தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.
இந்த இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவுவரி செலுத்தவில்லை விஜய்.
இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கார் பதிவு செய்யப்படவில்லை.
நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.
எனவே இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் தன்னுடைய உண்மையான இயற்பெயரில் (சி.ஜோசப் விஜய்) சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு…
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடவில்லை என்றார்.
விஜய்யின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் திரைப்பட நடிகர் என தெரிவித்தார்.
திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.
வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தானேயன்றி, அது தானாக மனமுவந்து வழங்கும் நன்கொடை அல்ல.
பொதுமக்கள் வரியின் மூலமாகக் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டே கல்வி, மருத்துவம், பாலங்கள், ரயில்வே, சாலை, துறைமுகம், சட்டம் – ஒழுங்கு, வறுமை ஒழிப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் நாட்டை ஆளும் அளவுக்கு நடிகர்கள் உயர்ந்துள்ளனர். ரீலிலும் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோக்களாக நடிகர்கள் திகழ வேண்டும்.
எனவே சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தாவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அவர் அந்த தொகையை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டார்.
இத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு வரும் திங்கள்கிழமை இன்று ஜூலை 19ல் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் விஜய்யின் சொகுசு கார் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்களை வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மேல் முறையீட்டு அமர்விற்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
எனவே விஜய்யின் மேல்முறையீட்டு மனு இன்னும் ஒரு சில நாட்களில் வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Madras HC to hear Vijay’s appeal against judge’s Reel Hero remark in Rolls-Royce case