தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரத்தன் லிங்கா தயாரித்து இயக்கி உள்ள படம் ‘லாக்’.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது…
” இது காவல்துறை விழா போல் இருக்கிறது. அவ்வளவு காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளார்கள். காவல்துறையினருக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
ஒரு ராசியும் உண்டு. ஏனென்றால் காக்கி சட்டை போட்டு ஒரு பெரிய வெற்றிப் படம் கொடுத்த பிறகு தான் அந்த நடிகர்கள் நட்சத்திரங்களாக உயர்ந்து அவர்களுடைய மதிப்பு கூறியிருக்கிறது. ‘தங்கப்பதக்கம் ‘படத்தில் எஸ் பி சவுத்ரியாக நடிகர்திலகம் நடித்த போது அந்தக் கம்பீரத்தை உணர்ந்தோம்.
காவல்துறை மீது மதிப்பு வந்தது .அந்தப் பாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் யார் காக்கி சட்டை போட்டு நடித்தாலும் அந்த எஸ்பி சவுத்ரியின் பாதிப்பு இருக்கிற வகையில் அந்த பாத்திரமும் அமைந்திருந்தது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ‘மூன்று முகம் ‘ படத்தில் அலெக்ஸ் பாண்டியன் எஸ்பியாகத் தோன்றினார். அதுவும் இன்றளவும் பேசப்படுகிறது.
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ‘ஊமை விழிகள் ‘படத்தில் காக்கி சட்டை போட்டு அனைவரையும் கவர்ந்தார். லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியும் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ படத்திற்குப் பிறகு பெரும் உயரத்திற்குப் போனார்.
அதன் பிறகு ஏராளமான போலீஸ் வேடங்களில் நடித்து புகழ் பெற்றார் .புரட்சித் தமிழன் சத்யராஜ் எவ்வளவு நடித்திருந்தாலும் ‘வால்டர் வெற்றிவேல் ‘மறக்க முடியாது.
எம்ஜிஆர் அவர்களால தன் கலை வாரிசு என்று சொல்லப்பட்ட பாக்யராஜ் அவர்கள் ‘அண்ணா என் தெய்வம் ‘படத்தை ‘ அவசர போலீஸ் ‘என்று முடித்தார். பாதியில் விடப்பட்ட படத்தை தான் நடித்து முடித்தார்.
அந்த வகையில் எம்ஜிஆரும் பாக்கியராஜ் சார் அவர்களும் சேர்ந்து நடித்த படம் அது. இப்படி காக்கி சட்டை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
பாக்யராஜ் எவ்வளவு நல்ல கருத்துக்களை நல்ல கதைகளை சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரைப் படத்தில் வைத்தது தான்.
இந்த விழாவுக்கு வந்த பலரும் அதைப் பற்றி பேசும் போது அவர் செய்த பெரிய தவறு இது என்று தோன்றுகிறது.
ஒரு படத்தில் இடைவேளையில் வருவதை இன்டர்வெல் பிளாக் என்பார்கள். இன்டர்வெல் லாக் என்பார்கள். சாதாரணமாக இருக்கிறது என்றால் இன்டர்வெல் பிளாக். அதில் ஒரு முடிச்சு போட்டுப் பிறகு அவிழ்த்து விடுவது தான் லாக்.
பாக்யராஜ் சார் அவர்களைத் திரைக்கதை மன்னன் என்பதை விட இடைவேளை மன்னன் என்று கூறலாம். ஏனென்றால் அவரது படங்களில் இடைவேளையில் அப்படி ஒரு முடிச்சு போட்டு விடுவார்.
அந்த முடிச்சை சரியாக அவிழ்த்தால் அந்த படம் வெற்றிப் படம். அவிழ்ப்பதற்குத் திணறினால் அது தோல்விப்படம்.
இயக்குநர் ரத்தன் லிங்காவைப் பார்க்கிறேன் ,20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயக்குநர் ஆவது என்பது சிரமம். சில ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்து, பிறகு இணை இயக்குநராகச் சில ஆண்டுகள் பணியாற்றி ,வெளியே வந்து கதை சொல்லி தயாரிப்பாளர் பிடித்து பிறகு தான் இயக்குநராக முடியும்.
ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே அவசரக்காலம். இரண்டு ஆண்டுகளுக்குள் படம் இயக்கி விட வேண்டும் என்று இன்று இருக்கிறார்கள். ஆனால் ரத்தன் லிங்கா படிப்படியாகக் குறும்படம், திரைப்படம் என்று வளர்ந்துள்ளவர். அப்படி வளர்ந்து இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரது குறும்பட காலத்திலேயே அவரை இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பிரதாப் போத்தன், மதன் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள் .அவர் நிதானமாகத்தான் படிப்படியாக முன்னேறியுள்ளார்.
அவசரத்தில் எதுவும் வெற்றி பெறாது .இந்தப் படத்தில் நமக்கு நாமே துணை என்று பெண்களுக்கு கருத்து சொல்லி உள்ளார். பெண்களைக் காப்பாற்ற எந்த கதாநாயகர்களும் வர மாட்டார்கள். அவர்கள் தான் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பெண்கள் ஆண்களுக்கு நிகராகப் பல பணிகளைச் செய்யலாம் . ஆனால் ஆண்களைப் போலவே, ஆண்கள் மாதிரி வாழ நினைக்கக் கூடாது அங்கே தான் நிறைய பெண்களுக்கு பிரச்சினை வருகிறது. நிறைய தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
பெண்கள் ஆண் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தனது நண்பர்களைத் தைரியமாக அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்த வேண்டும் .
அப்படி அறிமுகப்படுத்தாமல் மறைத்தால் பிரச்சினை வரும். குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தப்படும் நண்பன் எப்படிப்பட்டவன் என்று குடும்பத்தினர் கவனித்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் அனுபவசாலிகள் .
இருமல் தும்மல் போன்றது தான் காமமும் .நம்மை மீறி வந்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் தான் பெண்களுக்குப் பெண்களே தான் பாதுகாப்பு என்று இந்தப் படத்தில் கூறி இருக்கிறார். இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்றார்.
Women should not think to live like men; Perarasu speech