தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மீரா மஹத் இயக்கத்தில் தீரஜ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள படம் ‘டபுள் டக்கர்’.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசும் போது…
காலதாமதமாக வந்ததற்கு முதலில் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட்.
என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன்.
இந்தப் பட டாக்டர் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன்.
உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.
ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார்.
அது போல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் இரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான்.
என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான். மிக எளிமையாக எனக்கு அது குறித்து விளக்கம் கொடுப்பான். இயல்பாகவே கலகலப்பான பையன் அவன். படங்களும் ஜனரஞ்சகமாக, கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். அவனுடன் இருந்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய விசிறி, உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன்.
அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.
இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. வெட்கமில்லாமல் ஆண்கள் அழுவது என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன்..
ஒரு 50 எம் எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம் எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம், ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்து கொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை.
தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான்.
விஜய் சேதுபதியின் படத்தை இயக்கி வருகிறேன். அவர் ஒரு மகா நடிகன்.
சமீபத்தில் நடிகை பற்றி ஒருவர் பேசியிருந்தார்.. அவர் என்ன பேசி இருந்தார் என்பதை விட நடிகை நாம் மதிக்க வேண்டும் அவர்கள் நம் வீட்டு பெண்கள் போல நம் சகோதரி அம்மா போல.. நடிகை காதலியாக கூட நினைக்கலாம். ஆனால் அதில் கண்ணியம் இருக்க வேண்டும். எனவே யாரும் நடிகை பற்றி தவறாக பேச வேண்டாம்.
த்ரிஷாவிடன் ஓரிரு படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.. ரொம்ப அர்ப்பணிப்பான நடிகை.. சரோஜாதேவி சாவித்திரி உள்ளிட்ட பல நடிகைகளை பற்றி எங்கள் அம்மா சொல்வதைக் கேட்டு இருக்கிறேன்.. அவர்கள் எங்களுக்கு பெரியம்மா போல..
நீங்கள் நடிகர் நடிகைகள் பற்றி எழுதும் போதும் கவனமாக எழுதுங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள். நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவீர்கள் என்று தெரியும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது…
என்ன பேசுவது, எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. மிஷ்கின் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய பேச்சு இன்று அட்டகாசமாக இருந்தது. Heartல் துவங்கி Art வரைக்கும் எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டீர்கள்.
இன்று நீங்கள் இந்த மேடையிலிருப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது. சந்துரு என் முதல் படத்தின் இயக்குநர். திரைப்படத்திற்கு சென்சிட்டிவ் ஆன விசயங்கள் மட்டும் போதாது, கமர்ஷியல் சக்சஸ் அடைய வேறு ஏதோவொன்று தேவை என்பதைப் புரிந்து கொண்டு, பேப்பர் ராக்கெட் நிறுவனத்தில் போய் புரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றிவிட்டு வந்தார். ‘பிள்ளையார் சுழி’ படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது தான் இயக்குநர் மீரா என்னிடம் கதை சொல்ல வந்தார்.
ஐந்து நிமிடத்துக்குள் என்னை இம்ப்ரஸ் செய் என்று சொன்னேன். அவர் நான் ஸ்டாப்பாக என்னை சிரிக்க வைக்கத் துவங்கினார். உடனே சரி கண்டிப்பாக நாம் இதை பண்ணுகிறோம் என்று சொன்னேன்.
என்னுடன் நடித்த ஸ்மிருதி வெங்கட் அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்கு நன்றி. இன்னொரு விழாவை அவருக்காகவே முன்னெடுக்க இருக்கிறோம். எடிட்டர் வெற்றிக்கு நன்றி. அட்லி அங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். மீரான் இங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம்.
இப்படத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது பத்திரிகையாளர்களாகிய உங்களுடைய கடமை. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நாங்கள் கேட்காமலே நீங்கள் செய்வீர்கள் என்று அறிவோம். இருப்பினும் இப்படத்திற்கு உங்களின் ஆதரவைத் தந்து உதவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Actress were like our family members says Mysskin