தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.
இவர் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
தண்டனைக் காலம் முடிந்து, தமிழகம் திரும்பிய அவர் தீவிர அரசியலில் ஈடுப்படுவார் என எதிர்பார்த்தனர்.
மேலும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னை வந்த பிறகு செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.
ஆனால் தற்போது, அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
“நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சி தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சி தலைவர் (எம்ஜிஆர்) மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை.
புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்.
இவ்வாறு சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
*தமிழக அரசியலில் கடந்த 25 வருடங்களாகவே பேசப்பட்ட பெயர்களில் முக்கியமான பெயர்கள் ரஜினிகாந்த் & சசிகலா.
இவர்கள் இருவரும் நேரடி அரசியலில் ஈடுப்படவில்லை. எந்த ஒரு கட்சியிலும் பொறுப்பிலும் இல்லை. (சசிகலாவுக்கு டிடிவி தினகரனின் அமமுக -வில் பதவி தரப்பட்டது. அது சிறையிலேயே சென்றது எனலாம்.)
ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
ஜெ-வுக்கு பின்னால் இருந்துக் கொண்டே மறைமுகமாக அனைத்து அமைச்சர்களையும் எம்எல்ஏ-க்களையும்.. ஏன் அரசாங்கத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் சசிகலா.
ஜெ. மறைவுக்கு பின்னர் அதிமுக-வுக்கு சில நாட்கள் தலைமை தாங்கினார் சசிகலா. சில நாட்களில் சசி தமிழக முதல்வர் ஆவார் என எதிர்ப்பார்த்த நிலையில் தான் சிறை தண்டணை பெற்றார்.
அதுபோல… ரஜினியின் வாய்ஸ்க்கு என்று எப்போதுமே தனி மதிப்பு தமிழக தேர்தலில் இருக்கும். 1996ல் ஜெ. அரசு வீழ்த்தப்படுவதற்கு முக்கியமான காரணமே ரஜினி தான்.
அது போல தா ம க.வின் தலைவரே ரஜினி என அப்போது மூப்பனாரே சொல்லியிருந்தார்.
2018 முதல் தன் அரசியல் பிரவேசத்தையும் தான் ஆட்சிக்கு வந்தால் எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பேன் என்றும் மேடைகளில் பேசினார் ரஜினி.
ஆனால் 2020 டிசம்பர் 29ல் அரசியலுக்கு வர மாட்டேன். புதிய கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.
ரஜினிகாந்த் மற்றும் சசிகலா இருவருமே நேரடி அரசியலுக்கு வராமல் அரசியலை விட்டு விலகுகிறேன் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ex CM Jayalalithaa aide Sasikala quits from TN politics