தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை மதுரையில் நடைப்பெற்ற கூட்டத்தில் அறிவித்தார் கமல்.
அப்போது கட்சியின் சின்னம் மற்றும் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது…
நமது கட்சி மக்களின் கட்சி. அதில், நான் ஒரு கருவி மட்டுமே. நமக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. இன்றைய நிகழ்வுகள் ஒருநாள் கொண்டாட்டம் அல்ல.
இந்த சந்தோஷத்துடன் நிறுத்திவிடக்கூடாது. வாழ்க்கை நடைமுறையைப் போன்று கடைப்பிடிக்க வேண்டும்.
நமக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும்.
நான் அறிவுரை கூறும் தலைவன் அல்ல. உங்களிடம் அறிவுரையைக் கேட்கப் போகிற தொண்டன் நான்.
நாம் ஒன்றுகூடி சமைக்கப்போகும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோறுதான் இங்கு திரண்டுள்ள கூட்டம். இதை தொட்டுப் பார்க்க நினைத்தால் ஊழல் படிந்த விரல்களை சுட்டுவிடும்.
இத்தனை ஆண்டுகள் நாம் செய்த நற்பணிகளின் காரணமாக நல்லோர் பலரது ஆசி கிடைத்திருக்கிறது. அதை கட்டிக்காப்பாற்ற வேண்டும்.
நமது கட்சிக்கு எங்கிருந்து நல்ல விஷயங்கள் கிடைக்கிறதோ அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும். அதற்காக யார் பக்கமும் ஒரே அடியாகச் சாய்ந்துவிடாது. தராசு முள் போல நிற்க வேண்டும்.
எனது 63 வயதில் அரசியலுக்கு வருவதை ஆயுள் முடியப் போகும் நிலையில் வருவதாக விமர்சனம் செய்கின்றனர்.
இதுவரை திரை நட்சத்திரமாக இருந்த காலத்தில் நடிப்பில் மூலம் பணம் சம்பாதித்தேன். ரசிகர்களாகிய நீங்கள் பணம் கொடுத்து திரைப்படங்களை ரசித்தீர்கள்.
அதற்காக இதுவரை உங்களைப் பார்த்து கை அசைத்தது மட்டுமே உங்களுக்காகச் செய்தது. நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று குற்ற உணர்வு அதிகரிக்க ஆரம்பித்தது.
எஞ்சிய வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்சியைத் தொடங்கியுள்ளேன். இதற்காக நாம் அமைத்துள்ள கட்டமைப்பு அடுத்த 3 அல்லது 4 தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.
எனக்கே எனக்கானதாக கட்சியை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அவ்வாறு தொடருவதே நாளை நமதாக வழிவகுக்கும். என்று பேசினார் கமல்ஹாசன்.