தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநலத்திலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
அங்குள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நாளை நடைபெற உள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.
காரைக்காலின் 5 தொகுதிகளுக்கு காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்க அறையில் செய்தியாளர்களை பூர்வா கார்க் சந்தித்தார்.
“மத்திய அரசின் கொரோனா விதிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவை வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டும்.
கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அல்லது 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
அந்த நபர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினுள் அனுமதி வழங்கப்படும்.
அவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து கொண்டு வர வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படும்.
பிபிஇ கிட் வேண்டுமாலும் வாங்கிக் கொள்ளலாம்.
வெற்றி வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வெற்றி ஊர்வலம் நடத்தக்கூடாது.
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு அறைக்கு 7 டேபிள்கள் போடப்பட்டது. தற்போது கொரோனா விதிகளை பின்பற்றப்படுவதால் ஒரு அறைக்கு 5 டேபிள்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது.
இதனால் தேர்தல் முடிவுகள் வர சற்று காலதாமதம் ஆகலாம்.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் காலை 8 மணிக்கு, முதல் 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.
முன்னணி நிலவரம் 10 மணிக்கு தெரியவரும். இதன் முடிவு 12.30 மணி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக 1 மணிக்கு 8 தொகுதிகள் எண்ணப்படுகிறது. அதன் முடிவுகள் தெரிய 6 மணி வரை ஆகலாம்.
இறுதியாக மாலை 6 மணிக்கு 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதன் முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகலாம். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல் 5 சுற்றுவரை செல்ல வாய்ப்புகள் உள்ளது.
நாளை ஞாயிறு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
Puducherry Election Result will be delay says District Collector Purva Garg