தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற இணைய தொடர் ‘அயலி’.
இந்த தொடரின் வெற்றி விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாண்டிராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது படக்குழுவினருக்கு பாரதிராஜா கேடயங்களை வழங்கி பாராட்டி பேசினார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசத் தொடங்கும் முன்,
யாரையும் முகம் பார்க்காமல் பேசக்கூடாது என்றவர், முதலில் இந்தப் படக்குழுவினை பார்க்க விரும்புகிறேன் என்று கூறி அனைவரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் கைகுலுக்கிப் பாராட்டி வாழ்த்தினார்.
சுசீந்திரன் பேசும்போது…
“இது ஒரு ஆவணப்படம். இது கொஞ்சம் தவறி இருந்தாலும் முழு ஆவணப் படமாக மாறி இருக்கும்.அப்படி மாறி இருந்தால் எல்லாராலும் ரசிக்க முடியாது .
ஆனால் இதை சுவாரஸ்யமாக அனைவரும் ரசிக்கும்படி ஒரு படைப்பாக உருவாக்கி வழங்கியிருந்தார் இயக்குநர். ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அடுத்தது பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
கதாநாயகியாக நடித்திருந்த நடிகை அபியை என் மகள் மாதிரி நினைத்துச் சொல்கிறேன். இந்த மேடையில்தான் நான் இதைச் சொல்ல வேண்டும். உனக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். மாநில விருது 100% கிடைக்கும்.அவ்வளவு அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அபிக்கு 17 வயது தான் ஆகிறது . இந்தச் சின்ன வயதில் இவ்வளவு நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது மாதிரி வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. ஆனால் அபி உன்னை யாரும் கமர்சியல் படங்களுக்குக் கதாநாயகியாக அழைக்க மாட்டார்கள்.
இதைவிட அடுத்த ஒரு படம் செய்ய வேண்டும் என்றால் இதைவிட சிறப்பான ஒரு படம் செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க வேண்டும். உனது பலமும் பலவீனமும் உனக்குத் தெரியும். நீயே அதை உடைத்து கடந்து வெளியே வர வேண்டும்.
அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொரு படமும் வெற்றியாகவே கொடுக்க வேண்டும் .ஒரு படி தவறிவிட்டாலும் பெரிய தோல்வி ஆகிவிடும். உலகத்தில் ஜெயித்தவர்கள் அனைவரும் உயரம் குறைவானவர்கள்தான் இங்கே இருக்கும் பாரதிராஜா அவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
இந்த அயலி தொடரை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் குஷ்மாவதியை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.இந்த மாதிரி ஒரு கதையைத் தயாரிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு சிந்தனை செய்வதற்கு தேர்ந்தெடுப்பதற்கே ஒரு ரசனை, தைரியம் வர வேண்டும்.
இதை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்றெல்லாம் யோசிப்பார்கள். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நல்ல புரிதல் வேண்டும். நல்ல இணக்கம் வேண்டும். ஏனென்றால் நான் வெண்ணிலா கபடிக்குழு கதையை பலரிடம் கூறினேன். அப்படி நான் கூறிய போது பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. யாருக்கும் புரியவில்லை.
வெண்ணிலா கபடி குழு தயாரிப்பாளர் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன். அதனால் அந்தக் கதை அவருக்குப் புரிந்தது. அவர் தயாரித்தார்.
தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் உள்ள அந்த புரிதல் அந்த நல்லிணக்கம் சரியாக இருந்ததால் தான் இணைந்து இப்படிப்பட்ட ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். சினிமாவில் அந்த நல்லிணக்கம் மிக மிக முக்கியமானது. அது இந்த படைப்பைத் திரையில் பார்க்கும் போது தெரிகிறது.
தமிழில் வெப் சீரிஸ் வெற்றி பெற்றதில்லை என்று சொல்லலாம். ஜீ டிவியைப் பொறுத்தவரை அவர்களின் முதல் வெற்றி விலங்கு தொடர். அடுத்தது அயலி என்று சொல்லலாம்.
பாரதிராஜா அவர்களை வைத்துக் கொண்டு இதே மேடையில் சொல்கிறேன். மண்ணின் மைந்தர் என்றால் அவர்தான். அவருடைய வேர்கள் தான் நாம். அயலி இயக்குநர் முத்துக்குமார். அவர் மாதிரி வளர்ந்து பெரிய இயக்குநராக வர வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
இப்படி ஒரு கதை ரசனை உள்ள தயாரிப்பாளராக பலராலும் பாராட்டப்பட்டவராக தயாரிப்பாளர் எஸ்.குஷ்மாவதி தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் எனலாம்.அவரது ‘எஸ்ட்ரெல்லாஸ் ஸ்டோரீஸ்’ நிறுவனத்தின் சார்பில் தரமான கதை உள்ள படைப்புகளை எதிர்பார்க்கலாம்.
Abi Nakshatra will get National award says Suseenthiran