தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் திடீரென மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது.
எவரும் எதிர்பார்க்காத வகையில் துறைமுகத்தில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் அதிபயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இது ஒட்டுமொத்த பெய்ரூட்டையும் உலுக்கியது எனலாம்.
அந்த பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்த விபத்துக்கு காரணம்…
பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்து தரக்கூடிய வேதிப்பொருள் வெடித்துள்ளது.
மேலும் துறைமுகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களிலிருந்து தீ பரவியது கண்டறியப்பட்டுள்ளது.
கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவுமே அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோர வெடி விபத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது என்ன நடக்கிறது..
வெடி விபத்து நடந்த இடத்தில் இருந்த சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.
இடிந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதாலும் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் பலி எண்ணிக்கை உயரலாம் என லெபனான் அரசு கவலை தெரிவித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த வெடி விபத்து தொடர்பாக லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
“துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் 6 ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஒரு வாரத்துக்கு பெய்ரூட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் 3 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், அவசரக்கால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.500 கோடி) உடனடியாக விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
புகை, இடிபாடுகள் அனைத்தையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் உதவ சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கோர விபத்தினால் பெய்ரூட்டில் இருக்கும் அனைத்து ஆஸ்பத்திரிகளும் விபத்தில் படுகாயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளதாம்.
சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பகுதியுள்ள உள்ள சுமார் 2 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து, வீதியில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மோசமான வேதிப்பொருள் வெடித்துள்ளதால் மக்கள் வெளிக்காற்றை சுவாசிப்பதைத் தவிர்க்குமாறு அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 240 கி.மீ தொலைவில், கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் தீவிலும் இந்த வெடிப்பு உணரப்பட்டு இருக்கிறது.
நிலநடுக்கம் வந்துவிட்டதாக சைப்ரஸ் தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
உலக தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு வெடி விபத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன.
Beirut explosion rocks Lebanons capital city