தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முன்னோடி’.
சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் இப்படத்திற்கு இயக்குனர் ஆகியிருக்கிறார் எஸ்.பி.டி.ஏ.குமார்.
சினிமாவில் டைரக்டர் ஆவதற்கு வாய்ப்பு தேடுபவர்கள் இவரையே முன்னோடியாக வைத்துக் கொள்ளலாம் போல. அதான் தன் படத்திற்கும் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார்.
இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர்.
‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபு ஷங்கர் இசையமைக்கிறார்.
நகைச்சுவை நடிகராக நிரஞ்சன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர். கேம்பஸ் இண்டர்வியூ போல நடிக்க ஆள் தேடியபோது வந்த 120 பேரில் இவர் தேர்வானவர்.
படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது…
“படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன்.
இதனால் பர பர வென சுவாரஸ்யம் குறையாமல் படம் பறக்கும்.
இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. இதை இந்தப் படம் பேசும்.
படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை 95 % படப்பிடிப்பு முடிந்து விட்டது.
நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார்.
போலீஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின்போதும் குற்றங்களை கூர்மையாக துப்பறிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான், இதில் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளேன்.
தொழில் நுட்பரீதியிலும் பேசப்படும் விதத்தில் காட்சிகளில் அசத்தியிருக்கிறோம்.” என்றார்.
இந்த முன்னோடி டிசம்பரில் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.