தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பின்னணிப் பாடகர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட பிரதீப்குமார் இந்த படத்தை தயாரித்து இசையமைத்திருக்கிறார்.
சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படம் மூலம் புகழ்பெற்ற பிரசாத் ராமர் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்ற இந்த படம் நாளை மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் வெளியாகிறது.
ஸ்டோரி…
மதுரையில் தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பவர் நாயகன். சோசியல் மீடியாவில் எந்தப் பெண் கிடைத்தாலும் அவளிடம் பேசி நெருக்கமாக பழகி பின்னர் அவளை கழட்டி விடுவது நாயகனின் வழக்கமான வேலை.
ஒரு கட்டத்தில் பேஸ்புக் மூலம் இவருக்கு அறிமுகம் ஆகிறார் மயிலாடுதுறை சேர்ந்த நாயகி. அவளுக்கு பர்த்டே வரவே அவளைக் காண பைக்கில் தன் நண்பனுடன் செல்கிறார் நாயகன்.
உனக்கு பிறந்தநாள் பரிசு தர நேரில் வந்திருக்கிறேன் என அவளை அழைத்துக் கொண்டு மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார்-க்கு பைக்கில் செல்கின்றனர்.
இருவரும் பைக்கில் சுற்றிக் கொண்டிருக்கும்போது இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தென்படுகின்றன. இதனிடையில் பைக் பிரச்சனை டிராபிக் போலீஸ் லைசன்ஸ் பிரச்சினை என உள்ளிட்டவைகளை சந்திக்கின்றனர்.
பிறந்தநாள் பரிசு நாயகி கேட்க திடீரென எதிர்பாராமல் முத்தமிட்டு விடுகிறார் நாயகன். இதனையடுத்து அவனை அடித்து விடுகிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது? இருவரும் காதலிக்க தொடங்கினார்களா? அல்லது வழக்கம்போல கழட்டி விட்டாரா? நாயகனின் மனநிலையை புரிந்து கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
செந்தூர் பாண்டியன் நாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பிள்ளைகளை போலவே வருகின்றனர்.
எந்த பெண்ணையும் காம கண்ணோட்டத்துடன் பார்க்கும் நாயகன் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார் செந்தூரப் பாண்டியன்.
அப்பா இல்லாத பெண் பிள்ளை.. வீட்டில் கண்டிப்பான போலீஸ் அம்மா ஆனாலும் ஊர் சுற்ற ஆசைப்படும் இளவயது பெண்ணின் மன உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார் நாயகி ப்ரீத்தி.
இவர்களுடன் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் காந்தி கலகலப்புக்கு உதவி இருக்கிறார்.. இளைஞர்கள் பேசிக் கொள்ளும் டபுள் மீனிங் காமநெடிகளை ஆங்காங்கே கேட்க முடிகிறது.. ஆனால் ஒரு சில எல்லை மீறிய வார்த்தைகளாக இருக்கிறது..
முக்கியமாக புகை காட்சிகளில் கீழே புகை பிடிப்பது குற்றம் என்ற வாசகங்கள் இடம்பெறவில்லை என்பது ஏன் தெரியவில்லை??
பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.
இசை மற்றும் பாடல்களை உருவாக்கிய அதே நேரத்தில் பிரதீப் குமார் இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
ஒளிப்பதிவாளராக உதய் தங்கவேல் பணியாற்ற படத்தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்குநராக விஜய் ஆதிநாதன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.
சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கும் இளசுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எனக் கூறப்பட்டாலும் ஒரு 20 நிமிட குறும்படத்தை இரண்டு மணி நேர திரைப்படம் ஆக ஏன் கொடுத்தார் என்பது தான் தெரியவில்லை.
ஒரு மெக்கானிக்கிடம் பைக்கை கொடுக்கும்போது அவர் அந்த வாகனத்தை சரி செய்யும் வரை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.. அதுபோல ஹோட்டலில் சாப்பிடும் போது ஹோட்டலில் உணவு வைப்பது முதல் சாப்பிடுவது முதல் அவர்கள் செல்பி எடுப்பது முதல்ல என ஒவ்வொரு காட்சிகளையும் வைத்து நம்மை நோகடித்து விட்டார்கள்.
இப்படியாக ஒவ்வொரு காட்சிகளுக்கும் 10 15 நிமிடங்கள் எடுத்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்.
நம் வீட்டுப் பெண்களைப் போல மற்ற பெண்களையும் பார்க்க வேண்டும் என தத்துவத்தை சொன்னாலும் இறுதியாக நாயகனின் தங்கையும் தடம் மாறி செல்லும் காட்சிகளும் இடம் பெறுகிறது..
அதாவது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற தத்துவத்தை பேசினாலும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.’ என்று ஏன் இந்த படத்திற்கு தலைப்பு வைத்தார் இயக்குனர் என்பது தான் புரியாத புதிராகவே இருக்கிறது.?
சரி இயக்குனர் தான் இப்படி என்றால் ஒளிப்பதிவாளரும் நம்மை நோகடித்து விட்டார்.. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஒரே ஆங்கில் மட்டுமே படம் பிடித்திருக்கிறார்.
ஒரு வண்டி ஒரு இடத்திற்கு சென்று சேர ஐந்து நிமிடங்கள் ஆனால் அதை அப்படியே காட்டிக் கொண்டே இருக்கிறார்..
நல்லவேளை மதுரையில் இருந்து மயிலாடுதுறை செல்ல 8 மணி நேரம் ஆகும் காட்சியை 8 எபிசோடு எடுக்காமல் விட்டுவிட்டார் அதுவே பெரிய நன்றி..
சோசியல் மீடியா என்பது ஆபத்தானது அதில் மூழ்கிக் கிடக்கும் ஆண்கள் எந்த கண்ணோட்டத்துடன் நம்மை அணுகுகிறார்கள் என்பதை பெண்கள் கவனித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொன்னாலும் அதை சொன்ன விதத்தில் தடுமாறி நம்மை தள்ளாட வைத்து விட்டார் இயக்குனர்.
Nalla Perai Vaanga Vendum Pillaigalae movie review