தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
ஒரு தனி நபருக்காக வளைந்துக் கொடுத்த அரசு.. தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசை எதிர்த்த மக்கள்… இந்த உண்மைச் சம்பவத்தை தூத்துக்குடி மக்களின் கண்ணீர் பதிவுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். இவரே தான் மெரினா புரட்சி என்ற படத்தை இயக்கியிருந்தார்.
நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. மே 20ஆம் தேதி TamilsOTT & Vimeo ல் ரிலீசாகிறது.
கதைக்களம்..
உலகத்தை உலுக்கிய ஒரு கொடூர நிகழ்வாக கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய அறவழிப் போராட்ட 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் குறிவைத்து கொல்லப்பட்டனர்.
இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் காப்பர் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. அரசு கொடுத்த அளவை மீறி அளவுக்கு அதிகமான அளவில் காப்பர் எடுக்கப்பட்டு வந்தது.
இதன் கழிவுகளால், அத்தொழிற்சாலை அமைந்திருக்கும் இடங்களை சுற்றி தரிசு காடுகளே உருவானது. மண்ணை வறட்சியாக மாற்றியது.
மேலும் பலர் கேன்சர் நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். இதனையடுத்து மக்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தங்கள் போராட்டங்களை அவ்வப்போது எடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுப்போம் என அரசுகள் மாறி மாறி இவர்களை ஏமாற்றியுள்ளது.
எனவேதான் 2018 பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தை மக்கள் தொடங்கியுள்ளனர்.
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தன் கைவசம் இருந்த காவல்துறையை வைத்து மக்களை தடுத்தி நிறுத்தினர்.
ஆனால் 100வது நாளில் தான் இந்த போராட்டம் கலவரமாக மாறியது.
பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்தது காவல்துறை. இதன்விளைவாக 13 பேரை கொன்றது தமிழக அரசு.
படம் பற்றிய அலசல்…
இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் நீங்கள் கண்ணீர் விடாமல் இருக்க மாட்டீர்கள். பாதிக்கப்பட்ட மனிதர்களின் வலியை அப்படியே தன் கேமராவில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ்.
வேதாந்தா நீ வேணான்டா…… காப்பர் உனக்கு.. கேன்சர் எனக்கா?……. என்ற வாசங்களும் கோஷங்களும் நம் மனதை கரைப்பதாக இருக்கும்.
குஜராத் கோவா மாநிலங்களில் இந்த காப்பர் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின்னரே வேதாந்தா குழு தமிழகத்தை குறிவைத்துள்ளது.
முதன்முறையாக 1990களில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதன்பின்னர் கருணாநிதி ஆட்சி வந்தபோதும் இது தொடர்ந்தது.
மேலும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளுக்கு கோடிக்கணக்கில் இந்த வேதாந்தா குழு நன்கொடை வழங்கியுள்ளது என்பதை ஆணித்தரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு செயல்படும் அரசும் அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை நிச்சயம் மக்களாட்சி என்பதே இருக்காது.
மக்கள் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை அடிமையாக ஆட்டிப் படைக்கும் அரசுகள் இருக்கும் வரை நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது. நச்சுத்தன்மை கொண்ட இதுபோன்ற தொழிற்சாலைகளின் காற்றையே சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
2018 மே 22ல் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு யார் பொறுப்பு? என்பதை நீதிமன்றம் விசாரித்து அந்த குற்றவாளிகளை மரண வலியோடு தண்டிக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெற கூடாது. மக்களை கொன்று தங்கள் வெறியை தீர்த்துக் கொண்ட மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் 13 பேர் மட்டுமே இறந்துவிட்டதாக கணக்கு காட்டப்பட்டாலும் 15 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சூடு நடந்த மறுநாளும் (மே 23) ஒருவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரையும் அடித்தே கொன்றுள்ளது போலீஸ்.
துப்பாக்கி சூடுக்கு என்று ஒரு வரைமுறை உள்ளது. முதலில் போராடும் மக்களை எச்சரிக்க வேண்டும். பின்னர் வானத்தை நோக்கி சுட வேண்டும்.. அப்படியும் கூட்டம் கலையவில்லை என்றால் போராளிகளை இடுப்புக்கு கீழே மட்டுமே சுட வேண்டும். மேலும் நவீன ரக துப்பாக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்கிறது சட்டம்… இவைஎல்லாம் இங்கு மீறப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்பட்ட அந்த 13 பேருமே நெஞ்சு.. தலை.. ஆகிய இடங்களில் மட்டுமே குண்டு துளைக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பதுதான் வேதனை.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு லட்சங்களில் பணம் கொடுக்கப்பட்டால் மட்டும் போதுமா? இந்த உண்மைச் சம்பவத்தின் குற்றவாளிகளை யார் தண்டிப்பது.?
மேலும் இந்த உயிர்களை பலிவாங்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. லண்டனில் வசிக்கும் அந்த தனி நபருக்காக நம் மக்களை மத்திய மாநில அரசுகள் வஞ்சிப்பது ஏனோ..?
இந்த வரலாற்று சம்பவத்தை அப்படியே கண்முன் காட்டியுள்ளார் இயக்குனர் ராஜ். அவரால் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட முடியாமல் தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்.
மக்கள் இந்த படத்தை பார்த்து உண்மை நிலையை அறிய வேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது இலங்கையில் நடக்கும் பொருளாதார போர் இதற்கு ஒரு சான்றாகும்.
தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தால் மட்டுமே அந்த அரசு அதிகாரிகளுக்கு மரணத்தின் வலி தெரியும். அதுவரை அதிகார திமிரிலேயே வலம் வருவார்கள்.
ஆக.. இந்த முத்துநகர் படுகொலை.. அராஜக அரசியல் அறிவோம்.
PearlCity Massacre movie review