தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று அக்டோபர் 27ல் நடிகர் சிவகுமார் தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். எனவே பல்வேறு பிரபலங்கள் சிவகுமாரை அவரு இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் செய்திருந்தனர்.
இந்த பிறந்தநாள் விழாவில் இயக்குநர் பாலாவும் கலந்துக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளதை ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
“என்னை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க, மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்”.
இவ்வாறு தெரிவித்துள்ளார் சூர்யா.
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா’ படம் 2001-ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான ‘பிதாமகன்’ படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா.
நடிகர் சூர்யாவுக்கு இப்படியொரு நடிப்பு திறமையா? என கோலிவுட்டே வியக்குமளவுக்கு நடிக்க வைத்தவர் பாலா தான் என்றால் அது மிகையல்ல. அதன்பின்னர்தான் சூர்யாவிற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இணைகின்றனர்.
ஆர்யா விஷால் நடித்த அவன் இவன் படத்தில் பாலாவுக்காக கெஸ்ட் ரோலில் தோன்றினார் சூர்யா.
தற்போது பாலா இயக்கவுள்ள படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
சமீபகாலமாக பாலாவின் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. மேலும் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்த வர்மா படத்தை பாலா இயக்கியிருந்தார். முழுப் படத்தை பார்த்தபின் தனக்கு பிடிக்கவில்லை என தயாரிப்பாளர் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தினார்.
அதன்பின்னர் பாலா படங்கள் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் பாலாவுடன் சூர்யா இணைவது இங்கே கவனிக்கத்தக்கது.
Actor Suriya and director Bala team up again after 2 decades