தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் பலர்
இசை : கோபிசுந்தர்
ஒளிப்பதிவு : பினோத் பிரதான்
கதை : பாபி-சஞ்சய்
டைரக்டர் : ரோஷன் ஆண்ட்ரூஸ்
தயாரிப்பு : ஸ்ரீகோகுலம் கோபாலன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
கதைக்களம்…
தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர்தான் மலையாளத்தில் மோகன்லால்-நிவின்பாலி நடித்த இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த கதையானது 1800களில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
மிகப்பெரிய கொள்ளைக்காரனாக வாழ்ந்த கொச்சுன்னி, ஏழைகளுக்கு வாரி வழங்கும் ராபின்ஹூட்டாக கோலோச்சிய காலத்தை இந்த படம் சொல்கிறது.
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கொச்சுன்னி. இவனின் தந்தை ஒரு திருடன் என்பதாலும் வறுமை குடும்பத்தை வாட்டுவதாலும் இவனது அம்மா ஊரை விட்டு போக சொல்கிறார்.
வேறு ஊருக்கு செல்லும் கொச்சுன்னி அங்கு ஒரு மளிகைகடையில் வேலைக்கு சேர்கிறார். திருடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
அந்த ஊருக்கு களரி வித்தையை சொல்லிக் கொடுக்க வரும் பாபு ஆண்டனியுடம் சில தடங்கலுக்கு பிறகு வித்தைகளை கற்கிறார். அங்கு பணிபுரியும் பிரியா ஆனந்துடன் காதல் கொள்கிறார்.
ஒரு சூழ்நிலையில் மேல் சாதியினர் ஆற்றில் இருக்கும் புதையலை எடுக்க சொல்லி கொச்சுன்னியிடம் கேட்கின்றனர். அப்போது அவருக்கு சில பவுன்களையும் தருவதாக சொல்கின்றனர்.
இதனை நம்பும் கொச்சுன்னி அந்த புதையலை எடுத்து வருகிறார். பரிசாக சில பவுன்களையும் அவர்களிடம் இருந்து வாங்குகிறார்.
ஆனால் கொச்சுன்னி திருடிவிட்டதாக அவர் மீது பழியை போட்டு பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு பெரும் தண்டனை கொடுக்கின்றனர்.
நிவின் பாலியின் நல்ல உள்ளத்தை அறிந்த இத்திக்கார பக்கி (மோகன்லால்) அவரை அந்த தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறார்.
நீ நல்லவனாக வாழ்வதில் அர்த்தமில்லை. உன் சாதியினருக்கு உதவ நீ களத்தில் இறங்க வேண்டும். மேல் சாதியினரிடம் உள்ள பொன் நகைகளை கொள்ளையடித்தால் தப்பே இல்லை என சில பயிற்சி யுக்திகளை சொல்லிக் கொடுத்து செல்கிறார்.
அதனை கற்ற நிவின்பாலி என்ன செய்தார்? திருட சென்றாரா? தன் சமூக மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாரா? ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? மேல் சாதியினரை எதிர்த்த எப்படி போராடினார்? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்….
எப்போதும் ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் வித்தியாசம் காட்டுபவர் நிவின்பாலி. இதில் முதல் பாதியில் அப்பாவியாகவும் இரண்டாம் பாதியில் அதிரடி கொச்சுன்னியாகவும் வாழ்ந்திருக்கிறார்.
படத்தில் ஏழைகளுக்காக அள்ளி கொடுப்பதை போல் நடிப்பையும் க்ளைமாக்ஸில் ரசிகர்களுக்காக அள்ளி கொடுத்திருக்கிறார் நிவின்பாலி.
இடைவேளையில்தான் வருகிறார் மோகன்லால். ஆனால் அவரின் மேனரிசம் படம் முழுவதும் பேசப்படும் வகையில் செய்திருக்கிறார்.
குதிரை சவாரி, சண்டைப் பயிற்சி வித்தைகளை சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கும்.
வெறுமனே நாயகியாக இல்லாமல் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரியா ஆனந்த், ஆனால் இவரது தோற்றம்தான் அந்த 1800 காலகட்டத்திற்கு ஒத்துப் போகவில்லை. டல் மேக்அப் போட்டு இருக்கலாம்.
பெரும்பாலான காட்சிகளில் எம்.எஸ். பாஸ்கர் இருக்கிறார். ஆனால் ஓரிரு வார்த்தைகள் அவருக்கு வசனங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
களரி வித்தைக்காரராக பாபு ஆண்டனி. சைலட்டாக வந்து க்ளைமாக்ஸில் வைலண்டாக மாறி அசத்தியிருக்கிறார்.
பாபு ஆண்டனியின் முன்னாள் மாணவராக இருந்து பின்னர் காவல் துறை அதிகாரியாக மாறும் சன்னி வெயின் செம வெயிட்டு. கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.
மேல் சாதியினராக தன்னை காட்டிக் கொள்ளும் அந்த கும்பல் அனைவருமே நடிப்பில் கச்சிதம். ஆங்கில ஆட்சியாளர்களும் நல்ல தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்தின் பெரிய பலமே கலை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்தான். 1800 ஆண்டுகளில் இப்படிதான் சந்தை, கோயில், களரி பயிற்சி, நடைமுறைகள், உடை வழக்கம், படகு, இயற்றை காட்சிகள் இருந்திருக்குமோ? என ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பினோத் பிரதான் அனைத்து காட்சிகளையும் கண்களை விட்டு அகலாத வண்ணம் கொடுத்துள்ளார்.
கோபி சுந்தரின் பின்னணி இசை மிரட்டல். மோகன்லால் இன்ட்ரோ சீன் முதல் க்ளைமாக்ஸ் சீன் வரை பின்னி எடுத்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் கச்சிதம்.
ஒரே மாதிரி கதையை எப்போதும் எடுக்காமல் வெரைட்டி காட்டும் டைரக்டர் ரோசன் ஆண்ட்ரூஸை வெகுவாக பாராட்டலாம்.
வரலாற்று ஆய்வுகளை திறம்பட செய்து, அதை இன்றைய ரசிகர்கள் ரசிக்கும்படி திறமையான கலைஞர்களை வைத்து விருந்து வைத்துள்ளார்.
காயம்குளம் கொச்சுன்னி… மலையாள மக்களின் மைந்தன்
Kayamkulam Kochunni movie review rating