தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் போராட்டம் செய்து வருகின்றனர்.
பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
மேலும் எல்லா தியேட்டர்களிலும் ஆன்லைட் டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும், ‘பார்க்கிங்’ கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கி இன்றோடு 27 நாட்கள் ஆகிவிட்டது.
மேலும் கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விட்டனர்.
இதனால் சினிமா துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்..
ஒரு சில நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கியிருந்தாலும் சிலர் வெளிநாடுகளுக்கு பறந்து விட்டனர்.
சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பட அதிபர்கள் நேரில் சந்தித்து வேலை நிறுத்தம் குறித்து விளக்கி உள்ளனர்.
டைரக்டர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
வேலை நிறுத்தத்தால் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பட அதிபர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஓரிரு நாளில் மீண்டும் சந்தித்து பேச உள்ளனர்.
அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வேலை நிறுத்தம் கைவிடப்படுமா? என்பது அப்போதுதான் தெரியவரும்.