தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உதயநிதி, நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’.
தளபதி பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்பட வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழுவினர் புரமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதில் பார்த்திபன் பேசும்போது… ‘ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கடவுளிடம் தான் கேட்கனும். ஆனால் தனக்கு கடவுள் பாஷை தெரியாது என அவருக்கே உரித்தான பாணியில் கிண்டலாக பேசினார்.
ஆனால் இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே இதுகுறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். அதில்…
கமல்+ரஜினி ரசிகன் நான். அதிலும் ரஜினி சார் எனக்கு நெருக்கமான நண்பர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் ’பார்த்திபனை ஹீரோவா போட்டு படம் எடுங்கள்’ எனத்தூண்டியவர். Ktvi (கதை திரைக்கதை வசனம் இயக்கம்) பார்த்து மெச்சியவர்.
அவருடன் விவாதங்களில்… என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர். உதாரணத்திற்கு ’எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ, அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்’ என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்கமாட்டார்.
நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களைப் புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).
இதே கேள்விகளுக்கு இதே பதில்களை இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன். சிறு சலசலப்புமில்லை ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஓர் அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன்.
இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம், அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும்.
ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை. பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர்கொள்ள இன்னும் தொண்டர்களாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜினி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் ’நீங்களுமா?’ என அதிர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Parthiban clarifies his statment about Rajini and God language