தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
1960 காலக் கட்டங்களில் நடந்த கடிதம் மூலம் உருவான காதல். கிட்டத்தட்ட ‘காதல் கோட்டை’ படம் போல ஆரம்பித்து பின்னர் காதல் ரோஜா-வாக மாறிய களம்.
கதைக்களம்..
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரிகேடியர சச்சின் கடேகர். இவரின் பேத்தி (அஃப்ரின்) ராஷ்மிகா… சில காரணங்களால் இந்தியாவையே வெறுக்கும் கேரக்டர் ராஷ்மிகாவுக்கு.
ஆனால் ஒரு கட்டத்தில் தன் தாத்தாவின் நிறைவேறாத ஆசைக்காக நிறைவேற்ற 1985ல் இந்தியாவுக்கு வருகிறார் ராஷ்.
ஒரு காதல் கடிதத்துடன் ஒரு பெட்டகத்தை இந்தியாவில் உள்ள சீதா மகாலட்சுமி என்ற பெண்ணிடம் சென்று சேர்க்கும்படி இறப்பதற்கு முன் சொல்லி இருக்கிறார்.
முகவரியே இல்லாத யார் அந்த சீதா.? என தன் நண்பருடன் தேடி அலைகிறார்.
அந்தப் பயணத்தில் ராம் & சீதா இடையே ஏற்ப்பட்ட காதலை அறிகிறார்.
அந்த பெட்டகத்தில் என்ன உள்ளது.? அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது.? ராம் பின்னணி என்ன.? சீதா யார்.? எப்படி காதலித்தார்கள்? 1965ல் என்ன நடந்தது.?என்பமே மீதிக் கதை.
கேரக்டர்கள்..
லவ்வர் பாய் என்று சொன்னால் அது துல்கர் சல்மானுக்கு 100% பொருத்தமான ஒன்றுதான். இந்த படத்திற்கு பிறகு அவரை காதல் மன்னன் / இளவரசன் என்று கூட அழுத்திச் சொல்லலாம்.
சீதா எழுதும் கடிதத்தில் முகவரி இல்லாத காரணத்தினால் சீதாவுக்கு பதில் அனுப்ப முடியாமல் தவிக்கும் ராம ஆகட்டும்.. இந்திய ராணுவத்தில் லீவு எடுத்துக் கொண்டு அவர் சீதாவை தேடி அலைவதாகட்டும் ஒவ்வொன்றும் காதலின் வலியை உணர்த்தும்..
அதுபோல சீதா & ராம் இருவரும் சந்திக்கும் அந்த முதல் ரயில் பயணம்.. அடடடா அதற்காகவே படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.
சீதா மகாலட்சுமி என்ற ஐதராபாத் இளவரசி நூர்ஜகான் ஆக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். ஹிந்து பெண்ணாக இருக்கும் போதும்.. முஸ்லிம் பெண்ணாக இருக்கும் போதும்.. தன்னுடைய உடல் மொழிகளில் கூட கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். இவருக்கு ஆடைகளை வடிவமைத்த காஸ்ட்யூமர் ஷீத்தல் ஷர்மாவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அவ்வளவு நேர்த்தியாக ஒவ்வொரு உடையும் செதுக்கி இருக்கிறார் என்று சொல்லலாம்.
தான் ஒரு முன்னணி நடிகை என்ற போதும் அதில் தனக்கு ஹீரோயின் கேரக்டர் இல்லை என்று தெரிந்த போதும் நடிக்க ஒப்புக் கொண்ட ராஷ்மிகாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். துல்கர் – மிருணாள் காதலை அறிந்து கொள்ள இவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கும்.
மேஜர் ஆக கவுதம் மேனன், துல்கரை வெறுக்கும் சக ராணுவ அதிகாரியாக சுமந்த் நடித்துள்ளனர்.
டெக்னிஷியன்கள்…
நீண்ட நாட்களுக்குப் பிறகு தென்றல் போல இசை கொடுத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர்.. அனைத்து பாடல்களும் நம்மை வருடி செல்கின்றன.
1960களில் மக்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்பதை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். அது போல அந்த காலகட்டத்தில் உள்ள கார்கள் உடைகள் என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் கலை இயக்குனர்.
ஆனால் 1980களில் ராஷ்மிகா அணிந்துள்ள உடை தான் சற்று நெருடலாக உள்ளது. 2000 ஆண்டுகளில வந்த ஆடை போலவே இருக்கிறது. மேலும் 1980களில் பெண்கள் அவ்வளவு அழகாக லூஸ் ஹேர் விடுவதில்லை. அதுவும் முஸ்லிம் மதத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்திருக்கும். ராஷ்மிகாவை இன்றைய பெண்ணை பார்ப்பது போலவே உள்ளது.
இந்திய காரை அடித்து நொறுக்கும் ராஷ்மிகாவை காணும் போது நமக்கு கோபம் வருகிறது. அது படத்தின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது.
அதைப் பார்க்கும்போது இந்தியர்களை உணர்வு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து காட்சிகளை அமைத்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர்கள் வினோத், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, கலை இயக்குனர் வைஷ்ணவி ரெட்டி, பைசல் அலிகான் ஆகியோர் தங்கள் பணிகளை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளனர்.
பெரும்பாலும் இயக்குனர்கள் கதைகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் அதை காட்சிகளில் கொண்டு வர சிரமப்படுவார்கள். ஆனால் ஒவ்வொரு பிரேமிலும் காட்சி அமைப்பிலும் தன் முழு கவனத்தையும் செலுத்தி ஒரு அழகான காதல் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் ஹனு ராகவபுடி.
தயாரிப்பு – வைஜெயந்தி மூவீஸ். படம் 2 மணி நேரம் 45 நிமிடம் ஓடுகிறது. முதல் பாதியில் பத்து நிமிடங்களை வெட்டி இருக்கலாம்.
இது தெலுங்கு படம் என்றாலும் எங்கேயுமே தெலுங்கு வாசனை இல்லை. கடிதத்தில் காட்டப்படும் எழுத்துக்களும் தமிழிலே உள்ளன. வசனங்களும் தமிழ் வார்த்தைக்கு ஏற்ப உதட்டசைவுகளாக இருப்பதால் நம்மால் படத்துடன் ஒன்றி காதலிக்க முடிகிறது.
ஆக… சீதா ராமம்… காதலிக்காதவர்களையும் காதலிக்க செய்யும்!
Sita Ramam movie review and rating in Tamil