தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்… அப்பா மகள் பாசத்தை சொல்லும் மற்றொரு சித்திரம். பிரபல சண்டை இயக்குனர் சில்வா இயக்கியுள்ள முதல்படம்.
கதைக்களம்..
விவசாயி சமுத்திரக்கனி. தன் மனைவி வித்யா பிரதீப். இவர்களது மகள் மானஸ்வி ஆகியோருடன் செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் மழைக்காலத்தில் மின்சாரம் தாக்கி மரணமடைகிறார் வித்யா.
தங்கள் கிராமத்தில் மருத்துவமனையோ மருத்துவரோ இருந்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியும். இனி தன் கிராமத்தில் எந்த உயிரும் இதுபோன்ற காரணத்தால் மரணிக்கக்கூடாது என நினைத்து தன் மகளை டாக்டராக்க படிக்க வைக்கிறார்.
குட்டிப் பெண் மானஸ்வி வளர்ந்து பூஜா கண்ணனாக மருத்துவம் படிக்கிறார்.
ஒரு பிரச்சினையால் பூஜாவை பழிவாங்க நினைக்கிறார்கள் அவருடன் படிக்கும் மாணவர்கள். எனவே பூஜா குளிக்கும் வீடியோவை மறைமுகமாக எடுத்து அதை இணையத்தில் பகிர்கின்றனர். இவர்கள் பெரிய இடத்துப் பிள்ளைகள்.
இதனால் பூஜா மாயமாகிறார். தன் மகளை தேடி அலைகிறார் சமுத்திரக்கனி. அந்த வீடியோவை எடுத்தவர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்தாரா? என்ன செய்தார்? மகள் எங்கு போனார்? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கேரக்டர்கள்..
ஒரே மாதிரியான கேரக்டர்களை செய்யாமல் அடிக்கடி கதைக்களத்தை மாற்றும் சமுத்திரக்கனியை நிச்சயம் பாராட்டலாம். வயதான கேரக்டரை அருமையான தன் உடல்மொழியால் செய்திருக்கிறார் கனி.
மகளை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு வரும் காட்சிகளில் நிச்சயம் நம்மையே அழவைக்கிறார் சமுத்திரக்கனி.
அதுபோல் அம்மா இறந்துவிட்ட காட்சியில் மானஸ்வி அழும் காட்சியில் நம் கண்களும் குளமாகும். அந்த காட்சியில் கிளிசரின் இல்லாமலே அவ்வளவு அழகாக உணர்வுபூர்வமாக நடித்துள்ளார் குட்டி நட்சத்திரம் மானஸ்வி.
நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா தான் இப்பட நாயகி. தன் முதல்படத்திலேயே அருமையான நடிகை என பாராட்டுக்களை பெறுவார். சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை தவிர்த்திருக்கலாம்.
அழகான அன்பான அம்மாவாக வித்யா பிரதீப். பூஜாவை மிரட்டும் 3 இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தாரின் நடிப்பும் சிறப்பு. அரசியல்வாதி சுப்ரமணிய சிவா நடிப்பு மிரட்டல்.
போலீசாக வரும் ரீமா கல்லிங்கள் அசத்தல். பூஜா வழக்கில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் இவர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பு. அதுபோல் மற்றொரு போலீஸ் பாண்டியனும் கச்சிதம்.
டெக்னீஷியன்கள்..
சாம் சி எஸ் பின்னனி இசை மிரட்டல். அப்பா சென்டிமெண்ட்டில் வைரமுத்து வரிகளில் ஒரு அருமையான பாடலை கொடுத்துள்ளார். இனி தந்தையர் தினங்களில் அந்த பாடல் அடிக்கடி ஒலிக்க கேட்கலாம்.
அழகான காட்சிகளை கொடுத்த ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் மற்றும் வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். இரவு காட்சிகளும் ரசிக்க தக்க வகையில் உள்ளது.
படத்தின் அனல் பறக்கும் சண்டை காட்சிகளை வைக்காமல் அழகான குடும்ப படத்தை கொடுத்துள்ளார் ஸ்டன்ட் சில்வா. ஒரு அறிமுக இயக்குனராக மாஸ்டர் சில்வா வெற்றிப் பெற்றுள்ளார். இந்த படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதி தயாரித்துள்ளார்.
க்ளைமாக்ஸ் ஏற்கும்படியாக இல்லை. தவறே செய்யாத சமுத்திரக்கனி அந்த முடிவை எடுப்பது ஏன்? என்பதுதான் இயக்குனரிடம் பெரிய கேள்வி.
ஆக இந்த சித்திரைச் செவ்வானம்.. சீரழிந்த (அழகிய) சித்திரம்.
Chithirai Sevvanam movie review and rating in tamil