தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது திறப்பு விழாவுக்கு வருகை தந்த சிவகுமாரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர். அப்படிக் கூடியவர்களில் ஒருவர் சிவகுமார் வந்து கொண்டிருக்கும் போது தனது செல்போனை உயர்த்தி செல்ஃபி எடுக்க முயன்றார்.
ஆசையுடன் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை ஆவேசமாக சிவக்குமார் தட்டிவிட்டதில், செல்போன் உடைந்து சிதறியது. செல்பி எடுக்க முயன்ற இளைஞரை நடிகர் சிவக்குமார் கோபத்துடன் பார்த்ததால், சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த செய்தி வைரலாக பரவியது. இதனையடுத்து சிவகுமார் விளக்கம் அளித்தார்.
செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்துடன் எப்படி வேண்டுமானாலும் செல்பி எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?
ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களிலும், விமான நிலையங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.’ என்று விளக்கம் அளித்திருந்தார்.
அவர் என்னதான் இப்படி விளக்கம் அளித்திருந்தாலும் அவரது விளக்கத்தை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சற்றுமுன் 25 நொடிகள் அடங்கிய ஒரு வீடியோவில் பலரும் எனக்கு எதிராக பேசி வருவதால் அந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்துள்ளார்.