தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான கமல்ஹாசன் அறிக்கையில்…
“தமிழகத்தை தலை நிமிரச் செய்த ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.
ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன்.
மாற்றத்துக்கான மக்கள் எழுச்சியைக் கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன். அதுபோலவே கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய ‘பிக்பாஸ் – சீசன் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்.
இதுவும் மக்களுடனான பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும் உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது.
அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும் அரசியல் வேலைகளும் தொடர்ந்தன. பிரச்சாரத்தைத் தொடங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது.
இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன்.
மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம்.
இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன்.
மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் இது தொடரும்.” என அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Kamalhassan statement about his health and surgery