தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.
பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன்…
“நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும்.
வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளில் பேனர்கள் வைப்பது மக்களுக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடும். எனவே அவற்றை உடனடியாக எடுக்கவும் சொல்லி இருக்கிறேன்.
பின்னர் தான் அவையாவும் முறையாக அனுமதி வாங்கி சட்டத்தின் படி வைக்கப்பட்ட பேனர்கள் எனத் தெரிய வந்தது.
இருந்தாலும், ஒட்டுகின்ற போஸ்டர்கள் மூலமாக எங்களை உங்களுக்கு தெரியக்கூடாது, எங்களின் செயல்பாடுகளின் மூலமாகவே உங்களுக்கு நாங்கள் தெரியவேண்டும் என விரும்புகிறேன்.
ஒற்றை நூலைக்கூட (பூணூல்) எனது பெற்றோர்களிடம் வேண்டாம் என்று சொன்னவன், ஆனால் இங்கு வந்த காந்தியவாதி கருப்பையா அணிவித்த கற்றை நூலை பெருமையுடன் அணிந்து கொள்கிறேன்.
காரணம், இந்த கதர் நூல் தான் வெள்ளையனை பொட்டலம் கட்டி அனுப்பியது. தனித்தனியாக கிடந்த இந்தியாவை தைக்க உதவிய நூல் அது.” என்று பேசினார்.
Kamalhassan speech about his caste at Nammavar Padai Audio launch