தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டவர்கள் கொண்ட அணியினர் நடிகர் சங்கத்தில் பதவி வகித்து வருகின்றனர்.
இவர்கள் தலைமையிலான அணி பதவியேற்றது முதல் அதிரடியான செயல்கள் செய்து வருகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ரஜினி, கமல் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
இந்நிலையில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து இந்த நடிகர் சங்க கட்டடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது 33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் ஏற்கெனவே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்திருந்தார்.
மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகிய நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தனர்.
மேலும் நீதிபதிகள், ”நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர் ஆணையர் கே.இளங்கோவன் ஆய்வு செய்ய வேண்டும். நடிகர் சங்கமும், மனுதாரரும் இணைந்து ஆணையருக்கு ரூ.1 லட்சம் ஊதியம் வழங்க வேண்டும்.
வழக்கறிஞர் கே.இளங்கோவன் கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து மே 29-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆணையர் ஆய்வறிக்கை வழங்கும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர்.