தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாதி என்பது உணர்வே.. அரசியல் சினிமாவை விட்டு விலக மாட்டேன்.. – ஆர்.கே. சுரேஷ்
காடு வெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.
மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர், இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:-
“என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன்.
சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15 வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?
வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.
இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம்.
இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே.”
இறுதியாக படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகம் பேசியதாவது:-
“காடுவெட்டியை என்னால் இயக்க முடிந்தது என்றால் அதற்கு முதல் காரணம் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்தான். இந்த படத்திற்கு சென்சார் 31 கட்டுகள் கொடுத்தது.
சென்சார் பிரச்சனை, கோர்ட் வழக்கு என்று வந்தபோது அண்ணன் மகேந்திரன்தான் நம்பிக்கையையும் 100 யானை பலத்தையும் தந்தார்.
காடுவெட்டி என்ற தலைப்பை வைக்கக்கூடாது என்று சொன்ன சென்சார் போர்டிடம் எனது விளக்கத்தை கொடுத்தேன். காடுவெட்டி பெயருக்கு பெரிய வரலாறு இருக்கிறது.
அந்த காலத்தில் மன்னர்கள் போர் பயிற்சிக்காக காட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி போர் பயிற்சிக் களமாக பயன்படுத்துவார்கள்.
அதனை போர்க்குடி மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதனை ஊர்களாக மாற்றுவார்கள். அப்போது அதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள். இப்படி தமிழ் நாட்டில் 11 இடங்கள் உள்ளன. ஆக காடுவெட்டி ஒரு சரித்திரம் என்று விவாதித்தேன். இந்த தலைப்பு கிடைத்தது.
காதல் என்ற சப்பை காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை தலைமுறையாக வன்முறையை சேர்க்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் வட மாவட்டத்து மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, அரசியலை உள்ளது உள்ளபடி பேசும்.
நிறைய ஹீரோக்களிடம் இந்த கதையை சொன்னபோது அவர்களுக்கு கதை பிடித்திருந்தது. டைட்டிலை சொன்னபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். ஆனால் படத்தின் தலைப்புக்காகவே இந்த படத்தில் நடிக்க ஆர்.கே.சுரேஷ் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோ கிடைப்பது அரிது. அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி” என்றார்.
I wont quit Cinema and Politics says RK Suresh