தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: விஜய்குமார், விஸ்மயா மற்றும் பலர்.
இசை – கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு – பிரவீன் குமார்
எடிட்டர் – லீனா.எம்
இயக்கம் – விஜயகுமார்
தயாரிப்பு – நடிகர் சூர்யா (2டி எண்டர்டெயின்மெண்ட்)
பிஆர்ஓ – யுவராஜ்
கதைக்களம்….
போபால் விஷவாயு கசிவு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. மேலும் தமிழ்நாட்டில் நடக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் இந்த கதை பொருந்தும்.
இங்கிலாந்து நாட்டில் அனுமதி மறுக்கப்படும் ரசாயன தொழிற்சாலையை, (பூச்சி கொல்லி மருந்து) தமிழ்நாட்டின் செங்கதிர்மலையில் திறக்கிறார் தொழிலதிபர் ராஜ்பிரகாஷ்.
அந்த தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார்கள் கெமிக்கல் என்ஜினியரிங் படித்த நாயகன் லெனின் மற்றும் அவரது 2 நண்பர்கள்.
அங்கு ஹீரோ விஜயகுமாருக்கு அந்தத் தொழிற்சாலையில் டாக்டராக இருக்கும் நாயகி விஷ்மாயாவுக்கும் காதல் வளர்கிறது.
ஒரு கட்டத்தில் தொழிற்சாலைக்கு ஆடிட்டிங் வருகிறார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து சரி செய்துவிடுகிறார் முதலாளி.
ஒருமுறை தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் விஷவாயுவினால் அங்குள்ள மக்கள் செத்து மடிகின்றனர்.
எனவே அந்த கம்பெனிக்கு எதிராக களமிறங்குகிறார் நாயகன்
.
ஆனால் இவரை காரணம் காட்டி தொழிற்சாலை முதலாளியும் ஜாதி அரசியல் கட்சித் தலைவரும் போட்டுத்தள்ள பார்க்கின்றனர். அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நடிப்பு இயக்கம் என வெரைட்டி காட்டியிருக்கிறார் விஜய்குமார். ரொமான்ஸ் காட்சியில் இன்னும் மெச்சூர்ட்டி தேவை.
உறியடி முதல் படத்தில் இருந்த உற்சாகம் இதில் சற்று போதவில்லை இவருக்கு.
ஆனால் மக்களுக்காக போராடும் காட்சியில் உற்சாகப்படுத்துகிறார். தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த பின்னர் காட்சிகள் சூடு பிடிக்கிறது.
டாக்டராக வரும் நாயகி காதல் காட்சியிலும் மக்களுக்காக போராடும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.
நண்பர்களாக வருபவர்களும் அரசியல்வாதியாக வரும் நபர்களும் மற்ற ஊழியர்களும் நம்மை கவர்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
96 பட இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மக்கள் மலையாக மரணமடைந்து கிடக்கும் காட்சியில் இவரின் இசை நம் கண்களை கலங்க வைக்கும்.
“அக்னி குஞ்சொன்று ….” , “வா வாபெணணே ….” , “உரிமை காக்க மனமே எழு … ” உள்ளிட்ட பாடல்களும் வரிகளும் கூடுதல் சிறப்பு ! தத்தகிட.. தத்தகிட.. என்ற வரிகள் கொண்ட தீம் மியூசிக் சூப்பர்.
பிரவீன் குமாரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அத்தனையும் அழகு. மக்களின் பரிதவிப்பு விஷவாயு பாதிப்பு என அழகாக படமாக்கியிருக்கிறார்.
ஒரு காட்சியில் ஒரு குழந்தையை விஷவாயுவில் இருந்து காப்பாற்ற அதன் தாய் பீரோவில் ஒளித்து வைப்பது நம்மை ஏதோ செய்யும்.
கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார்.
உறியடி முதல் படத்தை இயக்கி நடித்த விஜயகுமார் தான் இப்படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
படத்தின் வசனங்கள் சாட்டையடி. ஆனால் காட்சிகள் மிக மெதுவாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கலாம்.
ஆனால் யதார்த்த உண்மைகளை பார்க்கும்போது நாமும் இப்படிதான் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.
மக்களை அடகு வைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பாடத்தை சொல்லும் படம் இது.
க்ளைமாக்ஸ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என விரும்பும் நபர்கள் இப்படத்தை பார்க்கலாம்.
உறியடி2… மக்கள் பிரதிநிதிகளுக்கு மரண அடி