ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் ரஜினிக்காக வந்து ஆதரவளித்து அமர்ந்திருந்தது.
அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த காரணத்தினால் அதிமுக பிரபலங்கள் அதில் கலந்துக் கொள்ளவில்லை.
ஆனால் திமுகவைச் சேர்ந்த முக. ஸ்டாலின், காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
உண்ணாவிரதம் இருக்கும்போது தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அந்த 9 மணி நேரமும் இயற்கை உபாதைக்கு கூட எழுந்திருக்காமல், தண்ணீர் ஒரு சொட்டு கூட குடிக்காமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் என்ற ஒரு தனி மனிதரால் உருவாக்கப்பட்ட இந்த போராட்டம், அந்த நாள் முடிவில் தமிழகத்தையே உலுக்கியது எனலாம்.
எனவே அதுபோன்ற ஒரு மேஜிக்கை இப்போது ரஜினிக்கு உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Will Rajinikanth conduct fasting for Cauvery water issue