தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் வேண்டுகோள்.
மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. அன்று 150 பெண்களும் கண்ணீரோடு டாஸ்மாக் கடைகளை இனி திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம்.
மீண்டும் லட்சக்கணக்கான பெண்கள் சார்பாக பணிவான வேண்டுகோள்….
1. 45 நாட்களுக்கு பிறகு திறப்பதால் பெரும் கும்பலாக குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது. இதனால் நோய் தொற்று ஏற்படும்.
2. டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இருக்கும் இப்போது கடன் வாங்கி குடித்து கடனாளி ஆகி விடுவார்கள்.
குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வந்து தற்கொலைகள் நிகழ வாய்ப்புள்ளது. விபத்து, திருட்டு,வழிப்பறி, கற்பழிப்பு,கொலை போன்றவற்றிற்கும் வழிவகுக்கும்.
3. குடிப்பவர்கள் போதையுடன் இருக்கும் போது கண்ட இடத்தில் எச்சில் துப்புவார்கள், மற்றும் சிகரெட்,பீடி புகைத்து புகையை வெளியிடுவார்கள். இதனால் கிருமி தொற்று ஏற்படும்.
4. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில் உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது. ஆனால் குடிப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனோவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
5.ஊரடங்கால் 45 நாட்கள் குடிக்காமலும் வாழ முடியும் என நிரூபித்துள்ளார்கள்.
உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும் அவர்களை மீண்டும் குடிப்பதற்கு அரசே வழி வகை செய்யலாமா.
குடி குடியை கெடுக்கும் என்ற வாசகம் ஒவ்வொரு பாட்டில்களிலும் அரசே எழுதி வைத்துள்ளது. அரசே குடியை கெடுக்க துணை போகலாமா
6.டாஸ்மாக் அரசு பணியாளர்களும் பூரண மதுவிலக்கே மக்களுக்கும் ,அரசுக்கும் நல்ல தீர்வு என்று தங்களுக்கு கடிதம் தந்துள்ளார்கள்.
7 மாண்புமிகு அம்மா அவர்கள் படிப்படியாக குறைத்து முழு மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று பதவி ஏற்றதும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற, அவர்களின் கனவை நனவாக்க தங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
அம்மாவின் அரசு பெண்களின் அரசு! கோடானு கோடி பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள்!
இவ்வாறு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
PT Selvakumar request TN Govt to reconsider Tasmac opening order