தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
அருமபுரி என்ற கனிமவள நிறைந்த காட்டுப்பகுதியில் சுரங்க அமைக்க திட்டமிடுகிறது அரசு.. இதில் சில தனியார் நிறுவனங்களும் தொடர்பில் உள்ளன.
இந்த சுரங்கம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் மக்கள் படையை கொண்டு போராடுகிறார் விஜய் சேதுபதி. இவரது முகம் கூட போலீசுக்கு தெரியாது.
எனவே அவர்களை தீர்த்துக்கட்ட சேத்தன் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. இந்தப் படையில் டிரைவராக வந்து இணைகிறார் சூரி. இவர் உயர் அதிகாரிகளுக்கு கூட கட்டுப்படாத நேர்மையான நபர். அந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் நாயகி பவானி ஸ்ரீ-யின் மீது காதல் கொள்கிறார்.
காட்டுப்பகுதியில் ஜீப் ஒட்டி செல்லும் போது அந்த மக்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்கிறார் சூரி. அப்போது யார் என்று தெரியாமல் மக்கள் படைத்தலைவன் விஜய் சேதுபதியை ஓரிரு முறை பார்த்து விடுகிறார்.
ஒரு கட்டத்தில் போலீசால் தேடப்படுபவர் விஜய் சேதுபதி தான் தெரிய வரும்போது அவரை பிடித்து கொடுக்க முயற்சிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதியின் உறவினர் தான் தன் காதலிக்கும் பெண் என்பது சூரிக்கு தெரிய வருகிறது.
தான் நேசிக்கும் காவல்துறைக்கு உதவி செய்தாரா.? அல்லது தன் காதலிக்காக விஜய்சேதுபதியை காப்பாற்றினாரா.? என்பதுதான் ‘விடுதலை’ படத்தின் கதை.
கேரக்டர்கள்…
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தி வந்த போது பலருக்கு கிண்டலாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த படம் பார்த்த பிறகு அவர்கள் சூரியை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.
ஒரு முறை இவரது உயர் அதிகாரி மூணார் ரமேஷ் கேட்கும் போது.. “என்னடா கோபம் வருதா.? ஆமாங்கய்யா.. என்னை அடிக்க தோணுதா.? ஆமாங்கய்யா என சூரி சொல்லும்போதும்…
சேத்தன் சூரியை பார்த்து.. “இவனை என்னய்யா பண்றது? எத்தனை முறை தண்டனை கொடுத்தாலும் செய்கிறான்.. ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்கிறான்.” எனும் போது தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது.
நாயகி பவானி ஸ்ரீ இடம் தன் காதலை சொல்லும் போதும் விஜய் சேதுபதி துரத்தும் காட்சிகளும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.
விஜய் சேதுபதி சிறிது நேரமே வந்தாலும் தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அவருக்கு நிறைய காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
கிளைமாக்ஸில் விஜய்சேதுபதி பேசும் வசனங்கள் அனல் தெறிக்கிறது.
இவர்களுடன் உயர்அதிகாரி கௌதம் மேனன், போலீஸ் சேத்தன், நாயகி பவானி ஸ்ரீ, ஏட்டையா உள்ளிட்ட பலரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஒரு ராத்திரி நீ இல்லாமல் சென்றதற்கே என்னால் தனியாக வாழ முடியலை.. இனி நீ இல்லாமல் எப்படி வாழ்வேன்? என நாயகி தன் பாட்டியை பார்த்து கதறும் போது பலரின் கண்கள் கலங்கும்.
போலீஸ் சித்திரவதை அனுபவிக்கும் போதும் தன் பெற்றோர் இழந்த கதையை கூறும் போதும் பவானி அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறார்.
டெக்னீஷியன்கள்…
ஒரு படத்தில் கதை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகனை சீட்டிலிருந்து எழ வைக்காமல் செல்போனை கையில் எடுக்க வைக்காமல் ஒரு இயக்குனரால் படத்தை கொடுக்க முடியும் என்றால் அதுதான் உண்மையான வெற்றி. அதை சரியாக 100% கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு ரயில் விபத்து காட்டப்படுகிறது.. நிஜ ரயில் விபத்தை நம் கண் முன்னால் முன்னே காட்டி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறனும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜூம்.
நம்மை பதற வைக்கும் ஒரு விபத்தை கலை இயக்குனர் ஜாக்கியுடன் இணைந்து கொடுத்துள்ளனர்.
இதற்கெல்லாம் மெருகூட்டும் வகையில் இளையராஜாவின் பின்னணி இசை ஒலிக்கும் போது நம்மை அறியாமல் கண்கள் கலங்கும்.
1980 – 90களில் நாம் கேட்டு ரசித்து பார்த்த இசையை மீண்டும் கொடுத்து இருக்கிறார் இளையராஜா. முக்கியமாக விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி.. துப்பாக்கியை கையில் எடுக்கும் சூரி உள்ளிட்ட பல காட்சிகளில் பின்னணி இசையை தெறிக்க விட்டுள்ளார்.
அதுபோல சூரி – பவானி நடந்து செல்லும் போது ‘உன்னோடு நடந்தால்..’ என்ற பாடல் தனுஷ் குரலில் ஒலிக்கும் போது நம்மால் ஒரு சிறந்த இசையை உணர முடிகிறது.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ். ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஜாக்கி கலை பணிகளை பவனிக்க பீட்டர் ஹெய்ன், ஸ்டன்ட் சிவா ஆகியோ சண்டை பயிற்சிகளை வடிவமைத்துள்ளனர் படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.
இளையராஜா – வெற்றிமாறன் என சிறந்த கலைஞர்கள் இணைந்து ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால் படத்தின் கதையை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது.. திருப்புமுனையாக சில காட்சிகளை வைத்திருந்தால் இன்னும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கும்.
என்னதான் நாயகன் சாதாரண டிரைவர் ஆக இருந்தாலும் அவரே குற்றவாளியை பிடிக்க வழி நடத்துவது எல்லாம் சினிமாத் தனம்.
இவை எல்லாம் மீறி படத்தை சிறப்பாக தன்னுடைய மேக்கிங்கால் கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
ஆக விடுதலை.. ராஜா இசையில் வெற்றி மெட்டு..
Viduthalai movie review and rating in tamil