தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
வெளியுலக தொடர்பே இல்லாத கிராமம் திருநெல்வேலி அருகே செங்காடு என்ற பகுதி.. அங்கு பஞ்சு உற்பத்தி தொழில் நடைபெறுகிறது.
இங்குள்ள மக்களை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்குகிறான் ராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலேயன். இவன் அந்த பகுதி மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறான்.
அவரது மகன் ஜஸ்டின் தங்களிடம் வேலை பார்க்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறான்.
இதனால் தங்கள் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டால் பெற்றோர்களே அவர்களை ஜஸ்டினிடம் இருந்து காப்பாற்ற கொலை செய்து விடுகின்றனர்.
இப்படியான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு ஆகஸ்ட் 15 1947 நள்ளிரவு சுதந்திரம் கிடைக்கிறது.
ஆனால் தன்னுடைய சொந்த பிரச்சினைக்காக அந்தப் பகுதி மக்களுக்கு சுதந்திரம் அடைந்ததை தெரிவிக்காமல் இருக்கிறான் ராபர்ட்.
பின்னர் அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது எப்படி தெரிந்தது என்பதுதான் படத்தின் கதை. இதில் கௌதம் கார்த்திக் யார்? நாயகி ரேவதி யார்? என்பதை பார்ப்போம்.
கேரக்டர்கள்…
தன்னுடைய கேரக்டருக்காக தன் வெள்ளை தோலை கருப்பாக்கி நடித்திருக்கிறார் கௌதம் கார்த்திக்.. திருட்டு வேலைகள் செய்யும் அவர் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக துணிந்து நிற்கிறார்.
தன் அம்மாவின் மரணத்திற்கு இந்த ஊர் தான் காரணம் என்பதால் கௌதம் செய்யும் சேட்டைகள் சுவாரஸ்யம். கிளைமாக்ஸ் காட்சியில் கௌதம் பேசும் சாட்டையடி வசனங்கள் நம்மை அறியாமல் கைதட்ட வைக்கும்.
நாயகியாக ரேவதி.. இவர் அருவி பட நாயகி அதிதி பாலனின் தங்கை.. இந்த கேரக்டருக்கு இவரை விட சிறப்பானவர் எவரும் இருக்க முடியாது என்பதை தன் நடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
அந்த கிராமத்தின் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். இவரின் சிறு வயது தோற்றத்தில் நடித்த அந்த குட்டி பெண்ணும் ஒரே சாயலில் இருப்பது டைரக்டரின் தேர்வை காட்டுகிறது.
இவர்களுடன் நடித்துள்ள புகழ் மதுசூதனன் கலையரசன் என அனைவரும் தேசிய விருது பெரும் அளவுக்கு நடித்துள்ளனர். பொதுவாகவே ஏதாவது பேசிக் கொண்டே இருக்கும் புகழ் இதில் நாக்கு அறுபட்டு பேச முடியாமல் தவிக்கும் காட்சிகள் அருமை.
மேலும் பாட்டியாக நடித்துள்ள விஜயலட்சுமி நடிப்பில் நம்மை கவர்ந்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவின் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், கௌதம் கார்த்திக்கின் தாயாக வரும் நீலிமாராணி ஆகியோர் சிறப்பு.
இவர்கள் இல்லாமல் ராபர்ட் மற்றும் ஜஸ்டின் இருவரும் தெறிக்க விட்டு உள்ளனர்.. ஆங்கிலேயே அதிகாரி ராபர்டாக (ரிச்சர்ட் அஷ்டன்), அவரது மகன் ஜஸ்டினாக (ஜேசன் ஷா)… இவர்களை பார்த்தால் நமக்கே கொன்றுவிடத் தோன்றும் வகையில் வெளுத்துக்கட்டி உள்ளனர்.
டெக்னீஷியன்கள்…
ஒரு இயக்குனருக்கு முதல் படம் என்றால் கமர்சியலாக செய்து இருப்பார்கள். ஆனால் தன் உழைப்பின் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவுக்கு ஒரு பொன்-முடியை தந்து இருக்கிறார் பொன் குமார்.
இவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் ஆவார்.
1940-களில் கேட்ட இசையை கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர்.. அந்த காலகட்டத்திற்கே நம்ம இழுத்துச் சென்று விடுகிறார் இசையமைப்பாளர்..
செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவும் சுதர்சன்.ஆர்-இன் படத்தொகுப்பும் பெரும்பலம். கண்களுக்கும் விருந்து.
படத்திற்கு பெரிய பலம் கலை இயக்குனர் தான். சுதந்திர காலகட்டத்தில் இந்தியர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை அப்படியே தத்துரூபமாக வடிவமைத்து கொடுத்துள்ளார். கலை இயக்குனர் மறைந்த சந்தானத்திற்கு அளவில்லா பாராட்டுக்கள்.
எந்த ஒரு இடத்திலும் படத்தில் தொய்வு ஏற்படாத வண்ணம் படத்தை கொடுத்திருக்கிறார் பொன் குமார். க்ளைமாக்ஸில் நமக்குள் ஒரு சுதந்திர உணர்வை ஏற்படுத்துகிறது அதிரடி வசனங்கள்..
முக்கியமாக சுதந்திர காலத்தில் நமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்களை நம் கண் முன் நிறுத்தியுள்ளார்.
சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா.? என நம்மை ஏங்க வைத்து விட்டார். அதுதான் பொன் குமாரின் முதல் சிக்ஸர்.
ஆக… ஆகஸ்ட் 16 1947.. முருகதாஸ் தந்த பொன்(குமார்)குடம்
August 16 1947 movie review and rating in tamil