தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரையில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் நடிகர் சிவகுமார்.
அப்போது சிவகுமாரை ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்றார். திடீரென செல்ஃபி எடுக்கும் இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார் சிவகுமார்.
அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. சிவகுமாரின் இந்த செயலை கண்டித்து பல மீம்ஸ்களை உருவாக்கிவிட்டனர்.
இதனையடுத்து அந்த சம்பவத்திற்கு சிவகுமார் விளக்கமளித்தார்.
இந்நிலையில், சிவகுமாரின் உறவுக்காரரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
பெருவாரியான அறிஞர்களும் கலைஞர்களும் தங்கள் கொள்கைகளையும் நற்பழக்கங்களையும் பாதுகாக்கும் அரணாகவே அவர்களுடைய கோபம் இருந்துவருவதை பார்த்து வருகிறேன்.
என் பெரியப்பா திரு. சிவகுமார் அவர்களும் தன் கோபம் எனும் கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் வகையே! அதேநேரம் கோப்பபடாத எவரும் ஒரு வழக்கத்திற்குள் வாழ இவ்வுலகம் எளிதாக விடுவதுமில்லை என்பதையும் நான் பார்க்கிறேன்!
இன்றைய நாள் முழுவதும் தன் சுய இன்பத்திற்காகவும், தங்களின் ஒழுங்கீனங்களை நியாயப்படுத்தவும் அனாயசமாக அர்த்தமற்ற கருத்துக்களை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கும் நவநாகரீக சமூகநலப் போராளிகளைக் கண்டு நானும் வாந்தியெடுப்பதில் தவறில்லை என்றே தோன்றியது!
இன்று அனைவரும் கேலி செய்துகொண்டிருக்கும் அவரின் உரைகள் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் கல்வி உதவிகள் செய்துகொண்டிருக்கும் ஒரு மாமனிதர்.
தன் அனுமதியின்றி படமெடுத்தவரை அறையாமல் அலைபேசியை தட்டிவிட்டதற்கே இங்கிதமில்லாமல் இங்கே இங்கிதம் கற்பிக்க முயலும் எந்தவொரு அறிவாளியும் என் வலைத்தளங்களை விட்டு உடனே வெளியேறுமாறு உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட அதே இங்கிதமில்லாமல் ஆணையிடுகிறேன்!
பல திறமைகள் படைத்த புத்திசாலியைவிட பலவீனமே இல்லாதவன் பெரும் பலசாலியென எனக்குக் கற்றுவித்தவர். உன் வருமானம் எதுவாயினும், வந்ததில் 25% தானமாகக் கொடு, வாழ்க்கை சிறப்பாகும் என எனக்குக் கற்பித்தவர். காசில்லாமல் கையேந்துபவருக்கு, உபதேசம் அளிப்பதை விட உன்னால் இயன்றதை கொடுத்துவிட்டு நடையைக்கட்டு என எனக்கு சொல்லிக்கொடுத்தவர்
இன்றுகூட, அடுத்தவர் அனுமதியில்லாமல் செல்பி எடுப்பது தவறு என அனைவருக்கும் அடித்துக் கூறியிருக்கிறார்! அவ்வளவே!!
பின்குறிப்பு: இதை ஏதோ சினிமா சண்டைக்காட்சி அளவுக்கு எபெக்டுகள் போட்டு அதிவிளம்பரம் தேடிக்கொண்ட அந்தச் செய்தி நிறுவனத்திற்கும் அதே கோபத்துடன் என் வசைகளைப் பரிசளிக்கிறேன்!
இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
Cellphone Selfie issue Producer SR Prabhu supports SivaKumars rude behaviour