தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ல் மரணமடைந்தார்.
மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்.
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.80 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
*இதைத்தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
எனவே சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்துள்ளது.
அதன்படி ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிட கல்வெட்டும் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர்.
ஜெயலலிதா நினைவிடம் எப்படி..?
இந்த நினைவிட வளாகத்தில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக உயர்தர கருங்கல்லான நடைபாதை
அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கூரைகளின் மீது சூரிய ஓளி தகடுகள் பதிக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பீனிக்ஸ் பறவை போல உள்ள இந்த நினைவு மண்டபத்திற்கு பின்புறம் மியாவாக்கி தோட்டமும், மண்டபத்தை சுற்றிலும் கருங்கற்கள் பதிக்கப்பட்ட தடாகங்களும், தோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
எம்ஜிஆர் & அண்ணா நினைவிடம் போல இதுவும் ஒரு சிறிய சுற்றுலாத் தலமாகவே மாற்றப்பட்டுள்ளது எனலாம்.
நினைவிடத்தில் ‘மக்களால் நான்; மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி’ ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
புல்வெளி அமைக்கப்பட்டு நினைவிட வளாகத்தில் ஏராளமான மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. இரவிலும் நினைவிடம் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
*நுழைவுவாயில் தடாகத்தின் அருகில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
நினைவிடத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக 265 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவு வாயிலின் இருபுறங்களிலும், கருங்கல்லில் செய்யப்பட்ட சிங்க சிலைகள் கம்பீரமாக வைக்கப்பட்டுள்ளன.
இத்துடன் கண்காணிப்பு கேமராக்கள், பொது ஒலி அமைப்பு, அணையா விளக்கு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
வாகன நிறுத்தும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் அருகே, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு ₹12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு பராமரிப்பு பணிக்கு ₹9 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அவரது வீடியோ பதிவுகள், அவர் படித்த நூல்கள், அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்படவுள்ளன.
இதில், ஜெயலலிதா பேசுவது போன்று தொடு திரை மூலம் ஒளி, ஒலி காட்சிகள் வைக்கப்படுகிறது.
இந்த அருங்காட்சியகம், அறிவுசார் மையம் முழுக்க, முழுக்க ஏசி வசதி செய்யப்படுகிறது.
தற்போது இந்த பணிகள் முடிவடையாததால், அடுத்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது.
TN CM Unveiled Jayalalithaa’s Memorial At Marina Beach